நற்செய்தியைக் கடைப்பிடித்து விண்ணரிசில் பெரியவர்களாவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

12 ஜூன் 2025
பொதுக்காலம் 10 ஆம் வாரம் –வியாழன்
2 கொரி 3: 15- 4: 1, 3-6
மத்தேயு 5: 20-26
நற்செய்தியைக் கடைப்பிடித்து விண்ணரிசில் பெரியவர்களாவோம்!
முதல் வாசகம்.
ஆண்டவராகிய இயேசுவின் சீடராக இருப்பதற்கான இரு முக்கிய அம்சங்கள் நமக்கு நினைவூட்டப்படுகின்றன. முதலாவது, ஒளியாகிய இயேசுவிடமிருந்து வரும் ஒளியைப் பிரதிபலிப்பது. இரண்டாவது, நாம் மற்றவர்களுடன் சமரசம் செய்து, ஒன்றித்திருப்பது.
கொரிந்து மக்களிடம் பேசிய புனித பவுல், தான் அறிவிக்கும் நற்செய்தி செய்தியை மோசே அறிவித்த செய்தியுடன் ஒப்பிடுகிறார். மோசே ஒரு செய்திக்காக கடவுளை அணுகியபோது, கடவுளின் மாட்சி மோசேயின் முகத்தில் காணப்பட்டது. இருப்பினும், காலப்போக்கில், கடவுளின் மாட்சி மோசேயின் முகத்திலிருந்து மறைந்துவிட்டது.
உலகில் உள்ள தீமை காரணமாக நம்ப முடியாதவர்களுக்கு மட்டுமே ஆண்டவராகிய இயேசுவின் மாட்சி மறைக்கப்பட்டுள்ளது என்று புனித பவுல் விவரிக்கிறார். நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி) அறிவிப்பதன் மூலம் கடவுளின் முழு மாட்சியும் ஒளிர்கிறது. எனவே, பவுல் மாட்சியின் ஆதாரம் அல்ல, அவர் ஆண்டவராகிய இயேசுவின் மாட்சியை கொண்டிருப்பவர் மட்டுமே என்கிறார் பவுல்,
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தனது "மலைப்பொழிவை" தொடர்கிறார். அவர் தனது சீடர்களை தனது கால சமயத் தலைவர்களை விட உயர்ந்த நடத்தை கொண்டிருக்க சவால் விடுகிறார். கொலை மட்டுமல்ல, ஒரு சீடருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் எந்த வகையான பிரிவினையோ அல்லது மோதலும் கூட பொறுத்துக்கொள்ளப்படக்கூடாது. மேலும் ஏதேனும் ஒரு வகையான கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதை நிவர்த்தி செய்து, கடவுளின் முன்னிலையில் காணிக்கை செலுத்தும் முன், சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் இயேசு, “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கின்றவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்...” என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டு, கடவுளுக்கான காணிக்கை நல்லுறவோடு செலுத்தப்பட வேண்டும் என்கிறார். நல்லுறவு என்பதில் மன அமைதி இன்றியமையாதப் பண்பாகும். அடுத்திருப்பவர் மீது கொண்ட பகையுணர்வோடு செலுத்தப்படும் காணிக்கைகள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று தெளிவாகச் சொல்கின்றார்.
நம்மில் பகையுணர்வு ஏற்பட காரணமாக இருப்பவை இரண்டு. ஒன்று கோபம், மற்றொன்று தான் என்ற அகங்காரம். இந்த இரண்டு கெட்ட குணங்களுக்கும் நாம் இடம் கொடுத்தால், பகையுணர்வுத் தொடர்ந்தால், சிறு கீரல் என்பது பெரும் கீரலாகி உறவில் விரிசல் ஏற்படுவது திண்ணம். எனவே, அமைதி ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பது ஆலயத்திற்குக் காணிக்கை கொண்டு வருவதைவிட மேலானது என்கிறார் ஆண்டவர். 'ஆறுவது சினம்' என்கிறார் ஔவையார். சிந்திப்போம்....
பகைக் கொண்ட உள்ளம் என்றும் துயரத்தின் இல்லமாகவே இருக்கும். அதிலும் தீராத கோபத்தால் யாரும் நன்மையடையப் போவதுமில்லை. உண்மை என்னவென்றால், சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவர் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவர் என்றும் சொர்க்கவாசி என மனிதரை இரு பிரிவுகளில் அடக்லாம். சகிப்புத்தன்மை குறைவே கோபம் வெளிப்பட காரணமாக உள்ளது என்றால் மிகையாகாது. ஆகவே, குறிப்பாக கிறிஸ்துவின் சீடர்களாகிய நம்மில் அதிகளவு சகிப்புத்தன்மை தேவை.
அடுத்து, இறையாட்சியின் செய்திகளை அறிவிக்க அழைக்கப்பட்ட சீடர்கள் நாம். நாம் ஆண்டவராகிய இயேசுவின் நம்பிக்கைக்குரிய தேர்வு. எனவே, அவரது கூற்றின்படி, அவரது படிப்பினைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி, மீறியவாறே பிறருக்கும் கற்பிக்கிற சீடர்கள் விண்ணரசில் சிறியவர் என அழைக்கப்படுவர். ஆனால், அக்கட்டளைகளைக் கடைப்பிடித்து, அப்படியே பிறருக்கும் கற்பிக்கிற சீடர்கள்தான் விண்ணரசில் பெரியவர் எனப்படுவர் என்பது இன்றைக்கு நமக்குரிய நினைவுறுத்தலாகவும் உள்ளது. நாம் விண்ணரசில் சிறியவர்களாக வாழப்போகிறோமா அல்லது பெரியவர்களாக வாழப்பகிறோமா என்பதை நாம்தான் இன்று முடிவு செய்ய வேண்டும்.
இறைவேண்டல்.
கொடைகளின் ஆண்டவராகிய இயேசுவே, நீர் எனக்களிக்கின்ற படிப்பினைகளை முழு மனதோடு ஏற்று, அதன்படி வாழும் வரத்தையும், அவ்வாறு, வாழ்வதைப் பிறருக்கு அறிவிக்கின்ற பேற்றினையும் எனக்குத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
