ஆண்டவர் நமக்கும் கேடயமாக இருக்கிறார்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

25 ஜூன் 2025
பொதுக்காலம் 12 ஆம் வாரம் –புதன்
தொடக்க நூல் 15: 1-12, 17-18
மத்தேயு 7: 15-20
ஆண்டவர் நமக்கும் கேடயமாக இருக்கிறார்!
முதல் வாசகம்.
இன்றைய தொடக்க நூல் வாசகமானது, கடவுள் ஆபிரகாமுடன் ஓர் உடன்படிக்கை செய்ததை எடுத்துரைக்கிறது. இந்த உடன்படிக்கை அடிப்படையில் ஒரு முக்கிய நிபந்தனையைக் காண்கிறோம். ஆபிரகாம் கடவுள் கட்டளையிடுவதற்கு ஏற்ப நடந்துகொண்டால், அவர் ஆபிரகாமையும் அவரது வழிமரபினரையும ஆசீர்வதிப்பார், மேலும் அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை சொந்தமாகக் கொண்ட ஒரு பெரிய இனத்தவராக ஏற்படுத்த்ப்படுவார்கள், ஆபிராமும் அவரது சந்ததியினரும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் மூலமாக இருப்பார்கள்.
‘தனக்குக் குழந்தையில்லை... தனக்குப் பின் தன்னுடைய அடிமையின் மகன் எலியேசர்தான் உரிமை மகனாவான்’ என்று ஆபிரகாம் வருந்திக்கொண்டிருக்கிறபோது, ஆண்டவராகிய கடவுள் அவரிடம், “ஆபிராம்! அஞ்சாதே, நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்” என்கின்றார்.
வாசகத்தில் காணப்படும், ‘தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன’ என்று ஆசிரியர் கூறுகிறார். இது கடவுளின் உடனிருப்பை வெளிப்படுத்தும் காட்சியாக உள்ளது.
இன்றைய உறவு-உடன்படிக்கையின் விபரத்தில் விலங்குகளை "வெட்டுதல்" அல்லது இரண்டாகப் பிரித்தல் சடங்கை சித்தரிக்கிறது. இரண்டு தரப்பினரில் இருவரும் இரண்டு கூறுகளுக்கிடையில் நடந்து சென்று உடன்படிக்கையை ஏற்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் விதிமுறைகளை அல்லது நிபந்தனைகளை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையும், உடன்படிக்கையை மீறினால் தங்களைத் தாங்களே சாபமாக்கிக் கொள்வார்கள் என்பதையும் அறியச் செயகிறது.
வாசகத்தில், கடவுளின் அடையாளமாக அவரது பிரசன்னம் மட்டுமே கடந்து செல்கிறது - ஆபிராம் கடந்து செல்லவில்லை. இது ஒருதலைப்பட்ச உடன்படிக்கை என்பதை இது வலியுறுத்துகிறது: வாக்குறுதியை நிறைவேற்ற கடவுள் மட்டுமே தன்னை பிணைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி உள்ளத்தைப் பார்க்கச் சொல்கிறார். மேலோட்டமான எண்ணங்கள் அல்லது மனப்பான்மைகளை விட முக்கியமானது ஒருவரின் செயலின் "கனி" என்கிறார். மேலும், “போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர்’ என்று சீடர்களை கவனமாக இருக்கச சொல்கிறார்.
சிந்தனைக்கு.
திருத்தூதர்களின் காலத்திலும் சரி, நாம் வாழும் காலத்திலும் சரி, போலி நற்செய்தியாளர்களும் போலி இறைவாக்கினர்களும் மக்க்ள் மத்தியில் குழப்பங்கள் செய்துக்கொண்டுதான் உள்ளனர். இவர்கள் வெளித்தோற்றத்திற்கு நல்லவர்களைப் போன்று, இறைவாக்கினர்களைப் போன்று இருந்துகொண்டு உள்ளுக்குள் பசுத்தோல் போர்த்திய புலிகளாய், ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாய் திரிந்துகொண்டு, பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இவர்கள் உண்மைக்கும் இறையாட்சிக்கும் எதிரானவர்கள். எனவேநாம் எச்சிரிக்கப்படுகிறோம். இத்தகையோரல்தான் திருஅவை உடைபட்டு பொழிவிழந்து காணப்படுகிறது.
இதற்கிடையில் சாத்தானின் சூழ்ச்சிக்கு வசப்பட்ட குள்ள நரிகளாக சித்தரிக்கப்படும் போலி போதகர்கள், அழைக்கப்பட்டோர் மத்தயில் குழ்பங்களை விதைத்துப் பிரித்தாளும் தந்திரங்களை கையாள்கிறார்கள். மரத்தின் இயல்பை அதன் கனியால் நாம் அறிவதுபோல, நமது இயல்பை வெளியில் காட்டுவது நமது சொல்லும் செயலும் ஆகும். நாம் சொல்லாலும் செயலாலும் கடவுளுக்கு ஏற்புடையோராக வேண்டும் என்று பணிக்கப்படுகிறோம்.
ஆம், எண்ணங்கள் சொற்களாகவும் செயல்களாகவும் வெளியில் வரும்போது ஒருவரைப் பற்றி நாம் அறிந்துகொள்கின்றோம். நமது எண்ணம்போல்தான் வாழ்வு அமையும். ஆகவே, போலிகளை கண்டு ஏமாறக்கூடாது.
ஒருவர் நற்செய்தி போதிப்பவராக தோன்றுகிறார் என்பதற்காகவோ அல்லது நன்றாகப் பேசுகிறார் என்பதற்காகவோ அவரைக் குருட்டுத்தனமாக நம்பிடக்கூடாது. இன்று ‘ஆராதனை’ ஆசீர்வாதம், அபிசேகம் என்ற பெயரில் பித்தலாட்டங்கள் எங்கும் நடபெறுகிறது. அங்கே ‘பணம்’ கொட்டே கொட்டென்று கொட்டுகிறது. இதற்கு மிக நவீன தொழில் நுட்ப கருவிகளையும் இசையையும் ‘சாத்தான்’ பயன்படுத்துகிறான். கவனமாயிருப்போம்.
இறைவேண்டல்.
ஆண்டவரே, உமது அழைப்பால் நான் என்றும் உமது திருவுடலாகிய திருஅவையில் கனி தரும் உறுப்பாக நிலைத்திருக்க அருள் புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
