ஆற்றல் மிக்கது

என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! - திருப்பாடல்கள் 119:105. ஆண்டவருடைய  வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்பின் மிகுதியால் நம் உள்ளத்தை உருகச் செய்கிறது. அவருடைய சொற்கள் நம் நாவுக்கு எத்துணை இனிமையானவை! நம் வாய்க்குத் தேனினும் இனிமையானவை.

அவருடைய வாக்கு நம்மை மீட்பு நோக்கி வழி நடத்துகிறது. நம்மை, பரந்த பாதையில் தடையின்றி நடக்க உதவி செய்கிறது. நமக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. அவருடைய  வாக்கு துன்பத்தில் நமக்கு ஆறுதல் அளிக்கின்றது; ஏனெனில், அது வாழ்வளிக்கின்றது. ஆண்டவரின் வாக்கு என்றென்றைக்கும் உள்ளது. அது அழிவுறாதது.

அவருடைய வார்த்தைகள் நமக்கு சந்தோசமும்,   இதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது.  அந்த வார்த்தைகளை வாசிக்க வாசிக்க அதை நாம் வாழ்வாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நமக்கு  கொடுத்து நமக்கு உயிர் அளிக்கிறது. நிலை வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்கிறது. 

நூற்றுவர் தலைவன் சொல்கிறார்.  ஆண்டவரே ஒரு வார்த்தை சொல்லும் என் ஊழியன் குணமடைவான் என்கிறார். ஆண்டவருடைய வார்த்தை அவ்வளவு ஆற்றல் மிக்கது. அதுவே நம் பாதைக்கு விளக்கும் வெளிச்சமும் ஆகும் .

செபம்: ஆண்டவரே, வார்த்தையானவரே, உம்மை துதிக்கிறோம். ஆற்றல் மிக்க உம் வார்த்தைகளை அனுப்பி எங்களை குணமாக்கும். பூமியை புதுப்பித்தருளும்.  தீங்கு விளைவிக்கும் அனைத்தையும் எங்களை விட்டு அப்புறப்படுத்தி நாங்கள் உமக்குள் சுகமாக, அமைதியாக, பயமின்றி வாழ அருள்புரியும்.  ஆமென்.