இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தும் மரிய அன்னை சபை அருள்சகோதரிகள்

கிழக்கு ஆப்ரிக்காவின் தன்சானியாவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியானது பல குழந்தைகள் மற்றும் இளைஞர்களைப் பள்ளிக்குச் செல்ல விடாமல் வைத்திருக்கும் நிலையில், அவர்களின் சிறந்த எதிர்காலத்தைப் பாதுகாக்க இலவச, உயர்தர கல்வி மற்றும் தொழில் பயிற்சியை வழங்கி வருகின்றனர் மரிய அன்னை சபை அருள்சகோதரிகள்.கிழக்கு ஆப்பிரிக்காவின் தன்சானியா இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தாலும், குறைந்த வருமானம் கொண்ட நாடாக இன்று வரை இருக்கின்றது என்றும், அங்கு வாழும் மக்கள் பலர், தினசரி பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர் முழுமையான கல்வியை அணுகுவது அவர்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார் அருள்சகோதரி மெர்ரி ஜேன் டாலின்ஸ்.
1964 ஆம் ஆண்டு பேரருள்திரு அலோசியஸ் ஸ்வார்ட்ஸ் அவர்களால் நிறுவப்பட்ட பன்னாட்டு துறவற சபையான மரிய அன்னை சபை அருள்சகோதரிகள், உலகளவில் பின்தங்கிய குழந்தைகளுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருபவர்கள். மேலும் தன்சானியாவின் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுடன் பணியாற்றுவதை முழுமனதுடன் செய்து வருபவர்கள்.தரமான கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை சவால்களுக்கு தங்களைத் தயார்படுத்தும் வாய்ப்புகளை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்க உறுதிபூண்டுள்ள இச்சபை சகோதரிகள், 2019 ஆம் ஆண்டில், டார் எஸ் சலாம் மறைமாவட்டத்திற்குள் உள்ள கிசராவேயில் பெரும்பாலும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்காக ஒரு பள்ளியை தொடங்கினர்.
ஆரம்பத்தில் அடிப்படைக் கல்வியை வழங்கிய இந்தப் பள்ளி, 2024 ஆம் ஆண்டில் விரிவுபடுத்தப்பட்டு தற்போது இந்த நிறுவனத்தில் 1,029 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும், இங்கு பயிலும் பெண்கள் கல்விப் பாடங்கள் உட்பட அரசாங்கத் தரங்களுடன் இணக்கமான விரிவான கல்வியைப் பெறுகிறார்கள் என்றும் வத்திக்கான் செய்திகளிடத்தில் அருள்சகோதரி மெர்ரி ஜேன் டாலின்ஸ் கூறியுள்ளார்.
நண்பர்களை உருவாக்குதல், விளையாடுதல் மற்றும் புதிய பொழுதுபோக்குகளை ஆராய்தல் என குழந்தைப்பருவத்தை வளர்த்தெடுக்கும் இப்பள்ளியானது எதிர்கால வேலைவாய்ப்புக்கான நடைமுறைத் திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றது.2022 ஆம் ஆண்டில், இச்சபை சகோதரிகள் கிலுவ்யா நர்சரி மற்றும் பயிற்சி மையத்தைத் திறந்தனர், இது 90 இளம் குழந்தைகளுக்கு மாண்டிசோரி கல்விப்பயிற்சி வழியில் பராமரிப்பையும், பல்வேறு காரணங்களுக்காக பள்ளியை விட்டு வெளியேறும் 110 இளம் பெண்களுக்கு சான்றளிக்கப்பட்ட தொழிற்கல்வி பயிற்சியையும் வழங்கி வருகின்றது.
மேலும் இப்பள்ளியானது இளம் பெண்களுக்கு துணிவை அளிப்பதையும், எதிர்கால பள்ளிப்படிப்புக்கு இளம் குழந்தைகளைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.டோடோமா பாய்ஸ் நகரத்தில் 2025 மார்ச் மாதத்தில், ஏழைப் பின்னணியைச் சேர்ந்த சிறுவர்களைப் பராமரிக்கும் ஒரு புதிய தங்குமிடம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தினையும் சகோதரிகள் உருவாக்கியுள்ளனர்.
Daily Program
