திருமண வாக்குறுதி உயிருக்கும் மேலானது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

13 ஜூன் 2025
பொதுக்காலம் 10 ஆம் வாரம் –வெள்ளி
2 கொரி 4: 7-15
மத்தேயு 5: 27-32
முதல் வாசகம்.
அந்தக் காலத்தில், மக்கள் பெரும்பாலும் மதிப்புமிக்க பொருட்களை சாடிகளில் வைத்திருந்தனர். பெரும் செல்வந்தர்கள் தங்கத்தால் ஆன சாடிகளில் தங்கள் விலை உயர்ந்த பொருள்களையும், சாதாரண செல்வந்தர்கள் வெள்ளி அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட சாடிகளையும் பொருள்களை வைக்கப் பயன்படுத்துவது வழக்கம்.
ஆனால், களிமண்ணால் செய்யப்பட்ட சாடிகளை எச்சில் துப்புவதற்கும் இரவில் சிறுநீர் கழிப்பதற்கும் பயன்படுத்துவர். ஆகவே, மண்பாண்டங்கள் மதிப்பற்றவை. இன்றைய வாசகத்தில், பவுல் அடிகள் ‘மண்பாண்டங்கள் போன்ற நாங்கள்’ என்பதன் வழி அவரையும் தமது உடன் உழைப்பாளர்களையும் வெகுவாகத் தாழ்த்திக்கொள்கிறார்.
நிறைவாக, ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே இறைமக்களையும் உயிர்த்தெழச் செய்வார் எனும் இறையியலை வலியுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், விவாகரத்தை அனுமதித்த மோசேயின் சட்டத்தைப் பற்றி இயேசு குறிப்பிடுகிறார். பாவம் எண்ணத்தில் தொடங்குகிறது என்று அவர் கற்பிக்கிறார். எந்தவொரு உடல் ரீதியான தீச்செயலும் நிகழாவிட்டாலும், காம எண்ணங்கள் அல்லது ஆசைகள் சட்டத்தின் விதியை மீறச் செய்கின்றன என்கிறார்.
இது நமது வெளிப்புற நடத்தை மட்டுமல்ல - நமது தீய எண்ணங்களும், ஆசாபாசங்களும் மற்றும் நோக்கங்களும் நம்மை மோகப் பாவத்தில் விழச் செய்யும் என்கிறார் ஆண்டவர்.
மோசே வழங்கிய யூத சட்டத்தில், சான்றிதழ் மூலம் விவாகரத்து அனுமதிக்கப்பட்டது (இ.ச. 24:1), ஆனால் சிலர் அதை அற்ப காரணங்களுக்காக விவாகரத்து செய்ய தவறாகப் பயன்படுத்தினர். திருமணம் புனிதமானது என்றும், விவாகரத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் இயேசு கற்பிக்கிறார்.
சிந்தனைக்கு.
நம்மை மதிப்புமிக்கவர்களாக்குவது நமது வெளிப்புறத் தோற்றமோ அல்லது நமது சொந்த உள்ளார்ந்த மதிப்போ அல்ல என்று பவுல் வலியுறுத்துகிறார். ஏனென்றால் நாம் வெறும் களிமண் பாண்டங்கள்தான். கடவுள் மனித வாழ்க்கையை தெய்வீக வாழ்க்கையால் வளப்படுத்துகிறார். ஆம், நாம் மண் பாத்திரங்கள், கடவுள் நம்மில் வாழ்வதால்தான் நாம் மதிப்புமிக்கவர்களாக மாறுகிறோம். பவுல், ஒரு பக்கம் தன்னையே தகுதியற்ற மண்பாண்டம் என்று சொல்கிற வேளையில், மற்றொரு பக்கம் தன்னுடைய மதிப்பு தனக்குள் இருக்கும் கடவுளின் வல்லமையால் வருகிறது என்று கூறுகிறார். இதை நமது கிறிஸ்தவ வாழ்வுக்குச் சிறந்த அறிவுரையாக எடுத்துகொள்ள வேண்டும்.
நம்மை கடவுள் மதித்து தம் பிள்ளைகளாக ஏற்றாலும், நம்மில் நிலவும் பாவங்களை அவர் பாராட்டுவதில்லை. பாவச் செயலுக்கு வழிவகுக்கும் தீயச் சிந்தனை அல்லது எண்ணமே பாவச் செயலுக்குப் பிறப்பிடமாகிறது என்று இயேசு குறிப்பிடுகின்றார். எனவே, நாம் விபச்சாரம் செய்தால் ஆறாவது கட்டளையை மீறுவது மட்டுமல்ல, ஒருவர் இன்னொருவர் மீது காமம் கொண்டிருந்தாலும் கூட ஆறாவது கட்டளையை மீறுகிறோம் என்பது தெளிவாகிறது.
நம்மில் நாம் கொண்டிருக்கும் சமூக மற்றும் சமய சட்டத்திட்டங்கள் விபச்சாரத்திற்கும் ஒழுக்கம் கெட்ட வாழ்வுக்கும் தடை விதிக்கின்றன. திருமணம் தன்னில் புனிதமானது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டையும் திருமண வாக்குறுதியையும் அது வலியுறுத்துகிறது.
மோகப் பாவம் திருமண வாக்குறுதியை மீறச் செய்கிறது. எனவேதான்’இச்சைப் பார்வையும் எண்ணமும்’ கூடாது என்கிறார் ஆண்டவர். கணவன் மனைவியை, மனைவி கணவரை மதிப்பற்ற வெறும் மண்பாண்டமாகப் பார்ப்பதும் மதிப்பிடுவதும் ஆகாது. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற படிப்பினை கிறிஸ்தவ திருமண தம்பதிகளுக்கு ஒவ்வாது.
இன்று, ஆழ்ந்த ஆன்மீகத்திற்கும் கடவுளின் வார்த்தையை எடுத்துரைப்பதிலும், எளிமைக்கும், அர்ப்பணிப்புக்கும் பெயர் பெற்ற புனித அந்தோணியாரின் விழாவை இன்று கொண்டாடும் நாம் தூய வாழ்வுக்கு அவரை மாதிரியாகக் கொண்டு வாழ முயற்சிப்போம்.
இறைவேண்டல்.
திருமண உடன்படிக்கை வாழ்வின் மேன்மையை வெளிப்படுத்திய ஆண்டவராகிய இயேவே, உமது சேவையில் பயனுள்ள பாத்திரமாக நான் என்றும் நிலைத்திருக்க ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
