நாம் அளிக்கும் தீர்ப்பையே நாமும் பெறுவோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

23 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 12 ஆம் வாரம் – திங்கள்
தொடக்க நூல்  12: 1-9
மத்தேயு   7: 1-5
 
 
நாம் அளிக்கும் தீர்ப்பையே நாமும் பெறுவோம்!
 
முதல் வாசகம்.
 
வார நாட்களில் அடுத்த சில வாரங்களுக்கு, நமது முதல் வாசகம்  தொடக்க நூலிலிருந்து கொடுக்கப்படுகிறது. இன்று நாம் ஆபிரகாமின் கதையையும்   கடவுள் அவருக்கு வழங்கும் ஆசீர்வாதத்தின் வாக்குறுதியையும் அறிகிறோம்.

ஆபிராம் (இது ஆபிரகாமின் முதல் பெயர்) தனது தாயகத்தை விட்டு (இன்றைய ஈராக்)  வெளியேறி, கடவுள் அவருக்குக் காண்பிக்கும் ஒரு புதிய நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற கடவுளின் அழைப்பைக் கேட்கிறார். கடவுள் ஆபிராமையும் அவரது வழிமரபினரையும் ஆசீர்வதிப்பது மட்டுமல்லாமல், ஆபிராகாமை பெரிய இனமாக்குவார் என்ற வாக்குறுதியையும் அவரகளின்  ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருப்பார் என்றும் அறிவிக்கிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு தமது சீடர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் - அதாவது, கடவுள் அவர்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதத்தை மதித்து அதற்கேற்ப நடப்பவர்களாக வாழ வேண்டும் என்ற அறிவுரையை தருகிறார்.

இயேசு மற்றவர்களைக் கடுமையாக தீர்ப்பிட வேண்டாம் என்று தம் சீடர்களை எச்சரிக்கிறார். அப்போதுதான் அவர்களும் அதே வழியில் தீர்ப்பிடப்பட மாட்டார்கள் என்றும், மற்றவர்களைத் தீர்ப்பிடுவோர் சொந்த கண்ணில் உள்ள துரும்பை எடுத்துவிட்டு,  வேறொருவரின் கண்ணில் ஒரு சிறிய துரும்பை எடுக்க விழைவதுதான் சிறப்பு என்று ஓர் உருவகமாகக கற்பிக்கிறார்  

சிந்தனைக்கு.

இறால் தன் தலையில் துர்நாற்றத்தை வைத்துக் கொண்டு மற்ற மீன்களைப் பார்த்து துர்நாற்றம் என்று கூறுமாம்.’ இது நான் அறிந்த பழமொழிகளில் ஒன்று. ஆம். எடுத்ததெற்கெல்லாம் குறை கண்டு கொண்டிருப்பது நல்லதல்ல. குறைகூறுதல் தொடர்ந்து நீடிக்குமேயானால்  அது உறவுகளோடுடனான நட்பை முறித்து விடும் அபாயம் உண்டு. தொடர்ச்சியான குறைகூறுதால், மனக் கசப்புகளும் மன அழுத்தங்களும் பாதிக்கப்பட்டோருக்கு எளிதில் ஏற்படக்கூடும்.

ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருவர் மீது  நம் விரல் நீட்டி குற்றம் சாட்டும் போது மீதி விரல்கள் நம்மை நோக்கி சுட்டுகின்றன என்பதுதான் உண்மை. ஒருவரின் தவற்றை அல்லது செயலை சீர் செய்ய விரும்பினால், அவரை நேரடியாக சந்தித்துப் பேசுவது சாலச் சிறந்தது. 

இப்படியொரு கதை உண்டு. ஒவ்வொரு மனிதனும் உலகில் பிறக்கும்போது, அவனது கழுத்தில் முன்னும் பின்னுமாக  இரண்டு பைகள் தொங்கவிடப்படுகின்றனவாம்.  இரண்டும் குறைகளால் நிறைந்தவை. இவற்றில்,  முன்னால் உள்ளபையில  தன் அண்டை வீட்டாரின் குறைகளால் நிறைந்தம்,  பின்னால் உள்ளதில் அவனது  சொந்தக் குறைகளால் நிறைந்ததுமாக  இருக்குமாம். இதன் விளைவாக, மனிதர்கள் தங்கள் சொந்த தவறுகளை காண தவறுகிறார்கள் மாறாக, முன்னால் தொங்கும்  அண்டை வீட்டாரின் தவறுகளை மட்டும் இலகுவாக கண்டுகொள்கிறார்கள்.  ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நம்மிலும் பெரும் குறைபாடுகள் உள்ளன என்பதை முதலில் ஏற்க வேண்டும். குறைகூறலால்  உடைந்துபோன குடும்பங்களும் உறவுகளும் எண்ணிலடங்கா.

நாம் புனிதர்கள் அல்ல.  புனிதர்களாகிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, ‘உன்னையே நீ அறிவாய்’ என்று சோக்ரட்டிஸ் என்ற கிரேக்க தத்துவஞானி கூறிய அமுத வாரத்தைகளை நினைவில் கொள்வோம். சமூகத்தில் தாங்கள் மட்டும்தான் நல்லவர்கள், மற்றவரெல்லாம் கெட்டவர்கள் என்று நினைத்து வாழ்வோரை இயேசு ‘வெள்ளைடித்த கல்லரைகள்’ என்றதோடு, ஐயோ உங்களுக்குக் கேடு வரும்  என்றும் எச்சரித்தார்.

எங்கு, என்ன தீமை அல்லது தவறு நடந்தாலும் நாம் கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டும் என்பதல்ல.   உண்மைக்குக் குரல் கொடுப்பவரே சிறந்த சீடர். உண்மையை நிலைநாட்டவும் நாம் அழைக்கப்படுகிறோம். உண்மையைக் கண்டறியாது, எடுத்த எடுப்பிலேயே அடுத்தவரைக் குறைகூறுதல் முற்றிலும் நல்ல பண்பாகாது. எல்லா உண்மைகளையும் அறிந்த கடவுள் மட்டுமே மக்களை நீதியாக நியாயந்தீர்க்க வல்லவர்.

ஆகவே, பிறர் செயல்கள் மீது அவசரப்பட்டுக் குறைகளைப் பதிவுச் செய்யவதை குறைத்து, நமது சொந்த குறைகளை முதலில் சிறுக சிறுகக் களைய முற்படுவோம். நிறைவாக, ஆண்டவர் கூறுவதைப்போல், எந்த அளவையால் நாம் அளக்கிறோமோ அதே அளவையால்தான் நமக்கும் அளக்கப்படும் என்பதை என்றும் மனதில் நிலைநிறுத்துவோம். 

இறைவேண்டல்.

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை என்பதற்கேற்ப ஆண்டவரே, நான் என்னைச் சுற்றியுள்ளோரை மதித்து வாழவும், பிறரை அநீதியாகத் தீர்ப்பிடும் செயலில் இருந்து விடுபடவும் எனக்குதவுவீராக. ஆமென். 

 
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452