சினோட் மண்டபத்தில் நடைபெற்ற கார்டினல்களின் இரண்டாம் பொது சபை கூட்டம்.

திருத்தந்தை பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள sede vacate-ன் போது கார்டினல்கள் கல்லூரி தயாரிப்புகளைத் தொடர்ந்து வருவதால், கார்டினல்களின் இரண்டாவது பொது சபை கூட்டம் 23 புதன்கிழமை மாலை 5:00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 8:30) சினோட் மண்டபத்தில் கூடி மாலை 6:30 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:00) நிறைவடைந்தது .

103 கார்டினல்களுடன் கலந்து கொண்ட இந்த அமர்வு பாரம்பரியமாக பரிசுத்த ஆவியானவரின் ஜெபத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க சபையில் கலந்து கொள்ளாத கார்டினல்கள் இந்த அமர்வில் கலந்துகொண்டனர்.

புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் முக்கிய நிகழ்வில், திருத்தந்தை ஒருவரின் மறைவுக்குப் பிறகு அனுசரிக்கப்படும் ஒன்பது நாள் துக்கக் காலமான நோவெம்டியல்ஸ் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தில் ஊறிப்போன இந்த விரிவான நிகழ்ச்சித்திட்டம், திருத்தந்தை பிரான்சிஸை கௌரவிக்கும் வகையில் நடத்தப்படும் வழிபாட்டு முறை மற்றும் நினைவு அனுசரிப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. அடுத்த பொது சபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 9:00 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 12:30) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் சபைக் கூட்டத்தில், புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் தனிப்பட்ட முறையில் அவர்களை அங்கீகரிக்கும் வரை, திட்டமிடப்பட்ட அனைத்து புனிதர் பட்டமளிப்புகளையும் நிறுத்தி வைப்பதாக கார்டினல்கள் தீர்மானித்தனர். அப்போஸ்தலிக்க அரசியலமைப்பு யுனிவர்சி டொமினிசி கிரெகிஸின் படி , இடைக்காலத்தின் போது திருச்சபையை நிர்வகிப்பதில் கேமர்லெங்கோவுக்கு உதவ மூன்று கார்டினல்களைக் கொண்ட ஒரு ஆணையமும் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கார்டினல்கள் கல்லூரியின் மூன்று பிரிவுகளில் ஒவ்வொன்றையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த உறுப்பினர்கள் கார்டினல் பியட்ரோ பரோலின் (எபிஸ்கோபல்), கார்டினல் ஸ்டானிஸ்லாவ் ரைல்கோ (பிரஸ்பைடரல்) மற்றும் கார்டினல் ஃபேபியோ பாகியோ (டயகோனல்). இந்த மூவரும் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் மாற்றப்படுவார்கள்.

இதற்கிடையில், புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள். புதன்கிழமை மாலை 7:30 மணிக்கு (IST இரவு 11:00 மணி) சுமார் 20,000 பேர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இது மறைந்த திருத்தந்தை பிரான்சிஸின் மீதான ஆழ்ந்த உலகளாவிய பாசத்தையும் மரியாதையையும் பிரதிபலிக்கிறது.