நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி! | ஆர்கே. சாமி | Veritas Tamil

21 ஜூன் 2025
பொதுக்காலம் 11 ஆம் வாரம் –சனி
2 கொரி 12: 1-10
மத்தேயு 6: 24-34
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி!
முதல் வாசகம்.
திருத்தூதர் பவுல் உடலில் தைத்த முள்போல் அவரை வருத்திக் கொண்டு இருக்கும் தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். கடவுளிடமிருந்து பெற்ற காட்சிகள் மற்றும் வெளிப்பாடுகளைப் பற்றி பெருமை பேசத் தூண்டப்பட்டாலும், கடவுளின் அருளால் அவர் செயல்படுவதை முன்னிலைப்படுத்தி, அவரது பலவீனங்களைப் பற்றி பெருமை பேசுவதை விரும்கிறார்.
கொரிந்துவில், பவுலின் எதிர்ப்பாளர்கள் தங்களுக்கு நிறைய காட்சிகள் மற்றும் பிற ஆன்மீக அனுபவங்கள் இருப்பதாகக் கூறித் திரிந்தார்கள். பவுலுக்கு இதுபோன்ற அனுபவங்கள் இல்லை என்று அவர்கள் பவுலை இழிவுப்படுத்தினர். இதைப்பற்றி கேள்விப்பட்ட பவுல், அவர் மூன்றாம் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும், வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத செய்திகளைக் கேட்டதாகவும் அவர் நினைவு கூர்ந்நு எழுதுகிறார்.
மேலும், அவரது பலவீனங்கள்தான் அவர் தாழ்ச்சிக்குக் காரணம் என்றும், அவரது பலவீனங்களால் அவரால் தற்பெரும்மையுடன் வாழ இயலவில்லை என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். கடவுளின் அருளே அவருக்குப் போதுமானது என்றும், அவர் கொண்ட கடவுளின் வல்லமை பலவீனத்தில் அவருக்கு ஆற்றலாக உள்ளது என்றும் கூறுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம், “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது என்கிறார்.
செல்வம் சேர்ப்பதில் மட்டும் ஒருவர் கவனம் செலுத்தினால், கடவுள் ஓரங்கட்டப்படுவார். ஒருவரின் உடல் தோற்றத்தில் அல்லது ஒருவரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது கூட ஒருவரின் வாழ்க்கையின் மையத்திலிருந்து கடவுள் அகற்றப்பட வழிவகுக்கும் என்பதும், 'நாளைய தினத்திற்காக கவலைப்படாதீர்கள்' என்பதும் இயேசுவின அறிவுரையாக வருகிறது.
சிந்தனைக்கு.
நற்செய்தியில், செல்வமா? கடவுளா? என்ற கேள்வியை இயேசு எழுப்புகிறார். நாம் அன்றாட வாழ்க்கையில் கடவுளைச் சார்ந்து வாழ்வதற்கு வானத்துப் பறவைகளைளோடும் வயல்வெளி மலர்களோடும் உவமையாக ஒப்பிட்டு விவரிக்கிறார்.
வானத்துப் பறவைகள், காட்டு மலர்செடிகள் இவற்றை கடவுள் ஒவ்வொரு நாளும் பராமரித்து வருகிறார். கடவுளின் பராமரிப்பினால் அவை மகிழ்ச்சியாக உயிர் வாழ்கின்றன. ஆனால், அவரது உருவில் படைக்கப்பட்ட நாம்தான் கடவுளின் பாராமரிப்பில் முழுமையான நம்பிக்கை கொள்ளாமல் பல கவலைகளோடு நிம்மதி இழந்து வாடுகிறோம். நிம்மதியான வாழ்வுக்கு ஒரே வழி கடவுளுக்கு ஏற்புடைய காரியங்களை முதலில் நாடுவதாகும். இம்மை சார்ந்த செல்வத்திற்கும் மறுமை சார்ந்த ஆன்மீகத்திற்கும் ஒரே சமயத்தில் எவராலும் கீழ்ப்படிய முடியாது.
நமது இல்லங்களில் உள்ள பீடங்கள் நாளுக்கு நாள் ஓர் அலங்கரிப்பு பொருளாகவும் கிறிஸ்தவர் என்பதற்கான அடையாளப் பொருளாகவும் மாறிகொண்டிருக்கின்றன. எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப் பட்ட நிலையில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறோம். ‘உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் உங்கள்மேல் கவலையாக இருக்கிறார்’ (1பேது 5:7) என்கிறார் பேதுரு. ஆம், கடவுள்தான் நம் மேல் கவலையாக உள்ளார். தொலைந்துபோன மகனின் வரவை எதிர்நோக்கி இருந்த தந்தையைப்போல், நமது நல வாழ்வில் அவர் அக்கறை கொண்டுள்ளார்.
அதனால்தான் இன்றைய நற்செய்தியில் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு மூன்று முறை வலியுறுத்துகிறார். வீண் கவலை நம் சிந்தனையைச் சிதைப்பதோடு, நம் அன்றாட பணியைச் சீர்குலைக்கும். நம் உடலின் பல உறுப்புகள் சீராகச் செயல்படுவதை தடுக்கும். நம் முகத்தை சிதைப்பதோடு, நம்மை மனச்சோர்வடையச் செய்யும். நிறைவாக, நாம் நம்பிக்கையைத் தொலைத்து பலவீனராகுவோம். கவலையால் இத்தகையச் சூழல்களுக்கு ஆளாகுவோர் ஆயிரமாயிரம். சிலர் தற்கொலைக்கும் ஆளாகிவிடுகிறார்கள்.
எதிர்காலத்தைப் பற்றிய கவலையே பலருக்கு இன்றைய முயற்சிகளுக்குத் தடைகல்லாக அமைகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் அவரில இருந்த பலவீனங்களை ஏற்றுக்கொள்வதோடு அவற்றை நேர்மறையான (positive) சிந்தனையோடு தம்மை பெருமைபடுத்தி கொண்டு பணியைத் தொடர்கிறார். அவர் தம்மில் உள்ள பலவீனங்களை நினைத்து சோர்ந்து ஒரு மூளையில் முடங்கவில்லை. மனதில் உறுதி வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டினார்.
சுருங்கச் சொன்னால், நாம் செல்வத்துள் அருளைப் பார்ப்பவர்களாக அல்ல, அருளுக்குள் செல்வத்தைப் பார்ப்பவர்களாக வாழ் முற்பட்டால் நமது வாழ்வு ஒளிமயமாகும். இல்லையேல் என்றும் இருள்மயம்தான்.
அறைவேண்டல்.
தேடுங்கள் கண்டடைவீர் என்றுரைத்த ஆண்டவரே, உலகப்பற்றால் ஈர்க்ப்பட்டு அழிவுக்குரிய செல்வங்களைப் பற்றி கவலைப்படுவதில் எனது நேரத்தையும் சக்தியையும் வீணடித்த காலங்களுக்கு என்னை மன்னிப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
