பேறுபெற்றோராக

என் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. 
திருப்பாடல் 23: 5

ஒரு தாய் தந்தை தன் பிள்ளையை எவ்வளவு மேன்மைப்படுத்துவார்களோ அந்த அளவுக்கு நான் உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று இன்றைய இறைவசனத்தில் எங்களுக்கு சொல்லுகின்ற எங்கள் அன்புத் தந்தையும் தாயும் ஆன இறைவா உமக்கு நன்றி.

இன்று குறிப்பாக நீர் எனக்காக எவ்வளவு தூரம் செயலாற்றுவீர் என்பதை காண்பிக்கின்றீர் ஆண்டவரே.

அதுவும் என் கண்முன்னேயே நான் காணுகின்ற நேரத்திலேயே எனக்காக விருந்து ஏற்பாடு செய்கின்றீர். அதாவது விருந்து என்றால் சிறந்த இருக்கை நன்கு அலங்கரிக்கப்பட்ட மேஜை.

அதிலே விலை உயர்ந்த பாத்திரங்கள். அதிலே வகை வகையான உணவுகள். அவற்றை பரிமாற எனது வலது பக்கத்தில் தாயாக  நீர் அமர்ந்து நான் சிரிப்போடு உண்பதை பார்த்து ரசிக்கும் தந்தையாக நீர் இருக்கின்றீர் என்பதை என் கண்கள் காணும் போதே நான் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்கின்றீர். பேறு பெற்றவன் நான்.
உமது அருளால் அன்பால் என் மனம் நிரம்பி வழிகின்றது.

இப்பொழுது என் மனம் உமக்கு ஓர் மன்றாட்டை சொல்லுகின்றது.

நன்றி என்பதே அது.

ஆண்டவரே எனக்காக நீர் செய்தவற்றை நான் என்னவென்று சொல்வது!

எல்லாவற்றிற்கும் சேர்த்து நன்றி என்று ஒரு வார்த்தை போதாது.

இப்பொழுது சொல்லுவேன் இந்த நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருப்பேன் நன்றி என்று.

என்னை பெற்றவரே தாயும் தந்தையும் ஆனவரே நன்றி நன்றி நன்றி!

Tamil Survey Popup Image