கடவுளோடு இணைந்து செயல்படத் தூண்டுவது நம்பிக்கை! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

பாஸ்கா காலம்-இரண்டாம் வாரம் புதன்
I: திப:5:17-26
II: திபா :33:2-9
III:யோவான் :3:16-21

பாஸ்கா காலத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் நமக்கு இந்நாட்களில் இயேசுவின் உயிர்ப்பில்  நம்பிக்கைகொண்ட மக்களாக வாழ்வதற்கான அழைப்பு  தரப்படுகிறது. உயிர்த்த பின் இயேசு தம் சீடர்களுக்கு பலமுறை தோன்றி அவர்களைத் தேற்றி நம்பிக்கையில் பலப்படுத்தினார் என்பதை உணர்த்தும் பல விவிலியப் பகுதிகளை நாம் தியானித்தோம். அதேபோல நம்பிக்கையில் வளர்ந்த சீடர்கள் அந்நம்பிக்கை விதைகளை பலருடைய உள்ளத்தில் தூவி திருஅவையை வளர்க்கும் பகுதிகளை நாம் தியானித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்திற்கும் வித்தாயிருப்பது நம்பிக்கையே. இன்றைய வாசகங்கள் எவ்வாறு இந்த நம்பிக்கை கடவுளோடு இணைந்து நம்மை செயல்படத்தூண்டுகிறது என்ற கருத்தை நமக்கு சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

பொதுவாக நாம் ஒரு பணியைத் தனியாக யாருடைய உதவியுமின்றி செய்துவிடமுடியாது. அப்படியே செய்தாலும் இணைந்து செய்யும் போது கிடைக்கின்ற பலம், நிறைவு, வெற்றி தனியாகச் செய்யும் போது சற்று குறைவுதான்.அவ்வாறு இணைந்து செயல்படும்போது அங்கே நம்பிக்கை அவசியமாகிறது. அவ்வாறெனில் நற்செய்தி பணியை நாம் செய்ய நமக்கு வெறும் மனிதருடைய உதவி மட்டும் போதாது. கடவுளோடு நாம் இணைந்து செயல்பட வேண்டும். அவ்வாறு கடவுளோடு இணைந்து செயல்பட நம்மை ஊக்குவிப்பதே நம்பிக்கைதான். 

இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தியைப் போதித்த பேதுரு உள்ளிட்ட சீடர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் தளரவில்லை. ஏனெனில் அவர்கள் நம்பிக்கையில் வேரூன்றி இருந்தனர். அந்நம்பிக்கையால் கடவுளின் கரம் அவர்களை தூதர்கள் வழியாய்க் காத்தது.சிறை அடைபட்டிருந்தும் சீடர்கள் வெளியேறினர். கோவிலில் கற்பிக்கத் தொடங்கினர். இது மனித பலத்தால் சாத்தியமல்ல. கடவுளின் பலத்தால் மட்டுமே சாத்தியம். 

"தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்" என்ற நற்செய்தி வாசகத்திலுள்ள வரிகள் நாம் இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் போது கடவுள் நமக்காக எதையும் செய்வார் என்பதை  உறுதிப்படுத்துகிறது. ஆகவே நாம் நம்பிக்கையில் உறுதிபெறும் போது கடவுள் நம்மோடு இணைந்து செயல்படுவார். நாமும் கடவுளோடு இணைந்து செயல்படத் தூண்டப்படுகிறோம். எனவே நம்பிக்கையை வளர்ப்போம். எந்தசெயல்களைச் செய்ய முனையும் போதும் கடவுளோடு இணைந்து நாம் செயல்பட அவரருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்
அன்பு இறைவா! நாங்கள்  நம்பிக்கையில் வேரூன்றி செய்கின்ற எல்லா செயல்களையும் உம்மோடு இணைந்தே செய்ய வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்