மதங்களுக்கு இடையே பாலம் அமைக்கும் இந்திய அருள்பணியாளர் | Veritas tamil
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு (FABC), "இணைந்து பயணிக்கும் திருஅவைக்கான மனமாற்றமும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலம் அமைப்பவர்களாகவும் செயல்படும் திருப்பணியும்" என்ற கருப்பொருளில் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள அதன் பொதுப் பேரவைக்குத் தயாராகி வரும் வேளையில், இந்திய அருள்பணியாளர் அருள்பணி எம். டி. தாமஸ் அவர்களின் வாழ்வும் பணியும், அந்த நோக்கத்தின் வாழும் சாட்சியாகத் திகழ்கிறது.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே உரையாடல், கல்வி மற்றும் நேரடி சந்திப்புகள் மூலம் நல்லிணக்கப் பாலங்களை அமைப்பதற்காக அருள்பணி தாமஸ் தன்னை அர்ப்பணித்துள்ளார். பல்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒன்றாக வாழும் ஆசியாவில், பிளவுகளால் அல்ல, மாறாக ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல், மரியாதை மற்றும் நட்புறவின் வழியே நிலையான அமைதி உருவாகும் என்ற நம்பிக்கையை அவரது பணி பிரதிபலிக்கிறது.
அருள்பணி தாமஸ் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். புனித தோமையார் மறைப்பணியாளர் சபையின் (Missionaries of St. Thomas – MST) முதல் உறுப்பினர்களில் ஒருவராக இருந்ததோடு, இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கிறிஸ்தவ அருள்பணியாளராகவும் திகழ்ந்தார். மேலும், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CBCI) சமய நல்லிணக்க ஆணையத்தின் முதல் தேசியச் செயலாளராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார்.
2014 முதல், புதுடெல்லியில் இயங்கும் நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆய்வு நிறுவனம் (Institute of Harmony and Peace Studies – IHPS) என்ற அமைப்பின் நிறுவனர்-இயக்குநராக 73 வயதான அருள்பணி தாமஸ் பணியாற்றி வருகிறார்.
இந்தக் காலகட்டத்தில், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம், சமணம், பகாய், யூதம், அகமதியா மற்றும் பிற மத மரபுகளைப் பின்பற்றும் மக்களிடையே நல்லுறவை வளர்ப்பதற்காக அவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார்.
"மதத்தின் பெயரால் வெறுப்பும் கொலைகளும் நடைபெறும் இன்றைய உலகில், பல்வேறு மதங்களுக்கு இடையேயான உரையாடலே காலத்தின் அவசியமாக உள்ளது," என்று அருள்பணி தாமஸ் கூறுகிறார்.
"பல ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வரும் நல்லிணக்க மற்றும் அமைதிப் பணி எனக்கு மகிழ்ச்சியையும், இந்தப் பணியின் இறைமூலத்தோடு என்னை ஒன்றிணைத்தும் வைத்திருக்கிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Fratelli Tutti திருமடல் இந்த நோக்கத்தை மிகவும் வலியுறுத்துகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
அவரது பணி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சமயங்களுக்கிடையேயான உரையாடல் குறித்த பார்வையை பிரதிபலிக்கிறது. 2019-ஆம் ஆண்டு அபுதாபியில், அல்-அஸ்ஹர் தலைமை இமாம் ஷேக் அகமது எல்-தயீப் அவர்களுடன் இணைந்து, உலக அமைதி மற்றும் இணைந்து வாழ்வதற்கான மனித சகோதரத்துவ ஆவணத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டது, இந்த நோக்கத்தின் முக்கிய வெளிப்பாடாகும்.
தமது பணிக்கான அடித்தளத்தைப் பற்றி பேசுகையில், தனது குடும்ப வளர்ப்பிற்கே அதற்கான பெருமை சேரும் என அருள்பணி தாமஸ் கூறுகிறார்.
"கிறிஸ்தவ சமூகத்தின் பரந்த நலனுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் எனக்குள் உருவானது. அதற்கு என் குடும்ப வளர்ப்பே காரணம்," என்றார்.
பள்ளிப் படிப்பை முடித்த அவர், 1969-ஆம் ஆண்டு குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பயின்ற காலத்திலேயே சமய நல்லிணக்கத்திற்கான அவரது அர்ப்பணிப்பு வலுப்பெற்றது.
