கடவுளை அறிய ஞானம் உள்ளதா நம்மிடம்? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பொதுக்காலம்,32 வாரம் வெள்ளி  
I: சாஞா:13: 1-9
II: திபா 19: 1-2. 3-4
III: லூக்:  17: 26-37

ஒரு உணவு விடுதிக்கு நண்பர்கள் இருவர் சாப்பிடச் சென்றனர். பசியோடு இருந்த அவர்கள் உணவு வந்தவுடன் வேகமாக சாப்பிடத் தொடங்கினர். உணவு சூடாகவும் சுவையாகவும் இருந்தது. உணவைப் பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் " இந்த ஓட்டலில் காய்கறிகள் , அரிசி, மசாலாப் பொருட்கள் எல்லாம் தரமானதாக வாங்குகிறார்கள் என நினைக்கிறேன்.  அதனால்தான் உணவு சுவையாக இருக்கிறது " எனக் கூறினார். ஆனால் மற்றவரோ " நீ உணவில் இருக்கும் பொருட்களின் தரத்தைப் பார்க்கிறாய்.  நானோ அதை சமைத்தவரின் திறமையை வியக்கிறேன்" என பதிலளித்தார்.


ஆம் அன்புக்குரியவர்களே பல சமயங்களில் நாம் பொருட்களைப் பார்த்து வியக்கிறோம். நல்லவை நடக்கும் போது மகிழ்கிறோம். எதையும் ஆராய்ந்து பார்த்து அதன் தரம் குணம் என அனைத்தையும் பாராட்டி விமர்சிக்கிறோம். ஆனால் அதற்கு காரணமாக இருப்பவர்களை மறந்து விடுகிறோம்.அதற்கு காரணம் எதையும் மேலோட்டமாகக் காணக்கூடிய அறிவு நம்மிடம் உள்ளதே தவிர ஆழமாக ஆய்ந்து அறியும் ஞானம் நம்மிடையே இல்லை என்பதே.
இன்றைய இரு வாசகங்களும்  கடவுளை  அறியும் ஞானம் கொண்டவர்களாக நம்மை வாழ அழைக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுளை அறியாதோர் அறிவிலிகள் என கூறப்பட்டுள்ளது. கைவினைகளை பாராட்டும் மனிதர் அதை உண்டாக்கிய கலைஞரை கண்டுகொள்ளாத தன்மை மூடத்தனம் என்று குறிப்பிடுகிறது.
"ஏனெனில் அழகின் தலையூற்றாகிய கடவுளே அவற்றை உண்டாக்கினார். அவற்றின் ஆற்றலையும் செயல்பாட்டையும் கண்டு அவர்கள் வியந்தார்கள் என்றால், அவற்றையெல்லாம் உருவாக்கியவர் அவற்றை விட எத்துணை வலிமையுள்ளவர் என்பதை அவற்றிலிருந்து அறிந்து கொள்ளட்டும். " என்ற வார்த்தைகள் இவ்வுலகில் நாம் காணும் அனைத்திலும் கடவுள் இருப்பதை உணரும் ஞானம் நம்மிடையே இருக்க வேண்டும் என்ற சிந்தனையை நமக்குத் தருவதாகவே அமைகின்றது.

அதேபோல நம் வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளிலும் அடையாளங்களிலும் கடவுள் தன்னை வெளிப்படுத்துகிறார் என்பதையும் உணரக்கூடிய ஞானத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுகிறார். மானிட மகன் வருகையின் போது ஏற்படும் அடையாளங்களைக் கூறி ஞானத்தோடு நம்மையே நாம் தயார் செய்ய வேண்டும் என இயேசு கூறுகிறார்.எனவே ஞானத்தோடு கடவுளை அறிந்து அவருடைய வருகைக்காக தயார் செய்ய முயற்சி செய்வோம்.

இறைவேண்டல்
ஞானத்தின் உறைவிடமே, இறைவா!  உம்மை அறியா அறிவிலிகளாய் இல்லாமல் அனைத்திலும் உம்மைக் காணும் ஞானத்தை எமக்குத் தாரும்.  ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்