எளிமையிலும் நம்பிக்கையிலும் இறைபணி வேரூன்றட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 14ஆம் வாரம் – வியாழன்
ஓசேயா 11: 1-4, 8c-9
மத்தேயு 10: 7-15
எளிமையிலும் நம்பிக்கையிலும் இறைபணி வேரூன்றட்டும்!
முதல் வாசகம்.
இந்த வாசகத்தில், இறைவன் இறைவாக்கினர் ஓசேயா வழியாக இஸ்ரயேல் மக்கள்மீது அவர் கொண்டிருக்கும் ஆழமான அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்களின் தொடக்கக் காலம் தொட்டு, இறைவன் அவர்களை எகிப்திலிருந்து விடுவித்து, ஒரு தந்தை தன் குழந்தையைக் காப்பதுபோல அவர்களை வழிநடத்தி, பாதுகாத்து, அன்புடன் பராமரித்தார். ஆனால் மக்கள் இறைவனிடமிருந்து விலகிச் சென்றனர்.
இருப்பினும், அவர்களின் குற்றஙங்களுக்காக அவர்களை அழிக்க இறைவனின் இரக்கம் இடமளிக்கவில்லை. ‘நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்." அவர் மனிதரைப் போல பழிவாங்குபவர் அல்ல; இரக்கமும் அன்பும் நிறைந்த தூய இறைவன் என்ற பேருண்மையை கடவுள் வெளிப்படுத்துகிறார்.
நற்செய்தி.
இயேசு தமது சீடர்களை இறையரசுக்கான நற்செய்தியை அறிவிக்க அனுப்புகிறார். அவர்களை வெறுமனே அனுப்பாமல், நோயாளிகளை குணமாக்கவும், மக்களுக்கு இலவசமாக சேவை செய்யவும் கட்டளையிட்டார். அவர்கள் பொருள் மீது நம்பிக்கை வைக்காமல், கடவளது பராமரிப்பை நம்பி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அவர்களை ஏற்றுக்கொள்ளும் வீடுகளில் தங்கி அமைதியை பகிரவும், அவர்களது அமைதியை ஏற்காதவர்களைப் பொருட்படுத்தாது, விட்டு வெளியேறும்போது கால்களின் தூசியை உதறிவிடவும் கூறினார்.
தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என்கிறார்.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், ஓசேயா இறைவனை ஒரு அன்பான மற்றும் பராமரிக்கும் தந்தையாகச் சித்தரிக்கிறார். "நான் அவர்களை அன்பின் கயிறுகளால் இழுத்தேன்" என்று ஆண்டவர் கூறுகிறார். மக்கள் அவரை விட்டு விலகினாலும், அவர்களைத் தண்டிக்க அல்ல, மன்னித்து மீண்டும் அணைத்துக்கொள்ளவே அவர் விரும்புகிறார். இதுவே இறைவனின் இதயம் – இரக்கம் நிறைந்த இதயம். அவரது இதயத்தில் அன்பை (இரக்கத்தை) தவிர வேறு ஒன்றிமில்லை என்றால் மிகையாகாது.
அதே இறைவனில் இருந்து புறப்பட்டு வந்த இயேசு, தமது சீடர்களை அனுப்பி, "விண்ணரசு நெருங்கிவந்துவிட்டது" என்று அறிவிக்கச் சொல்கிறார். அவர்கள் பணம் அல்லது பொருளாதார பாதுகாப்பை நம்பாமல், இறைவனின் பராமரிப்பை நம்பி செல்ல வேண்டும் என்பது முதன்மையான கட்டளையாக தருகிறார். மேலும், "இலவசமாகப் பெற்றீர்கள்; இலவசமாகக் கொடுங்கள்" என்று கூறி, மனுக்குலத்திற்கான அன்பு பணியை எந்த எதிர்பார்ப்புமின்றி செய்ய பணிக்கிறார்.
அன்று ஆண்டவர் தொடக்கி வைத்த நற்செய்த பணியானது அதே எதிர்நோக்கோடு ஆரம்பகால திருஅவையில் மலர்ந்து, இன்றளவும் மறைபரப்பு பணிகளின மூலம் தொடர்ந்து நடைபெறுகிறது. நற்செய்தி பணியாளர்கள் உதலில் உலகப் பற்றை கைவிட வேண்டும். இங்கே கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதற்கு கிஞ்சிற்றும் இடமில்லை. அனைத்து நற்செய்தி பணியாளர்களுக்கும் கட்டளை ஒன்றுதான்.
அதேபோல், நம் குடும்பங்களிலும், பயனுள்ள முறையில் நற்செய்தியை பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விசுவாசத்தை வெறுமனே கோட்பாடுகளை , இறைவண்டல்களை மன்னம் செய்ய கற்பிப்பதன் மூலம் அல்ல, மாறாக, தங்கள் வாழ்க்கையில் தெளிவாக வெளிப்படும் உயிரோட்டமுள்ள நம்க்கையை, நற்செய்தியுடனான படிப்பினையை வழங்க வேண்டும்.
ஏனெனில், அன்று சீடர்களைப் போன்றே, இன்று நாமும் ஆண்டவரின் அழைப்பைப் பெற்றுள்ளோம்.
இறைவேண்டல்.
அன்பின் ஆண்டவரே, இறையரசை இப்புவியில் தொடர்ந்து எளிய வாழ்வில் மகிழ்ச்சியுடன் அறிவிக்க எனக்குத் துணிவையும் ஞானத்தையும் அருள்வீராக. ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா).
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
