நல்ல சீடரின் அழகு காரியத்தில் கருத்தாயிருத்தல்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

7 ஜூன் 2025                                                                                                                  
பாஸ்கா 7-ம் வாரம் –சனி
 
தி.பணி  28: 16-20, 30-31
யோவான் 21: 20-25

  
நல்ல சீடரின் அழகு காரியத்தில் கருத்தாயிருத்தல்!


முதல் வாசகம்.


இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பணிகள் நூல் நிறைவு பெறுகிறது. 


பவுல் அடிகள்  செசாரியாவிலிருந்து  உரோமைக்கு விசாரனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட ஒரு கைதியாக இருக்கிறார். ஆனாலும்,  உரோமையில் அவர் விசாரனை முடியும் வரை சிறையில் அடைக்கப்படாமல்  ஒரு தனி வீட்டில் ஓரளவு  சுதந்திரமாக வீரர்களின்  நடமாட விடப்பட்டிருந்தார்.  மேலும், உரோமையில்  இருந்த கிறிஸ்தவர்களுக்குப் பவுல் அடிகளைத் தெரியாது. அவர்கள் வேறு சிலரால் போதனைப் பெற்று திருமுழுக்குப் பெற்றவர்கள்,  எனவே, பவுல் அடிகள் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள  வேண்டியிருந்தது. 

இதனிமித்தம், பவுல் யூத முதன்மைக் குடிமக்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்கள் வந்து கூடியபின் அவர்களை நோக்கி, “சகோதரரே, நான் நம்முடைய மக்களுக்கு எதிராகவோ, மூதாதையரின் மரபுகளுக்கு எதிராகவோ எதுவும் செய்யவில்லை. எனினும் எருசலேமில் நான் கைதுசெய்யப்பட்டு உரோமையரிடம் ஒப்புவிக்கப்பட்டேன். அவர்கள் என்னை விசாரித்தபோது மரண தண்டனைக்குரிய குற்றம் எதுவும் என்னிடம் காணாததால் என்னை விடுதலை செய்ய விரும்பினார்கள் என்று தன் நிலையை விளக்கினார்.

அவர்களுள் சிலர் பவுல் அடிகள் மீது நம்பிக்கை கொண்டு, அவரை ஏற்றனர்.  


நற்செய்தி.
 
இன்று  யோவான் நற்செய்தியின் இறுதி பகுதிநைத் தொடுகிறோம். நான்காவது நற்செய்தியின் ஆசிரியரான புனித யோவானின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு முக்கிய குறிப்பை வாசிக்கிறோம்.

அன்பான சீடர்: 

இயேசு அன்பு செய்த  சீடர், இந்த நற்செய்தியின் ஆசிரியர் யோவான் என்று பாரம்பரியமாக அடையாளம் காணப்பட்டு வருகிறார்.  கடைசி இராவுணவின்போது  இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, காட்டிக்கொடுப்பவரைப் பற்றிக் கேட்டபோது, இந்தச் சீடர் இயேசுவுடனான நெருங்கிய உறவால் தனித்துவம் பெற்றார். 
நேற்று ஆண்டவராகிய இயேசுவிடமிருந்து ஆடுகளை மேய்க்க வேண்டிய பொறுப்பையும் அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட பேதுரு, இன்று யோவான் வருவதைக் கண்டு, இயேசுவிடம், இவருக்கு என்ன நேரிடவுள்ளது என்று கேட்டார். 

இயேசுவின் பதில்:

“நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா”  என்று இயேசு பதிலளித்தார்.  பிறரைப் பற்றிக் கவலைப்படுவதைவிட்டு,  பேதுரு  இயேசுவைப் பின்தொடர்வதில் கவனம் செலுத்துவதற்கு இயேசு அவரை திசை திருப்புகிறார்.


சிந்தனைக்கு.
 

யோவான் நற்செய்தியின் இறுதிப் பகுதிக்கும், உயிர்ப்புக் காலத்தின் இறுதி நாளுக்கும் நாம் வந்துவிட்டோம். நாளை பெந்தகோஸ்து  பெருவிழா.  இயேசுவின் அன்பு சீடர் என்று அழைக்கப்பட்ட யோவானும், தமது நற்செய்தியை இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்’ என்று நமது நற்செய்தியை நிறைவு செய்கிறார். யோவான் கூறியதை, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், புனித யோவானும், மற்ற நற்செய்தியாளர்களைப் போலவே, இயேசுவைப் பற்றிய  முக்கிய இறையியல் செய்திகளை மட்டுமே தேர்ந்தெடுத்து, அவருடைய சமூகத்திற்கு  எழுதினார் என்று பொருள் கொள்ளலாம்.  


