வசந்தவாழ்வு ஒப்பீடு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.03.2025

பசியறிந்து சோறு போட
ஒருவர் இருக்கும் வரை.

சாப்பிட்டாயா எனக் கேட்க 
ஒருவர் இருக்கும் வரை.

தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க
ஒருவர் இருக்கும் வரை.

நோய் வந்தால் இரவுகளில் 
கண் விழித்துப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கும் வரை.

குரல் மாறுபாட்டில் மன நிலையைக் கணிக்க
ஒருவர் இருக்கும் வரை.

போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என 
வழியனுப்ப 
ஒருவர் இருக்கும் வரை.

வீட்டைக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் இருக்கும் வரை.

தோற்றுப் போய் திரும்புகையில் 
தோள் சாய்த்துக் கொள்ள 
ஒருவர் இருக்கும் வரை.

போ என்றாலும் விட்டுப் போகாது
சண்டை போட்டுக் கொண்டேனும்
உடனிருக்க
ஒருவர் இருக்கும் வரை.

மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள 
ஒருவர் இருக்கும் வரை.

நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க
ஒருவர் இருக்கும் வரை.

எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக் கொடுக்காத
ஒருவர் இருக்கும் வரை.

கூட்டத்தின் நடுவே தனித்துப் போகையில் கரங்கள் பற்றி
நானிருக்கிறேனென உணர்த்த
ஒருவர் இருக்கும் வரை.

தவறுகளைத் தவறென சுட்டிக் காட்டித் திருத்தும் 
ஒருவர் இருக்கும் வரை.

துயர் அழுத்தும் கணங்களில்
அருகிருந்து கண்ணீர்த் துடைக்க
ஒருவர் இருக்கும் வரை.

மனக் குறைகளைப் புலம்பித் தள்ளுகையில் காது கொடுத்துக் கேட்க 
ஒருவர் இருக்கும் வரை
மட்டுமே.

வாழ்வு வசந்தமானது!

இன்று நாங்கள் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து எம் மக்களுக்கு நற்ச்சிந்தனையும் நல்லோழுக்கமும் சகிப்புத்தன்மையும் கிடைக்கவும் எம் திருத்தந்தை பிரான்சிசு அவர்களுக்கு உடல் உள்ள சுகத்துடன் நெடுவாழ்வு வாழவும் நிறைவாய் அருள் தாரும் எம் இறைவா.

மரியே வாழ்க

சாமானியன் 
ஞா சிங்கராயர் சாமி 
கோவில்பட்டி