செயற்கரியன செய்து பேறு பெற்றோர் ஆகுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

செயற்கரிய செய்வார் பெரியர்;
சிறியர் செயற்கரிய செய்கலா தார் (26)
செய்வதற்குக் கடினமான அருஞ்செயல்களைச் செய்வோர் பெரியோர் அருஞ்செயல்களைச் செய்ய முயலாதோர் சிறியோர்.
அன்று, அந்தக் காதலர் புலிகளுக்குத் திருமண விழா. ஆண் புலியும் பெண் புலியும் அரியணையில் அமர்ந்திருந்தனர். திருமணத்துக்கு வந்திருந்த விலங்கு நண்பர்கள் புலிகளுக்கு அருகில் சென்று வாழ்த்துச் சொல்ல அஞ்சினர். அதையே தங்களுக்குப் பெருமை என்று மணமக்களின் பெற்றோர் எண்ணினர்.
அப்பொழுது அங்கே எலியார் வந்தார். எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு மணமக்கள் அமர்ந்திருந்த மேடையில் ஏறினார். மற்ற விலங்குகளுக்கெல்லாம் அதிர்ச்சி; சமத்துவத்தைக் கொள்கையாகக் கொண்டிருந்த புலி மணமகனுக்கு வியப்பும் மகிழ்வும்.
'என்ன எல்லாரும் அப்படிப் பாக்குறீங்க? என்னடா அச்சமில்லாம மேடையில ஏறி புலியாரை வாழ்த்த வந்திருக்கானே இந்த எலி... என்றா?... நான் ஓர் உண்மையைச் சொல்லி மணமக்களை வாழ்த்த விரும்புகிறேன். என்னுடைய திருமணத்துக்கு முன்னால் நானும் ஒரு புலியாகத்தான் இருந்தேன். ஆனா. இப்போ இப்படி எலியாயிட்டேன். புலியார் என்றுமே ஒரு புலியாகத்தான் இருக்க முயற்சி எடுக்க வாழ்த்தி விடை பெறுகிறேன்' என்று சொல்லியும் சொல்லாமலுமாக ஓடியே போய்விட்டார் எலியார். அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.
புலி மணமக்களை நகைச்சுவையாகவும் இலக்கிய நயமாகவும் பலரும் வாழ்த்திய வண்ணமாய் இருந்தனர். அவ்வேளையில் பூனையார் ஒருவர் ஓடி வந்தார். மணமக்களுக்கு அருகில் அமர்ந்திருந்த புலிகளின் தலைவரது காதுக்குள் கிசுகிசுத்தார்.
நடந்து கொண்டிருந்த அணில்களின் புதுமையான அணிவகுப்பு நடனம் முடிந்தவுடன் தலைவர் எழுந்து ஒலிவாங்கியைக் (மைக்) கையில் பெற்றுக் கொண்டு அறிவித்தார்: அன்புத் தோழர்களே, இப்பொழுது உடனடியாகப் புலி மணமக்கள் நன்றி கூறுவார்கள். அதைத் தொடர்ந்து எல்லாரும் மணவிருந்தில் பங்கெடுக்கவிருக்கிறோம். அதன்பின், நம் நாட்டு மாநிலங்களின் பகராளிகளுக்கும் (பிரதிநிதிகள்) பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களுக்கும் கூட்டம் நடைபெறும். மற்றவர்கள் பொறுமையாக உறவாடிக் கொண்டிருங்கள்'.
இவ்வாறு தலைவர் பேசி முடித்ததும் மணமக்கள் எழுந்து, 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்..' என்று குறள் மொழியோடு தொடங்கி சுருக்கமான நன்றியுரையை நிறைவு செய்தார்கள்.