பின்னர் மத்திய இந்தியாவில் அருள்பணியாளராகப் பணியாற்றியபோது, பல்வேறு மதங்களையும் சிந்தனைகளையும் சேர்ந்த மக்களைச் சந்தித்தார். இந்தி மொழியில் தமக்கிருந்த குறைந்த அறிவு தனது பணிக்குத் தடையாக இருப்பதை உணர்ந்த அவர், இந்தி இலக்கியத்தில் சிறப்புப் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.
"மறைப்பணியின் தேவைகளை உணர்ந்த நான், பல்வேறு வாய்ப்புகளை ஒதுக்கிவைத்து இந்தி இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற முடிவு செய்தேன்," என்று அவர் நினைவுகூர்கிறார்.
இந்தி மொழி அறிவு, உள்ளூர் மக்களுடன் நெருக்கமாக பழகுவதற்கு அவருக்கு உதவியது. அக்காலத்தில், பல சமயங்களைச் சேர்ந்தோரின் பக்திப் பாடல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ததோடு, பள்ளி மாணவர்கள் கிராமப்புறக் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்பிக்கும் எழுத்தறிவு இயக்கத்தையும் தொடங்கினார்.
பின்னர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, அந்தப் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் கிறிஸ்தவ அருள்பணியாளராக உயர்ந்தார். "எனது ஆய்வு 'கபீர் மற்றும் கிறிஸ்தவத் தத்துவம்' பற்றியது," என்று அவர் தெரிவித்தார்.
15-ஆம் நூற்றாண்டின் கவிஞரும் ஞானியுமான கபீர் அவர்களின் போதனைகளையும் கிறிஸ்தவத் தத்துவத்தையும் ஒப்பிட்டு, இரு மரபுகளிலும் காணப்படும் பொதுவான ஆன்மிக மதிப்புகளை அவரது ஆய்வு எடுத்துக்காட்டியது.
1994-ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற பின்னர், சமயம் மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராகத் திரும்பிய அவர், சமயங்களுக்கிடையேயான உரையாடல், பண்பாட்டு பரிமாற்றம், பன்மொழிக் கல்வி மற்றும் பல்துறை ஆய்வுகளை ஊக்குவித்தார்.
பின்னர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உருது மொழியையும் பயின்றார். இதன் மூலம் முஸ்லிம் சமூகத்தினருடன் மேலும் ஆழமான தொடர்பை ஏற்படுத்த முடிந்தது.
இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் சமய நல்லிணக்க ஆணையத்தின் தேசியச் செயலாளராக நியமிக்கப்பட்டது, இந்தியாவின் பல்வேறு சமய மக்களிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான விரிவான வாய்ப்பை அவருக்கு வழங்கியது.
அவரது முனைவர் ஆய்வு பின்னர் "கபீர் ஓர் ஈசாயி சிந்தன்" (Kabir aur Eesaayee Chintan) என்ற இந்தி நூலாக வெளியிடப்பட்டு, இந்தி அகாடமியின் "சாகித்யிக் க்ரிதி சம்மான்" விருதைப் பெற்றது.
திருப்பணிக்கு அப்பாலும், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேருரைகள் நிகழ்த்தியுள்ளார். கல்வி மாநாடுகள், சமய நல்லிணக்கக் கூட்டங்கள், குடிமக்கள் அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். பல முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாக இருந்ததோடு, பல கல்வி நிறுவனங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
சமயங்களுக்கிடையேயான உரையாடல், சமய நல்லிணக்கம் மற்றும் அமைதிக் கட்டமைப்பு குறித்து ஆங்கிலத்தில் ஏழு நூல்களும், இந்தியில் ஐந்து நூல்களும் என மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், இரண்டு இசைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
ஆசியாவில் திருஅவை எவ்வாறு சிறந்த "பாலம் அமைப்பவராக" மாற முடியும் என்பதைப் பற்றி FABC சிந்தித்து வரும் இந்தச் சூழலில், அருள்பணி எம். டி. தாமஸ் அவர்களின் வாழ்வும் பணியும் அந்த அழைப்பின் உயிரோட்டமிக்க சாட்சியாக விளங்குகிறது. கல்வி, ஆய்வு, உரையாடல் மற்றும் பல தசாப்தங்களாக பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுடன் பொறுமையுடன் கட்டியெழுப்பிய உறவுகள் மூலம், புரிதல் சந்தேகத்தை வெல்லவும், அமைதி மலரவும் வழிவகுக்கும் பாலங்கள், ஒவ்வொரு உறவின் வழியாகவே கட்டப்படுகின்றன என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார்.