கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களா நாம்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

ஆண்டின் பொதுக்காலம் 3 ஆம் செவ்வாய்
I: 2 சாமு 6: 12b-15.17-19
II: திபா 24: 7. 8. 9. 10
III: மாற்: 3: 31-35

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுதல் என்பது இறைவனின் விருப்பத்திற்கு நமது விருப்பங்களை அடிபணியச் செய்வது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நாம் கடவுளின் குரலுக்கு முழுமையாக செவிமெடுத்து அந்த அழைப்பிற்கு ஏற்ப வாழவேண்டும் என்பதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டுகின்றார்.

நான் இறையியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுது எமது குருமடத்தில் மரியியல் பாடம் கற்பிக்கப்பட்டது. அப்பாடத்தை எங்களுக்குக் கற்பித்த பேராசிரியர் "நாம் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டுமெனில் அன்னை மரியாவின் வாழ்வை நாம் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார். அன்னை மரியாள் இயேசுவை தன் கருவில் சுமப்பது முதல் கல்வாரிப் பயணம், கல்லறை என இறுதி வரை கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவராக இருந்தார். இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அன்னை மரியாவை கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினை சகோதரர்கள் இன்றைய நற்செய்திப் பகுதியைச் சுட்டிக்காட்டி "என் தாயும் என் சகோதரர்களும் யார்?" என்று இயேசு கூறிய அந்த கேள்வியை விமர்சனத்திற்கு உள்ளாக்குவர். அன்னை மரியாவை இயேசு பொருட்டாக கருதவில்லை எனவும் விமர்சனப் படுத்துவர். ஆனால் இறையியல் பின்னணியில் அதுவல்ல உண்மை. இந்த பகுதியைச் சற்று ஆழ்ந்து தியானித்தால் தன் தாய் அன்னை மரியாவை உயர்ந்த இடத்திற்கு ஆண்டவர் இயேசு உயர்த்துகிறார். "கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்று ஆண்டவர் இயேசு சுட்டிக்காட்டி அன்னை மரியா கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கின்றார் என்பதை உலகறியச் செய்கின்றார்.  

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு அன்னை மரியாள் ஒரு மிகச்சிறந்த முன் மாதிரி. அன்னை மரியாவின் வாழ்வை சற்று தியானித்து பார்த்தால் அதன் உண்மை புலப்படும். கபிரியேல் வானதூதர் இயேசுவின் பிறப்பு செய்தி முன்னறிவிப்பை அன்னை மரியாவிடம் சுட்டிக்காட்டிய போது ஒரு இளம்பெண் துணிச்சலோடு இறைவனுடைய திருவுளத்திற்கு  தன்னையே முழுமையாக கையளித்தார். அன்னை மரியாள் இயேசுவை கருவில் தாங்கிய காலகட்டத்தில் ஒரு பெண் திருமணத்திற்கு முன்பாக கருவுற்றால் மோசேயின் சட்டத்தின் படி கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும். இந்த சட்டத்தை அன்னைமரியாள் அறிந்திருந்தும் தன்னை அழைத்த கடவுள் தன்னோடு உடனிருப்பார்  என்ற ஆழமான நம்பிக்கையோடு "இதோ! ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்று கூறி தன்னையே முழுவதுமாக கையளித்தார்.

இயேசுவைப் பெற்றெடுத்தது முதல் 30 ஆண்டுகள் இயேசுவோடு உடனிருந்து அவரை இறையாட்சிப் பணிக்காக ஒரு தாயாக இருந்து தகுதிப்படுத்தினார். இயேசு திருமுழுக்கு பெற்று இறையாட்சிப் பணியைத் தொடங்கியது முதல் கல்வாரியில் மரித்து கல்லறைக்கு சென்றது வரை அவரோடு உடனிருந்து அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் துணிவைக் கொடுத்தார். அன்னை மரியாள் கடவுளின் திருவுளத்திற்கு உகந்த வாழ்வை வாழ்ந்தார் என்பதற்கு இவை சான்றாக இருக்கின்றன.