இன்றைய நற்செய்தியில், பேதுரு  இந்த அன்பு சீடரைத்தான் (யோவானை) சுட்டிக்காட்டி,  இயேசுவிடம்  'இவருக்கு என்ன ஆகும்?'  எனக் கேட்கின்றார். இயேசுவோ, அந்த கவலை உமக்கு வேண்டாம் என்பது போல்,  'உனக்கு என்ன?' என்று கேட்டுவிட்டு, 'என்னைப் பின்தொடர்' என்கிறார். இது நம்மை கவர்ந்த ஒரு பகுதியாக உள்ளது. 

நாம் வழக்கமாக   நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படத்தான் விரும்புவோம். இயேசுவின் பதிலைக் கேட்டு பேதுரு சற்று கவலைப்படிருக்கலாம். இயேசு பேதுருவை உதாசினப்படுத்தியதாகவும் தோன்றியிருக்கலாம்.  யோவான் இயேசுன் அன்பு சீடர் என்பதால் இயேசு அவருக்கு முன்னிரிமை அளிப்பதாவும் பேதுரு உணர்ந்திருக்கலாம். 

ஒரு கண்ணில் வெண்ணெய் – மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது இயேசுவில் இல்லை.  ஆண்டவர் பாரபட்சமற்றவர்.  அவருக்குப் பணிந்து நேர்மையாக வாழ்வோர் அனைவரையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் (தி.ப.10:35). யோவான் இயேசுவின் அன்பு சீடர் என்பதை யோவான் நற்செய்தியில் மட்டுமே காண்கிறோம் (13:23). இங்கே யோவான் தமது தனித்தன்மையை வெளிப்படுத்த இவ்வாறு எழுதியும் இருக்கலாம். உணமையில் இயேசுவின் சீடத்துவத்தில் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடில்லை. 

இயேசுவின் உண்மை சீடர்கள் என்ற வகையில் நம்மைப் போன்று,   மற்றவர்களும் வளர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாம் மறைப்பணியில் ஈடுபட வேண்டும். திருஅவையில் நம்மைச் சுற்றியிருக்கும் சீடரின் வளர்ச்சி குறித்து பொறாமை எழுமானால், இயேசுவின் சீடத்துவத்திற்கு  நாம் தகுதியற்றவர்களாகி விடுவோம். சீடத்துவம் என்பது  ஒரு குழுமம். யாருக்கு எதை தரவேண்டும், எப்போது தர வேண்டும் என்பது கடவுளின் விருப்பத்திற்கு உட்பட்டது. இங்கே பாகுபாட்டிற்கும், அந்தஸ்துக்குமிடமில்லை. 

பேதுருவைப் போலத்தான் நாம்  அடிக்கடி நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோம். ஆனால் அவ்வாறு ஒப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல. இதைதான்  இயேசு பேதுருவிடம் கூறினார். யோவான்  எப்படி இறப்பார் என்பது பேதுருவின் எண்ணமாக இல்லாமல்,  பேதுரு இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து  பணியைத் தொடர வேண்டும் என்பதே இயேசுவின் அறிவுரை.

‘எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ (மத் 20:15) என்று இயேசு நம்மை கேட்கும்படி இருந்தால் அது சீடத்துவத்திற்குப் பொருந்தாது. வீண் பேச்சும், அதிகப் பிரசங்கித்தனமும் உயர்வுக்கு உதவாது.  இடம், பொருள், ஏவல் அறிந்தும் கருத்துரைப்பது இன்றியமையாதது. 

இறைவேண்டல்.

‘நீ என்னைப் பின்தொடர்ந்து வா’ என்று பேதுருவுக்கு அழைப்புவிடுத்த ஆண்டவரே. இவ்வுலக காரியங்களில் எனது கவனத்தைச் செலுத்தி தளர்ந்து போகாமல் உமது நற்செய்திப் பணிக்கு முழுமையாக என்னை அர்ப்பணிக்க உமது ஆற்றலால் என்னைத் திடப்படுத்தியருள்வீராக. ஆமென்

   

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452