உணவுக்குப் பின், பகராளிகளின் கூட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. "மணமேடையில் பூனை கொண்டு வந்த உளவுச் செய்தியின்படி, சிங்கங்கள் நம் நாட்டைத் தாக்குவதற்குத் திட்டம் வகுத்துள்ளனர்; தக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பக்கத்துக் காட்டிலுள்ள அணைக்குக் கீழுள்ள அடர்த்தியான மரங்களுக்கிடையே முகாமிட்டுள்ளனர். நாம் உடனடியாகச் செயல்பட்டு, சிங்கங்கள் நம் நாட்டில் தகா செயல்களைச் செய்துவிடாமலிருக்க ஆவன செய்ய வேண்டும்" என்றவாறு புலிகளின் தலைவர் சொன்னதும், ஒவ்வொரு புலியாக எழுந்து வெவ்வேறு பரிந்துரைகளைக் கொடுத்தனர். கிழம் புலி ஒன்று எழுந்து சொன்னது, 'அந்த அணையை நாம் இரவோடு இரவாக, நம் நண்பர், உறவு விலங்குகளின் உதவியோடு ஒரு பக்கத்தில் உடைத்து விடுவோம். இதைச் சிறிதும் எதிர்பாராது தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டு விடுவார்கள்'. சிலர் கைத் தட்டினர். மற்றவர்கள் அமைதியாய் இருந்தனர்.
இளைஞர் அணித் தலைவரான மணமகன் புலி எழுந்து இளமை மிடுக்கோடு முழங்கினார். 'ஐயா அவர்கள் சொல்லும் கருத்தை அறம் ஏற்றுக் கொள்ளாது. வரலாற்றுப் பழி நம் புலி இனத்தின் மீது விழும். அணைத் தண்ணீரை நம்பி வாழ்ந்து, உலகுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் நம்மை வெறுத்து விடுவார்கள். தமிழீழப் புலிகளின் விடுதலைப் போர் அறத்தினை நாம் மறந்து விடக்கூடாது. இத்தகைய ஒரு சூழல் அவர்களுக்கு வந்த பொழுது, அந்த விடுதலைப் புலிகளின் தலைவன், "அணையை உடைத்துச் சிங்களப் படையை அழிக்க வேண்டாம்" என்று உறுதியாகச் சொல்லி விட்டதால் வேறு திட்டம்தான் வகுக்கப்பட்டது. அந்த வரலாற்றை நாம் மறந்து விடக் கூடாது'.
புலிகள் எல்லாரும் தலையாட்டினர். "அப்போ என்ன செய்யலாம். நம் குட்டிகள், நம்மை நம்பி வாழும் பிற உயிரினங்கள் எல்லாரையும் பாதுகாப்பது எப்படி?" தலைவர் புலி செய்வதறியாது வினவினார்.
'தூது செல்வோம்' துணிந்து பேசத் தொடங்கினார் மணமகள் புலி. 'சிங்கங்களும் நம்மைப் போன்ற விலங்குகள் தானே. அவர்கள் கயவர்கள் இல்லையே. நம் உடன்பிறவா அண்ணன்களும் அக்காக்களும்தானே. அவர்களுக்கும் இயற்கை நேயம் உண்டுதானே. 'அறம் செய விரும்பு' என்று முழங்கிய தமிழ் வீரமங்கை ஒளவை, அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நடைபெறுவதாக இருந்த போரை நிறுத்த தூது சென்றது போன்று செல்வோம்!'
'யார்? எப்படி...? 'பலரும் முணுமுணுத்தனர்.
'உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நானும் என் கணவனும் செல்கிறோம்' - மணமகள் புலி
அதை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் மணமகன் புலி உறுமினான். 'மணமக்கள்...! அதுவும் இன்றைக்கு...! அது எப்படி...' என்று அமைந்த குரலில் தங்களுக்குள் எல்லாரும் பேசிக் கொண்டிருந்தனர்.
