அறங்காக்க அன்போடு பழகுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

அன்பீனும் ஆர்வ முடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு (74)
பழகும் ஆர்வத்தை அன்பு உண்டாக்கும்; அது நட்பு என்னும் சிறப்பினைத் தரும்.
அந்த ஊருக்கருகில் இருந்த ஏரிக் கரையில் முதலை ஒன்று தனக்காக விரிக்கப்பட்ட வலைக்குள் சிக்கிக் கொண்டது. கதறியது, கண்ணீர் வடித்தது, கண்டுகொள்வார் யாருமில்லை,
சிறுவன் ஒருவன் அவ்வழியே வந்தான். இரக்கம் கொண்டான். தனக்கோர் ஏமாளி சிக்கிக் கொண்டான் என்று எண்ணியது முதலை. தப்பிப்பதற்கான திட்டத்தை முதலில் தீட்டியது.
அந்தச் சிறுவனிடம் கெஞ்சியது; "தம்பி உன் கையிலுள்ள கத்தியைக் கொண்டு இந்த வலையை அறுத்து விடுப்பா".
"உன்னைப் பார்க்கப் பாவமாகத்தான் இருக்கிறது; ஆனால், இரக்கப்பட்டு வலையை நான் அறுத்து விட்டால், நீ என்னைக் கவ்வி விழுங்கிவிடுவாயே?" என்றான் சிறுவன்.
"ஐயய்யோ! அப்படியெல்லாம் நான் செய்வேனா, எனக்கு உதவி செய்கிற உன்னை நான் விழுங்குவேனா? காலமெல்லாம் உனக்கு நன்றியுள்ளவனாய் இருப்பேன்" என்றது முதலை.
நம்பினான் சிறுவன். கத்தியால் வலையை அறுத்தான். விடுதலையான முதலை, சிறுவனின் காலை வாயால் கவ்விக் கொண்டது. அதிர்ந்து போனான் சிறுவன்.
"உன்னைக் காப்பாற்ற எண்ணிய என்னை நீ விழுங்குவது அறமா?" கத்தினான். நீதிக்காகப் போராடினான்.
"ஆமாம்! நான் செய்யுறது சரிதான். இதுதான் நியாயம்; வேணும்னா வேற யாரிடமாவது கேட்டுப் பாரு?"
எலி ஒன்று வந்தது, "முதலை சொல்றதுதான் நியாயம்" என்றது. "நாங்க துள்ளித் திரிந்து விளையாடிக் கொண்டிருப்போம், பூனை வந்துச்சுன்னா எங்களைக் கடித்து விழுங்கிவிடும். இந்த நியாயத்த ஏற்றுக்கொள்ளத்தான் வேணும்,"
தவளையும் சொன்னது: "நுணலும் (தவளையும்) தன் வாயால் கெடும் என்கிறாங்க. நாங்க குழந்தை குட்டிகளோட சிரித்துப் பேசி மகிழ்ந்து கொண்டிருப்போம். பாம்பு வரும் 11 எங்களை விழுங்கிச் சாப்பிட்டு விடும். அதுதான் நடைமுறை,"
காக்கா பறந்து வந்து உரைத்தது. "நாங்க முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து' பாதுகாத்து வருவோம். உன்னைப் போன்ற சிறுவர்கள் மரத்துல ஏறி எடுத்துட்டுப் போயிடுவாங்க. இதுதான் உலகம், என்ன பண்றது?" 'காக்கா முட்டை' என்னும் ஒரு திரைப்படம் கூட வெளிவந்திருக்கு.
"ஐயோ... இல்ல... இது நியாயம் இல்ல... எல்லாரும் பொய் சொல்றீங்க, உதவி செய்கிறவரையே விழுங்லுவது அரக்கத்தனம்" என்றான் சிறுவன்.
அச்சமயம் அங்கே பாய்ந்து வந்த முயல் சொன்னது: "முதலை செய்வது நியாயமில்ல,தர்மமில்ல... அநியாயம்."
முதலைக்குக் கோவம் வந்தது.'மற்றவங்களுக்கு எல்லாம் நியாயமாத் தெரிவது உனக்கு ஏன் அநியாயமாத் தெரியுது?" என்று கத்தியது.
'அந்தச் சிறுவனின் காலை முதல்ல விடு' நான் சொல்றேன்," என்றது முயல்.
"சிறுவன் ஓடி விடுவானே..." என்றது முதலை.
"அவன் ஓட முயலும் போது நீ தான் உன் வாலைக் கொண்டு மடக்கிப் பிடித்து விடலாமே?" என்றது முயல்.
முதலை ஒப்புக்கொண்டது. சிறுவனின் காலை விட்டது.
முயல் சொன்னது. "தம்பி, நீங்க ஓடிவிடுங்க."
சிறுவன் ஓடினான். முதலை தன் வாலை இழுக்கப் பார்த்தது. முடியவில்லை. முட்டாள் முதலைக்கு அப்பொழுதுதான். தெரிந்தது. தன் வால் இன்னும் வலைக்குள் என்று.
"உதவி செய்ய வந்தவரை அழிக்க எண்ணுவது சாவுக்குரிய குற்றம். ஆன்மீக மொழியில் அது சாவான பாவம்." முயல் அறிவுரை சொன்னது.
ஊர் மக்கள் ஓடி வந்தனர். சிறுவன் சொன்னதைக் கேட்டு முதலை மேல் கோவம் கொண்ட அம் மக்கள் முதலையை அடி அடியென அடித்துக் குற்றுயிராக்கினர்.
அங்கே நின்று கொண்டிருந்த நாய் ஒன்று கதாநாயக முயலைப் பார்த்தது, குரைத்தது. முயல் ஓடியது. நாய் விரட்டியது.
சிறுவன் கலக்கம் அடைந்தான். "முயலைக் காப்பாற்றுங்க" என்றான்.
மக்கள் சொன்னார்கள்: "விடு தம்பி. இதுதான் வாழ்க்கை. முயலை நாய் பிடிப்பதுதான் நியாயம்."
"இல்லை, இது அறம் இல்லை". ஓடினான், நாயை விரட்டிக் கொண்டே, தன்னைக் காப்பாற்ற அந்த நல்ல உள்ளம் விரைந்து வருவதைப் பார்த்த முயல் நின்று, நாயை எதிர்த்தது. நாய் அதிர்ச்சிக்குள்ளானது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஒரு காலத்தில் வேட்டை நாயை எதிர்த்து நின்ற முயலைப் பற்றி தான் படித்த வரலாறு சிறுவனின் நினைவுக்கு வந்தது. நண்பன் முயலின் வீரத்தை, துணிவை எண்ணி வியந்து கொண்டே கல்லெடுத்தான்.
சிறுவன் எறிந்த கல் நாயின் காலைப் பதம் பார்த்தது. "லொள்... லொள்"..." என்றவாறே நொண்டியடித்து ஒடியது நாய்.
"தம்பி நீ வாழ்க! உன் அறம் வாழ்க! அறம் காக்க ஊக்கம் இழக்காதே...இம் மண்ணில் அறத்தை வளர்க்க உன்னால் தான் இயலும்" என்று வாழ்த்தியது முயல்.
அண்ணே, உங்க அன்பு என்னை உங்களுக்குத் தம்பியாக்கியது. உங்கள் நட்புக்கு நன்றி. ''இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க! தென் மதுரை வைகை நதி...." பாடி மகிழ்ந்தனர்.
Daily Program
