சிலுவையை ஏற்காத நோன்பு நோன்பாகது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

20 பிப்ரவரி 2026
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
எசாயா 58: 1-9a
மத்தேயு 9: 14-15

சிலுவையை ஏற்காத நோன்பு நோன்பாகது!

முதல் வாசகம்.

ஏசாயாவின் வாசகத்தில், மக்கள் கடவுளிடம் புகார் கூறுகிறார்கள்: "நாங்கள் ஏன் நோன்பு இருக்க வேண்டும்?  கடவுளாகிய நீர் எங்கள் நோன்பைக் கண்டுகொள்ளவில்லை.   நாங்கள் எங்களை வருந்திக் கொள்கிறோம், நீர் அதைக் கவனிக்கவில்லை" என்றார்கள். அதற்குக் கடவுள்  அவர்  விரும்பும் நோன்பு ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும், பசித்தவர்களுக்கு உணவளிப்பதற்கும், வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும், உடையற்றவர்களுக்கு உடை அணிவிப்பதற்கும் - அதாவது இரக்கம், அன்பு மற்றும் பிறர் அன்புப் பணிக்குத்  துணைபோக வேண்டும் என்கிறார். 

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு மீண்டும் நோன்பு பற்றியும் பேசுகிறார். மணமகன் இருக்கும்போது, திருமண விருந்தினர்கள் நோன்பு இருப்பதில்லை என்பதை திருமுழுக்கு யோவானின்  சீடர்களுக்கு விவரிக்கிறார்.  மணமகன் பிரிந்து போனால்  நோன்பு  இருப்பது பொருத்தமானது. அவ்வாறே, இயேசு தம்முடைய சீடர்களுடன் இருக்கும்போது, சீடர்கள்  நோன்பு இருத்தலில் பொருளிளல்லை என்பதை எடுத்துரைக்க  இந்த ஒப்புமையைக் பயன்படுத்தினார். 
 
சிந்தனைக்கு.

நோன்பு என்பது ஒரு அத்தியாவசிய ஆன்மீக ஒழுக்கமாகும். இது பணிவு, மனந்திரும்புதல் மற்றும் கடவுளை நோக்கி உண்மையான மனமாற்றத்திற்கு வழி வகுக்கிறது.  அதே நேரத்தில் நமது மனிதநேய நற்பண்பை வலுப்படுத்துகிறது.
நோன்பு என்பது  உண்மையான தேவையில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்த நம்மை ஈட்டுபடுத்த வேண்டும், ஒடுக்கப்பட்டவர்கள், பசித்தவர்கள், வீடற்றவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை அணுகி உதவுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆண்டவர். ஆம், நோன்பு நம்மை நாமே வெறுமைப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும். 

 ஆகவே இந்தத் தவக்காலத்தில் நோன்பு மற்றும் இறைவேண்டல்  என்பதை வெறுமனே கடமைக்காக ஏற்காமல்,   அதன் நோக்கம் அறிந்து, உணர்ந்து கடைப்பிடிக்க ஆண்டவர் அழைக்கிறார். அப்போதுதான்  எசாயா இறைவாக்கினர் சொல்வது போல “நம் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் நமக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்’ என்பது நம்மில் நிறைவேறும்.  கடமைக்காக நோன்பு என்பது முற்றிலும் பயனற்றது. அது 'விழலுக்கு இறைத்த நீர்' போன்றது.

"பாவத்தையும் அதற்கு வழிவகுக்கும் அனைத்தையும் தவிர்ப்பதற்கு நோன்பு ஒரு சிறந்த உதவி என்று புனித நூல்களும் நமது கிறிஸ்தவ பாரம்பரியமும் கற்பிக்கின்றன. மறைந்த திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்கள்  கூறியது போல், உண்மையான நோன்பு என்பது விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும்.
  
எனவே,  இயேசுவின் மனமாற்றம் மற்றும் மனந்திரும்புதலுக்கான அழைப்பு, அவருக்கு முன்பிருந்த இறைவக்கனர்களைப்போல்  வெளிப்புற செயல்களான "சாக்கு உடை மற்றும் சாம்பல் பூசுதலை  நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக இதயத்தின் மனமாற்றத்தை  நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம். 

கடவுளுடனான நமது உறவில், இந்த மனத்தாழ்மை மிகவும் அவசியம். நாம் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடக்காதபோது, நாம் விரக்தியடைந்து, கடவுளால் கைவிடப்பட்டதாக உணரலாம். இதுபோன்ற தருணங்களில், அவரிடமிருந்து நம்மைத் தூர விலக்கிக் கொள்ளவோ அல்லது நமது சொந்த புரிதலை நம்பவோ தூண்டுகிறது. இது முற்றிலும் தவறு. 


இறைவேண்டல்.

நோன்பினால் அலகையின் ஆளுமையை வெல்ல முடியும் என்றுரைத்த ஆண்டவரே, நான் நோன்பு ஏற்கும்போது, என்  தன்னல இயல்பை விட்டொழிக்கும் மன வலிமையை   அளிப்பீராக. ஆமென்.  
  

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்

+6 0122285452