ஆண்டவரின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

14 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 10 ஆம் வாரம் –சனி
2 கொரி 5: 14-21
மத்தேயு  5: 33-37
 
 
ஆண்டவரின் திருப்பெயரை வீணாகச் சொல்லாதிருப்போம்!

 முதல் வாசகம்.

இயேசு வந்து தம்முடைய தந்தையோடு  நம்மை ஒப்புரவாக்கியதால், நாம் ஒப்புரவாக்கும் பணியை ஏற்றுள்ளோம்  என்பதை புனித பவுல் கொரிந்தியர்களுக்கும் நமக்கும் நினைவூட்டுகிறார். “கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கின்றது” என்கிறார். 
பவுல் அடிகள், மேலும், கிறிஸ்து நம்மீது பேரன்பு கொண்டு நமக்காக வாழ்ந்து இறந்தார் எனில், வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தவருக்காக வாழவேண்டும் என்கிறார்
நிறைவாக,  ஒப்புரவைப்   பெறுபவர்களாக மட்டுமல்லாமல், ஒப்புரவாக்கும்  தூதர்களாகவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்கிறார் பவுல்.  மன்னிப்பை அனுபவித்த மக்களாக, மன்னிப்பு மற்றும் மன்னிப்பின் கொடையை மற்றவர்களுக்கு  அறிவிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் நாம் அனுப்பப்படுகிறோம் என்பதைப் பவுல் வலியுறுத்துகிறார். 

 நற்செய்தி.
 
ஆண்டவராகிய இயேசு, கடவுள் மீதும், கடவுள் தொடர்பான எதன் மீதும் ஆணையிடுபவர்களை  கண்டிக்கிறார். நமது நேர்மையின் உத்தரவாதமாக கடவுளை அழைக்கக்கூடாது. நாம் எல்லா நேரங்களிலும் உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இயேசு, ‘பொய்யானை இடாதீர்’ (இச 23:33) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளையை முன்வைத்து,  எதன்மீதும் அது விண்ணோ, மண்ணோ, எருசலமோ, தலைமுடியோ எதுவாக இருந்தாலும் அதன்மீது ஆணையிட வேண்டாம் என்று சொல்கின்றார். 
மனிதர்களுக்கு  எதன்மீதும் அதிகாரம் கிடையாது என்பதும், எல்லாவற்றின் மீதும் மூவொரு கடவுளுக்கே அதிகாரம் இருக்கின்றது என்றும் அறிவுறுத்துகிறார். 
 
சிய்நனைக்கு.

நான் இன்றைய வாசகங்களைக் குறித்துச் சிந்திக்கும்போது, கடவுள் நம்மை அவருடைய அன்பு, மன்னிப்பு மற்றும் நேர்மையின் தூதர்களாக இந்த மண்ணுலகில் வாழ அழைக்கிறார் என்பதை உணர்கிறேன். நாம் பெற்ற திருழுழுக்கானது, நம்மை இவ்வுலக மக்களாக அல்ல, மாறாக, மேலுலக மக்களாக உருமாற்றியுள்ளது. இதனிமித்தம் நமது எண்ணமும் செயலும் பிறருக்கு விண்ணக வாழ்வைச் சுட்டிக்காட்டுவதாக இருந்தல் வேண்டும்.

எனவே, நாம் புறவினத்தாரைப்போல கடவுளின் திருப்பெயரில்  ஆணையிட்டுக் கொண்டு, அவரை இழிவு படுத்தாமல், சிந்தனையில் தெளிவும் பேச்சில் உண்மையும் கொண்டு வாழும் எதிர்நோக்குக்கொண்ட பயணிகளாக உள்ளோம் என்பதை நினைவில் கொள்வோம். நாம்  பேசும் போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்று உறுதிபட பேச வேண்டும் என்று  இன்று அறிவுறுத்தப்படுகிறோம். ஏனெனில்,   இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது என்கிறார் ஆண்டவர்.

கிறிஸ்துவில் சீடத்துவம் என்பது  ஏட்டுச் சுரக்காய் அல்ல. அது உண்மைக்கான சாட்சிய வாழ்வு.  நாம் நமது வார்த்தைகளில் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா, அல்லது மற்றவர்களை நம்ப வைக்க வெற்று  வாக்குறுதிகளை நம்பியிருக்கிறோமா? இயேசு நம்மை உயர்ந்த சீடத்துவ வாழ்வுக்கு அழைக்கிறார், சீடத்துவ வாழ்வு நமது வார்த்தையையும்,  நமது குணத்தையும், நம்பகத்தன்மையையும் பிரதிபலிக்கிறது. வார்த்தைகளை எளிதில் கையாளக்கூடிய உலகில், இந்த போதனை நமது அனைத்து நடவடிக்கைகளிலும் நேர்மையையும் உண்மையையும் நிலைநிறுத்துவதற்கான நினைவூட்டலாக செயல்படுகிறது. 
ஆகவே, நம் வாயினின்று வெளிப்படும் வார்த்தை ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும். ஒரு மனிதனுக்கு உண்மையே உயர்வு தரும் என்பதை மறுப்பாரில்லை.

இறைவேண்டல்.

ஆண்டவரே, உம் மீதும், தந்தையின் மீதும் ஆணையிடுவதற்குப் பதிலாக, நான் உமது உடனிருப்பில் உமது திருப்பெயரைப் போற்றிப் புகழ உதவுவீராக. ஆமென். 
  


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452