நமது சுய விளம்பரம் நிரந்தமாகாது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

18 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 11 ஆம் வாரம் –புதன்
2 கொரி 9: 6-11
மத்தேயு  6: 1-6, 16-18
 
 
நமது சுய விளம்பரம் நிரந்தமாகாது!
 
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்துவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினரை, ஏழைகளைப் பராமரிப்பதில் கருணையுடன் இருக்குமாறு புனித பவுல் தொடர்ந்து அறிவுறுத்துகிறார். அவர்கள் கொடுப்பதில்  மிகுதியாகவும் மகிழ்ச்சியாகவும்  கொடுக்க வேண்டும் என்கிறார் அதிலும் கொடுப்பது ஒரு கடமையாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்கிறார்.

கடவுளின் அருளும் தயவும் பிறருக்கு உதவத் தூண்டுதலாக இருக்க வேண்டும் என்றும்,  "நல்லவராக இருப்பது" என்பது கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக அல்ல. மாறாக, கடவுள் இரக்கத்தை மக்கள் அனுபவிக்க கருவிகளாகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறார் பவுல். 

ஒவ்வொருவரும் தம்முள் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்,

நற்செய்தி.

நற்செய்தி திருநீற்று புதன் அன்று கேட்கப்பட்ட பகுதிநாகும்.  இயேசு மீண்டும் ஒருமுறை தம் சீடர்கள் கடைப்பிடிக்க வேண்டிய  மூன்று அடையாளங்களான  தானம் செய்தல், இறைவேண்டல் செய்தல் மற்றும் நோன்பு இருத்தல் ஆகியவற்றைக் குறித்து மாற்று அறிவுரையை நினைவூட்டுகிறார்.  மூன்று செயல்பாடுகளும் முக்கியமானவை மட்டுமல்ல, அவற்றை செயல்படுத்தும் மனப்பான்மையும் முறையும்  இன்றியமையாதது என்று இயேசு வலியுறுத்துகிறார். 

சிந்தனைக்கு.

முதல் வாசகத்தில் கொரிந்திருக்கு எழுதும்போது, கொரிந்தியரை (கிறிஸ்தவர்களை)  நன்கொடைகளை அல்லது ஏழைகளுக்கான உதவிகளை மன வருத்தத்தோடோ, கட்டாயத்தோடோ அல்ல, மாறாக முக மலர்ச்சியோடு கொடுக்கவேண்டும் என்கிறார். மேலும் முக மலர்ச்சியோடு கொடுக்கும்பொழுதுதான்  சீடர்கள் செல்வர்களாகி, வல்லமை மிகுந்தவர்களாய் விளங்குவார்கள் என்கிறார்.

நற்செய்யைக் கூர்ந்து வாசித்தால், ஆண்டவர் இயேசு தர்மம் செய்யும் போது,  ஊரார்   பார்க்க வேண்டும், புகழ வேண்டும் எனும் நோக்கத்தில் அல்ல, வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாத அளவில் செய்யவேண்டும் என்கிறார். ஆகையால், நாம் கொடுக்கின்றபொழுது, முக மலர்ச்சியோடும், உள்ளார்ந்த அன்போடு கொடுக்க வேண்டும் என்ற படிப்பினை வலியுறுத்தப்படுகிறது. 

இங்கே, நாம் நம்மையே ஒரு கேள்வி கேட்க வேண்டிய நிலையில் உள்ளோம். நாம் ஏன் இறைவேண்டல் செய்கிறோம், நோன்பு இருக்கிறோம், தானம் செய்கிறோம்? மற்றவர்கள் நம்மைக் கவனிக்கும்படி நம்மை நாமே மாட்சிப்படுத்திக் கொள்ளவா அல்லது கடவுளை மாட்சிபடுத்தி புகழவா?

தற்பெருமைக்காகச் செய்யப்படும் தர்மம், தர்மத்தின் நோக்கத்திலிருந்து விலகிச் செல்வதோடு,  தர்மம் செய்வதில் தற்பெருமை கொள்வது, அந்த தர்மத்தின் பயனாக கிடைக்கவல்ல பலனை குறைத்து விடும். மேலும், அது பிறருக்கு முன்னால் ஒரு போலியான தோற்றத்தையும் உருவாக்கும் என்பது திண்ணம். சுய விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்வு நிரந்தரம் ஆகாது. இத்தகைய விளம்பரம் கிறிஸ்தவர்களுக்கு ஆகாது என்கிறார் ஆண்டவர்.

முதல் வாசகத்தில், குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்கிறார்; மிகுதியாக விதைப்பவர் மிகுதியாக அறுவடை செய்கிறார்’ என்ற தந்துவத்தை கொண்டு உரையாற்றும் பவுல், நாம் கொடுப்பதற்கு ஏற்ப ஆசியைப் பெறுகிறோம் என்று வலியுறுத்துகிறார். ஆண்டவரும்,  ‘உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்’ (மத் 13:12) என்று உறுதியாக்க் கூறுகிறார்.

ஆதலால், தருமம், இறைவேண்டல் மற்றும் நோன்பு ஆகிய மூன்றிலும் நம்மில் வெளிவேடம் ஆகாது. உள்ளத்தைக் காண்பவர் இறைவன் என்பதை நினைவில் கொள்வோர்.

இறைவேண்டல்.

நீதியின் அரசரே, எங்கள் ஆண்டவரே, நான் உமது தயவை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அதனால் அவர்களும் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் நீர் விரும்புகிறீர்கள். உமது விருப்பத்திற்கு ஏற்ப நான் வாழ என்னை ஆசீர்வதிப்பீராக.ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452