இயேசுவின் சீடர்களும் இயேசுவைச் சுற்றியிருந்த அறிஞர்களும் மக்களும் அன்னை மரியாவை ஒரு இரத்த உறவாக மட்டும் பார்த்தனர். எனவேதான் மக்கள் கூட்டத்திலிருந்த ஒருவர் " அதோ, என் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்" எனக் கூறினார். இத்தகைய மனநிலையை மக்கள் மத்தியிலிருந்து மாற்றி தன் தாய் அன்னை மரியாவை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் "என் தாயும் என் சகோதரர்களும் யார்?" என்ற கேள்வியைக் கேட்டார்.  தன் தாய் அன்னை மரியாள் இரத்த உறவைத் தாண்டி இறையாட்சி உறவிற்கு முன்னுதாரணமாக இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டுகிறார் இயேசு. 

தன்னுடைய தாய் அன்னை மரியாவை இரத்த உறவுக்குள் முடக்கி விடாமல் அவரைப்போல நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளை விடுத்து கடவுளின் திருவுளத்திற்கேற்ற வாழ்வை வாழ்ந்திட நாம் ஒவ்வொருவரும் இன்றைய நாளில் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு விண்ணகம் சென்ற பிறகு சீடர்கள் அனைவரும் யூதர்களுக்குப் பயந்து ஒடுங்கி இருந்த காலகட்டத்தில் அனைவரையும் ஒன்று கூட்டி இறைவேண்டலில் ஈடுபட அன்னைமரியா வழிகாட்டினார். அன்னை மரியாவும் சீடர்களும் இறைவேண்டலில் நிலைத்திருக்கும் பொழுதுதான் தூய ஆவியை அவர்கள் பெந்தகோஸ்து நாளிலே பெற்றுக் கொண்டார்கள். அன்றுதான் திருஅவை உயிரோட்டம் உள்ளதாக பிறப்பெடுத்தது. திருஅவை பிறந்து 2000 ஆண்டுகளுக்கு மேலாக உயிரோட்டமுள்ளதாக இருக்கின்றது என்றால் அது அன்னை மரியாவின் வழிகாட்டுதலால் மட்டுமே. ஏனெனில் அன்னை மரியாள் இறை திருவுளத்தை முழுமையாக அறிந்து செயல்பட்டதால் தான் இந்த உலகத்தில் மீட்பு கிடைக்க அவர் மிகச்சிறந்த  கருவியாகப் பயன்படமுடிந்தது.

நம்முடைய அன்றாட வாழ்விலும் நாம் ஒவ்வொருவருமே அன்னை மரியாவை போல கடவுளின் திருவுளத்தை அறிந்து அதற்கேற்ப நம் வாழ்வை அமைத்துக் கொள்ள அழைக்கப்பட்டுள்ளோம். "இதோ ஆண்டவரின் அடிமை உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்" என்று அன்னை மரியாள் இறைதிருவுளத்திற்குத் தன்னையே அர்ப்பணித்தது போல நாமும் இறைதிருவுளத்திற்குநம்மையே முழுமையாக ஒப்புக் கொடுக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் இறை திருவுளத்தை நிறைவேற்றும் பொழுது தூய ஆவியார் நம்மிடம் குடி கொள்வார். அப்பொழுது அவர் கொடுக்கும் மகிழ்ச்சியும் நிறைவும் ஆற்றலும் நமக்கு முழுமையாக கிடைக்கும். அத்தகு ஆற்றலை நாமும் பிறரும்  பெற்றுக்கொள்ள இறை திருவுளத்தை அறிந்து செயல்படும் ஞானத்தையும் அருளையும் வேண்டுவோம்.

 இறைவேண்டல்
அன்பான இயேசுவே! "உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக" என்று நீர் கற்றுத் தந்த இறைவேண்டலில் நாங்கள் செபிப்பது போல எந்நாளும்  இறைத் தந்தையின் திருவுளத்தை அறிந்து செயல்படத் தேவையான ஞானத்தையும் அருளையும் தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும்  தாரும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
புனித சகாய அன்னை ஆலயம்
காரைக்குடி- செக்காலை  பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்