உண்மை சீடத்துவம் அஞ்சாமைக்குரியது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

24 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 12 ஆம் வாரம் –  செவ்வாய்
திருமுழுக்கு யோவானின் பிறப்பு
எசாயா 49: 1-6
திப. 3: 22-26
லூக்கா 1: 57-66, 80 
 
 
உண்மை சீடத்துவம் அஞ்சாமைக்குரியது! 

முதல் வாசகம்.
 
இன்று நாம் திருமுழுக்கு யோவான் பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறோம். கத்தோலிக்க பாரம்பரியத்தில், நாம் மூன்று நபர்களின் பிறந்தநாளை மட்டுமே கொண்டாடுகிறோம்: இயேசு (டிசம்பர் 25); மரியா  (இயேசுவின் தாயார், செப்டம்பர் 8); மற்றும் திருமுழுக்கு யோவான் (ஜூன் 24). இன்றிலிருந்து ஆறு மாதங்கள் கழித்து இயேசுவின் பிறப்பு பெருவிழா கொண்டாடப்படும்.

இன்றைய முதல்வாசகம் எசாயா நூலின் ‘துன்புறும் ஊழியன்’ பற்றிய நான்கு பாடல்களில் இரண்டாம் பாடலின் ஒரு பகுதியாக தரப்பட்டுள்ளது.
ஏசாயா 49-ல், ஆண்டவரின் ஊழியர் , தான் பிறப்பதற்கு முன்பே அழைக்கப்பட்டு, கடவுளால் ஒரு சிறப்புப் பெயர் சூட்டப்பட்டதால்,  தனக்கு இருக்கும் தனித்துவமான நிலையை உணர்கிறார். தாயின் வயிற்றில் உருவாகும் போதே என்னைப் பெயர்ச் சொல்லி அழைத்தார்" என்கிறார். உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கும் ஒளியாகவும் ஏற்படுத்துவேன் என்று முன்பாகவே அறிவித்தது இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவானைத் தான் என்பதை நமக்கு எடுத்துரைக்கிறது.  

இரண்டாம் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகம், கிறிஸ்துவின் வருகைக்கு முன்பே இன்றைய விழா நாயகன் திருமுழுக்கு யோவான் சமுதாய அவலங்களையும், அநீதிகளையும் கடிந்து எதிர்குரல் எழுப்பினார் என்றும்,  நற்செய்தியை மக்கள் அனைவருக்கும் பறைசாற்றினார் என்றும் எடுத்துரைக்கிறது.  

நற்செய்தி. 

இன்றைய நற்செய்தி திருமுழக்கு யோவானின்  பிறப்பு மற்றும் பெயரிடுதலை விவரிக்கிறது. வயதான எலிசபெத் பெற்றெடுத்தக் குழந்தைக்குப் பெயரிடும் போது, உறவினர்கள் அந்தச் சிறுவனுக்கு அவனது தந்தை (செக்காரியா ) அல்லது வேறு குடும்ப உறுப்பினரின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், எலிசபெத்  வானதூதரின் அறிவிப்பிற்கு இணங்க  குழந்தையின்  பெயர் யோவான் என்று அறிவிக்கிறாள். அப்போது, ஊமையாக இருந்த செக்கரியாவுடன் அவர்கள் தொடர்பு கொள்ளும்போது, "அவன் பெயர் யோவான்" என்று எழுதி வெளிப்படுத்துகிறார். 
செக்கரியா தனது செய்தியைத் தெரிவிக்கும்போது,  முன்பு  முடக்கப்பட்டிருந்த அவரது நாக்கு அவிழ்க்கப்படுகிறது.  யோவான் வளர்ந்து ஆவியில் பலமடைந்து, இஸ்ரவேலுக்குப் பொது ஊழியத்தைத் தொடங்கும் வரை பாலை வாழ்ந்தார் என்று கூறி நற்செய்தி முடிகிறது.

சிந்தனைக்கு.
 
இந்நாளில், திருமுழுக்கு யோவான் நமக்குத் தரும் வாழ்க்கைப் பாடங்களை சிந்தித்து தியானிப்பது சிறப்பு.  மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் ஒருவருமில்லை (மத் 11:1) என்று  நமதாண்டவர் இயேசுவால் வாயாரப் புகழப்பட்டவர் திருமுழுக்கு யோவான். 

இன்று, நாம் ஒவ்வொருவரும் பிறப்பதற்கு முன்பே கடவுளால் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டப்படுகிறோம்.  திருமுழுக்கு யோவானின்  பெற்றோருக்கு நிகழ்ந்தது  போல், நம் பெற்றோருக்கு நம் பிறப்பை அறிவிக்கும் ஒரு வானத்தூதர் தோன்றாமல் இருந்திருக்கலாம்.   ஆனாலும், நாம் கடவுளால், அவரது திட்டத்தில் ஒரு பங்கை வகிக்க அழைக்கப்பட்டுள்ளோம். இதை இயேசுவும் உறுதிப்படுத்துகிறார். ‘நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன்’ (யோவான் 15:16).  

திருமழுக்கு யோவானில் இருந்த தாழ்ச்சியை நாம் எண்ணிப் பாரக்க வேண்டும். 'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று அவருக்குப் பின் ஆறு மாதங்கள் கழித்துப் பிறந்த இயேசுவை மக்கள் முன்னிலையில் உயர்த்திப் பேசுகிறார்.  தன்னை அவருக்கு அடிமையாகவும் சித்தரிக்கிறார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், அவருக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச பணியாளர்களும் வந்தாலும் அவர் பெருமிதம் கொள்ளாமல் தாழ்ச்சியில் மிதக்கின்றார். 

அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார்.  

திருமுழுக்கு யோவான் கடவுளின் வார்த்தையை - உண்மையை - மிகத் துணிவோடு எடுத்துரைத்தார். அவர் அஞ்சா நெஞ்சத்தவர். அவர் அநீதிக்கு வளைந்து கொடுக்கவில்லை. தன்னிடம் திருமுழுக்குப் பெறவந்த, குற்றங்களுக்கு மனம் வருந்தாத  யூதர்களை விரியன் பாம்புக் குட்டிகளே என்றார்.  தன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு முறைதவறி வாழ்ந்த ஏரோதை நேரடியாகக் கண்டிக்கிறார். இப்படியாக அவர் உண்மைக்குச் சான்று பகரும் உரைகல்லாக விளங்குகின்றார்.

இறுதியிலே தான் கொண்ட கொள்கைக்காக, உயிர்துறக்கிறார். திருமுழுக்கு யோவானிடம் இருந்த துணிச்சலும் உண்மையை உரக்கச் சொல்லும் மனதிடமும் நம்மிடம் இருக்கின்றதா? என்று சிந்திக்க இன்று கடவுள் அழைக்கிறார். 

ஆகவே, திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரில் காணப்பட்ட  சாட்சிய வாழ்வையும், தாழ்ச்சியையும், எளிமையையும் எண்ணிப் பார்த்து நமது சீடத்துவத்தைச் சீர் செய்வோம். 

இறைவேண்டல்.

ஆண்டவரே, இயேசுவே, உம்மை இவ்வுலகம் மீட்பராகப் பெறுவதற்கு,  திருமுழுக்கு யோவான்  அவர்தம் வாழ்க்கையை அர்ப்பணித்ததைப்போல், நானும் உமது மீட்புப் பணிக்காக என்னை தொடந்ந்து அர்ப்பணிக்க உதவுவீராக. ஆமென்  
 
 
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452