மணமக்களின் கண்களைக் கூர்ந்து கவனித்து விட்டு, தூது சென்று வாருங்கள்! நட்புறவு வென்று வாருங்கள்' என்று தலைவர் அறிவித்தார். மணமக்கள் புலிகள் எழுந்து நின்றனர். அவையோர் கைத் தட்டியபடி வாழ்த்தினர். செயற்கரிய செயலைச் செய்யத் துணிந்துள்ள இளம் புலிகளை ஆனந்தக் கண்ணீரோடு வழி அனுப்பி வைத்தனர்.
நெஞ்சில் அறமும் வீரமும் கொண்டு நேர்கொண்ட பார்வையோடு இருவரும் உடனே புறப்பட்டனர். சிங்கக் கூட்டத்தின் குகையை நெருங்கினர்.
'வாங்க! வாங்க!... என்று கதவைத் திறந்து விட்டார் காவலர் சிங்கம். உள்ளே நுழைந்ததும் மணமக்கள் புலிகளுக்கு வியப்பு. அப்பொழுது பாடகர் குழுச் சிங்கங்கள் குழுப்பாட்டு பாடினர். "வாழ்க! நீங்கள் வாழ்க! வாழ்வின் இலக்கணமாக'.
மணமகன் புலி பேச வாயெடுத்து. 'ஐயா...'
தலைவர் சிங்கம், "நீங்க ஒன்றும் சொல்ல வேண்டாம். உங்கள் அறமும், இயற்கை நேயமும் அருமை! அது போதும் உங்களோடு நாங்க நட்பு உறவாக இருக்க... உங்களை எண்ணி மகிழ்கிறோம்."
மணமகள் புலி கையெடுத்துக் கும்பிட்டு 'ஐயா, நீங்க பெரிய மனசுக் காரங்க ஐயா, நன்றிங்க ஐயா...'
தலைவர் சிங்கம், அம்மா மஞ்சள் குங்குமத்தோட நீ நீடுழி வாழ்க! உன் இனிமையான பேச்சு அருமை. என்னை ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்து விட்டாய் அம்மா...'
மணமக்கள் இருவரும் வியப்பில் ஆழ்ந்தனர், தலைவர் சிங்கம் தொடர்ந்தார். 'உங்களுடைய புலிக் கூட்ட அமர்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில் மாறுவேடத்தில் நான் அந்தப் பகுதியில் தான் பதுங்கிக் கொண்டிருந்தேன். எல்லாரும் கலந்துரையாடியதைக் கேட்டேன். நீங்க ரெண்டு பேரும் பேசியது என் உள்ளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. அதோடு திருமணத்து அன்றைக்கே, முதலிரவு என்றெல்லாம் தன் இன்ப கற்பனையில் மிதந்து கொண்டிருக்காமல், நாடு, மண், இயற்கை, உயிர்கள், ஒற்றுமை, அமைதி என்று களம் இறங்கத் துணிந்தீர்கள் பாருங்க! நான் என் ஆணவத்திலிருந்து இறங்கிட்டேன். உங்களது செயற்கரிய இந்தச் செயல் தொடரட்டும் வாழ்க!" என்று குரல் தழுதழுக்கப் பேசினார்.
தலைவரின் ஆணைப்படி எட்டுச் சிங்கங்கள் அணி வகுக்க அவர்களை நடுவில் நிற்க வைத்து புலிகளின் எல்லையில் கொண்டு போய் விட்டனர். 'நன்றி அண்ணா' மணமகள் சொல்ல 'வாங்க சாப்பிட்டுகிட்டுப் போங்க' என்று மணமகன் சொல்லி அழைத்தார். உடனே அங்குக் கூடிவிட்ட புலிகளிடம் நடந்ததை எடுத்துக் கூறினர். அனைவரும் மகிழ்ந்து மொழிந்தனர். 'நீங்கள் உண்மையிலேயே கடவுளின் மக்கள் என்று அழைக்கப்படத் தகுதி பெற்றவர்கள். ஏன்னா அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் அல்லவா!
எழுத்து
அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன்
Daily Program
