நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வேண்டுமா? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம், வாரம் 8 திங்கள் 
I: சீஞா: 17: 20-29
II: திபா :32: 1-2. 5. 6. 7
III:மாற் :10: 17-27

நம்முடைய வாழ்வில் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இவ்வுலக பற்றை விட்டு விட்டு கடவுளை முழுமையாக பற்றி பிடிக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்த இளைஞர் கடவுள் தந்த கட்டளையை கடைபிடித்து தூய்மை வாழ்வை வாழ்ந்தாலே போதும், நிலை வாழ்வைப் பெற்று விடலாம் என்று ஆழமாக கருதினார். ஆனால் ஆண்டவர் இயேசுவின் பார்வையில் நிலைவாழ்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால்  நம்மிடம் இருப்பதை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் நல்ல மனநிலை வேண்டும்.

இயேசு தன்னைப் பின்பற்ற வந்த செல்வந்த இளைஞரிடம் தன்னை இருப்பதை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடும் என்று சொன்னவுடன் வருத்தத்தோடு சென்றதாக வாசிக்கிறோம். காரணம் அந்த செல்வந்தர் இளைஞரிடம் செல்வம் அதிகமாக இருந்தன.

செல்வந்தர்களாக இருப்பது தவறல்ல ; ஆனால் கடவுளை விட செல்வம் தான் உயர்ந்தது என்று கருதுவது தவறு. மனிதநேயத்தை விட பணம் தான் உயர்ந்தது என்று கருதுவதும் தவறு. இந்த பிரச்சனை தான் இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்த இளைஞனுக்கு இருந்தது.

அன்றாட வாழ்க்கையில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அழிந்துபோகும் செல்வத்திற்கா? நிலைவாழ்வை வழங்கும் கடவுளுக்கா?  என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டுள்ளோம். கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நாம் நிலை வாழ்வை பெற முடியும். கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது நம்மிடம் இருக்கும் செல்வத்தை ஏழைகளுடன் பகிர்ந்து கொள்வது. மனித சேவையில் தான் உண்மையான புனிதத்தை காண முடியும். ஆனால் செல்வதற்கு முக்கியத்தும் கொடுத்தால் கடவுள் தரும் நிலைவாழ்வைப் பெற முடியாது. கடவுளுக்கு நம் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்க தயாரா? கொடுத்தால் நிலைவாழ்வு நிச்சயம் நமக்கு உண்டு. 

இறைவேண்டல்
வல்லமையுள்ள இறைவா!  செல்வத்தை சேர்ப்பதற்கு  முக்கியத்துவம் கொடுப்பதை விட,  அதை பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கு முக்கியத்தும் கொடுங்க நல்ல மனநிலையைத் தாரும். அதன் வழியாக மனித சேவையில் புனிதம் கண்டிட அருளைத் தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்