ஆண்டவரே நம் அடைக்கலப் பாறை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

1 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 13 ஆம் வாரம் – செவ்வாய்
தொடக்க நூல் 19: 15-29
மத்தேயு 8: 23-27

 
ஆண்டவரே நம் அடைக்கலப் பாறை!
 
முதல் வாசகம்.

 நேற்றைய வாசகத்தில், ஆபிரகாம் தனது சகோதரனின் மகன் லோத்து  மற்றும் லோத்தின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக கடவுளிடம் பேரம் பேசியதை  கேட்டோம். இவ்வாறு, ஆபிரகாமின் நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியின் காரணமாக, லோத்து மற்றும் அவரது குடும்பத்தினர் பாவம் நிறைந்த நகரங்களை  அல்லது சமவெளிகளை விட்டு வெளியேற கடவுள் அனுமதிக்கிறார். 

சோதோம் மற்றும் கொமோராவுக்கு ஏற்படவிருக்கும் அழிவைத் திரும்பிப் பார்க்க வேண்டாம் என்றும் ஆண்டவர் அவர்களை எச்சரிக்கிறார்.   லோத்தின் மனைவி வெளியேறும் போது, கடவுளின் எச்சரிக்கையை மீறி திரும்பி பார்த்ததால், அவள் உப்புத் தூணாக மாறுகிறாள்.  கடவுள் அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும், நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். ஆபிரகாமின் பரிந்துரையால் லோத்து அழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்.

நற்செய்தி.

நற்செய்தியில்,   இயேசு தனது சீடர்களுடன் கலிலேயாக் கடலுக்குச் செல்கிறார். இயேசு ஒரு படகில் ஏறிய பிறகு, அவர் விரைவாக தூங்கிவிடுகிறார். சீடர்கள் கடலைக் கடந்து பயணிக்கும்போது, திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. பெரும் அச்சத்தால்  சீடர்கள் இயேசுவை எழுப்பி ஏதாவது செய்யும்படி வேண்டுகிறார்கள்.  எதையும் செய்வதற்கு முன், இயேசு அவர்களின் நம்பிக்கையின்மைக்காக அவர்களை, நோக்கி, “நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டவாறு,  கடலை அமைதிப்படுத்துகிறார், உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று.
மக்கள் எல்லாரும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?” என்று வியந்தனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

சீடர்கள் இயற்கையின் மீது இயேசுவின் வ்லமையைக் கண்டு ஆச்சரியப்பட்டு, " இவர் எத்தகையவரோ?” என்று வியப்பில் ஆழ்ந்துபோனார்கள்.   இதுவரை வெறும் போதகராகக் கண்ட இயேசுவின் வல்லமையானது கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை சீடர்கள் உணரத் தொடங்கினர். 

இயேசுவின் தெய்வீக அதிகாரத்தையும், அச்சங்கள் நம்மை ஆழ்ந்தும் காலங்களில் அவர் மீது கொள்ளும் நம்பிக்கையின் பலனையும், குழப்பத்தின் மத்தியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான அவரது ஆற்றலையும் நற்செய்தி வாசகம் எடுத்துக்காட்டுகிறது. நமது அன்றாட வாழ்க்கைப் பயணமும் ஒரு கடல் பயணம்தான். கடலில் அமைதியும் இருக்கும் கொந்தளிப்பும் இருக்கும். தென்றலும் இருக்கும் சூறாவளியும் இருக்கும்.  

அவ்வாறே, நமது இந்த உலகப் பயணம் என்பது பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான போராட்டம்தான்.  இப்போராட்டம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். இதற்கு பயந்து ஓடி ஒளிய முடியாது.  புனித பவுல் ‘நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன்’ ( 2திமொ 4:7) என்று பெருமிதம் கொள்வார். 

புயலில் தந்தளித்தப் படகில் இயேசு நிம்மதியாகத் தூங்க முடிந்தது என்பது  நினைவிற்கு வருகிறது. இயேசு தம்முடைய தந்தையின் பாதுகாப்பை நம்பினார். அவ்வாறே சீடர்களுக்கும் தம்மிடமும் தம்முடைய தந்தையிடமும் அதேபோன்ற அசைக்க முடியாத நம்பிக்கை இல்லாததற்காக தம் சீடர்களைக் கடிந்துகொள்கிறார். 

முதல் வாசகத்தில், அழிவு நேரிடும் வேளையில் ஆபிரகாம்  கடவுளின் மீது பற்றுறுதி கொண்டு  லோத்தையும் அவரது குடும்பத்தையும் விடுவிக்க மன்றாடும்போது, கடவுள் செவியாத்தார்.  நற்செய்தியில்,  இயேசு புயலையும் கடலையும் மட்டுமல்ல, படகில் தன்னுடன் இருந்த சீடர்களின் பயத்தையும் அமைதிப்படுத்தி, விடுவிக்கிறார். கிறிஸ்துவின் சீடர்களாகிய நமது  வாழ்வில் "நம்பிக்கை பயத்தை விரட்ட வேண்டுமேயொழிய  பயம் நம்பிக்கையை  விரட்டுவதாக அமையக்கூடாது. 

தம் மகன் கொடூரமாக உயிர்விடும் வேளையிலும்,  கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்தவராக துணிவுடன் சிலுவையடியில் நின்றார் அன்னை மரியா. 

பல சந்தர்ப்பங்களில் நாம் தான் நம்பிக்கையில் தளர்ந்தவர்களாக ‘உறங்குகிவிடுகிறோம். அவர் நம்மைப் பார்க்கிறார், எப்போதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், அதனால் எதுவும் அவருடைய கவனிப்பிலிருந்து தப்பிக்க முடியாது. அவர் நமது அடைக்கலப் பாறை. “ நீரே என் புகலிடம்; நீரே என் கேடயம்; உமது வாக்கில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்” (திபா. 119:114) என்று வாழ்வோரை அவர் என்றும் கைவிடுவதில்லை.  கடவுளை நம்பினார் கைவிடப்படார் என்பதையும்  ‘நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது’ (எபி 11:6)  என்பதையும், நிறைவாக. “நீ ங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்” (மத் 11:22) என்று இயேசு அளித்த உறுதிமொழியையும் மனதில் கொள்வோம்.

இறைவேண்டல்.

‘அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்’ என்றுரைத்த ஆண்டவரே, உம்மில் நான் என்றும் பற்றுறுதிக் கொண்டு வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452