தனிமையில் விளைந்த் ஞானம் | அருட்சகோதரி பிரைடா |Veritas Tamil

தனிமையில் விளைந்த் ஞானம்
சில ஆண்டுகளுக்கு முன் கவலையோடும் வேதனையோடும் வாழ்வோடு போராடிக் கொண்டிருந்த ஓர் கைபெண்ணை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து, எப்படி இருக்கிறீர்கள்? வாழ்வு எப்படி போகின்றது என்று உரையாடியபோது அவர் கூறிய வார்த்தைகள் உள்ளத்தை மெருகேற்றியது.
அப்பா அம்மா அக்கா அண்ணன் தம்பி என்ற அன்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், திருமணம் எனது மகிழச்சியான வாழ்வையும், எதிர்காலத்தையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. குடிகார கணவனோடு தினம் தினம் நரகவேதனை. பெற்றோரும் கைவிட்டனர். இரண்டு மாத கைகுழந்தையோடு வாழ்வா? சாவா? என போராடிக்கொண்டிருந்தேன். எங்கு பார்த்தாலும் தனிமை. உலகில் ஆயிரம் கோடி மனிதர்கள் இருந்தாலும் எனக்கென்று யாருமில்லையே என்ற வருத்தம் அவரை வெகுவாக பாதித்தது. தனியாக வாழ்வதென்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை. அந்த இக்கட்டான சூழலில் தான், சாவே சரியான முடிவு என்னும் நிலைக்கு வந்தேன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த போது, எனது இரண்டு மாத குழந்தை என் கண்ணத்தை வருடினாள். அப்போது நான் என் குழந்தைக்காக வாழவேண்டும் என முடிவை எடுத்தேன். அதற்கு தனிமையை ஆயுதமாக்கினேன். தனிமையை ரசிக்க ஆரம்பித்தேன். தனிமை என்னும் மென்காற்றின் வாசம் புது வாசலை திறந்தது. என் தனிமையே என்னுடைய மனபலத்தில் புதுவண்ணம் தீட்டியது. இன்று நான், நானாக இருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக கூறினார். இந்த பெண்ணின் வார்த்தைகள் என்னை சிந்திக்க தூண்டியது. தனிமை ஒருமனிதரின் வாழ்வை இப்படி மாற்ற முடியுமா? என்று உணர்ந்தேன்.
ஆம் தனிமை வெறுமையல்ல…தனிமை அச்சமல்ல….தனிமை துன்பமல்ல
மாறாக, தனிமை….
தன்-நிலை உணர்த்தும் கண்ணாடி
பயத்தின் முகத்திறையை அகற்றி
அடிமனதில் முடங்கி இருக்கும்
தனித்தன்மையை உசுப்பிவிடும் தீபொறி.
மப்பும் மந்தாரமுமாய், கூட்டத்தோடு கூட்டமாய் பயணிக்கும் நமக்கு
நமது பிறப்பின் குறிக்கோளை கூர்மைப்படுத்தும் உளி.
தனிமையை கண்டு அச்சி ஓடுவதை விட்டுவிட்டு தனிமையை தளுவிக்கொண்டால்
தரணிக்கே தலைவனாகலாம் என்னும் உண்மையை உரக்கச் சொல்லும் எதிரொலி
காரணம் தனிமை ஓர் மனிதனை விலங்கிடும் சங்கிலி அல்ல…
சரித்திரம் படைக்க தூண்டும் குரலொலி
தனிமை கருவறையை மீண்டுமாய் காணும் ஓர் அகப்பயணம்.
தனிமை சாபமா? வரமா?
தனிமை சாபமுமல்ல வரமுமல்ல. மனிதர்களாகிய நமக்கு வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் சிறந்த ஆசான்;. நிறை குறைகளோடு நம் வாழ்வை உயரத்திற்கு கொண்டு செல்ல உதவும் நண்பன். தனிமையை தள்ளி வைக்காமல் நம்பிக்கையோடு நடைபயில்வோம்.
நம்மை நாம் நம்புவோம்…..தனிமையை தழுவுவோம்….ஞானஉளியால் ஆன்ம ஒளிபெறுவோம்.
எழுத்து
அருட்சகோதரி பிரைடா
Daily Program
