பர்னபா போல நாமும் மறைத்தூதர்கள்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

11 ஜூன் 2025                                                                                                                  
பொதுக்காலம் 10 ஆம் வாரம் –புதன்
புனித பர்னபா - திருத்தூதர் -நினைவு
தி.பணிகள் 11: 21b-26; 13: 1-3
மத்தேயு  5: 17-19

பரனபாவைப்போல் நாமும் மறைத்தூதுரைப் பணிக்கு அனுப்பப்பட்ட ‘திருத்தூதர்களே!’

முதல் வாசகம்.

 இன்று புனித பர்னபாவின் நினைவுநாள் என்பதால், முதல் வாசகம் பர்னபாவின் அழைப்பு மற்றும் பணியைப் பற்றிய ஒரு பதிவை நமக்கு வழங்குகிறது. ஆண்டவராகிய இயேசுவின் ஆரம்பகால நம்பிக்கையாளரான பர்னபா, பவுலைத் தேடி  தர்சு நகர் சென்று,  பவுலை அந்தியோகியாவிற்கு அழைத்து வருகிறார், அங்கு அவர்கள் ஒன்றாக நற்செய்திப் பணி  செய்கிறார்கள். 

அந்தியோக்கியாவில் ஒரு வருடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட பிறகு, அங்குள்ள சபையின் தலைவர்கள், தூய ஆவியின் வழிகாட்டுதலின் பேரில், பவுலையும் பர்னபாவையும் மறைபரப்புப் பணிக்காக  அனுப்புகிறார்கள். இந்த அந்தியோக்கியாவில் தான் நற்செய்தியை ஏற்று திருமுழுக்குப் பெற்றவர்கள்  முதன்முறையாக “கிறிஸ்தவர்கள்” - (கிறிஸ்து + அவர்கள்)  என்று அழைக்கப்படுகிறார்கள் என்றும் அறிகிறோம்.  

நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு, முற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட  பழைய உடன்படிக்கையையும் கடவுளின்  வாக்குறுதிகளையும் அழிக்க அவர் வரவில்லை என்றும்,  மாறாக, அவற்றை ஒன்றுவிடாமல்  நிறைவேற்றுவதற்காக அவர் வந்துள்ளார் என்றும் அறிவிக்கிறார். 

பழைய ஏற்றாட்டு  எபிரேய மறைநூலில் அளிக்கப்பட்ட திருச்சட்டமானது விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் அது நிறைவேறும் என்றும், அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என்றும் உறுதிபட தெரிவிக்கிறார்.  

நிறைவாக, திருச்சட்டக் கட்டளைகளில் திரித்துக் கூறுபவர்கள் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்கள் என்றும்  அவற்றைக் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார் என்றும் எடுத்துரைக்கிறார்.

சிந்தனைக்கு.

நாம் அனைவரும் மறைத்தூதுரைக்கக் கடவுளின் தூதுவர்களாக உலகில் அனுப்பப்பட்டுள்ளோம். ‘அனுப்பப்பட்டவர்கள் ‘திருதத்தூதர்கள்’ ஆவர். ஆகவே, திருமுழுக்கினால் நாமும திருத்தூதர்கள் என்பதை மறுப்பதற்கில்லை.  கடவுள் நம்மை கடவுளின் அன்பு, மன்னிப்பு, நேர்மையின் மற்றும் அமைதியின் தூதர்களாக  அனுப்புகிறார்  என்பதை உணர்ந்திட வேண்டும்.

முதல் வாசகத்தில் கண்ட பர்னபா மற்றும் பவுலைப் போலவே, நாமும் இயேசுவின் தூதர்களாக இருக்கவும், தூய ஆவியின் மூலம், இயேசுவின் நற்செய்தியைத் தொடர்ந்து அறிவிக்க அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நாம் உயிரோட்டமுள்ள கிறிஸ்தவர் (கிறிஸ்து + அவர்) ஆவோம்.  இல்லையேல் நேற்று இயேசு கூறியதைப்போன்று உவர்ப்பற்றுப்போன உப்பாக மதிப்பிழந்து போவோம். இது நம் கையில் உள்ளது 

இன்றைய நற்செய்தியில், இயேசு திருச்சட்டத்தை அல்லது கடவுளின் கட்டளைகளைப் பற்றிப் பேசுகிறார். அவர் சட்டத்தை ஒழிக்க வரவில்லை, அதை நிறைவேற்றவே வந்தார்  என்று கூறுகிறார்.  நமது நல்வாழ்வுக்காக  கடவுள் அருளியக் கட்டளைகளைப் பற்றி இயேசு விவரிக்கிறார். இக்காலத்திலும் கிறிஸ்தவர்களில் கொலை, கருச் சிதைவு , கற்பழிப்பு, மணமுறிவு  போன்ற பாதகச் செயல்கள் இருந்துகொண்டுதான உள்ளன. இவை கூடாது என்று திருஅவை அறிவுறுத்தினாலும் கேட்பாரில்லை. 

எடுத்துக்காட்டாக,  கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் (மத் 19:6) என்று திருமணச் சடங்கில் அறிவுறுத்தப்பட்டாலும் தலையாட்டிப் பொம்மைகள் போல் தலையாட்டி விட்டு, ஓரிரு மாதங்களில் மணமுறிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். கருச்சிதைவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது.   நம்மில் உண்மை இருக்க வேண்டும். உலக (சாத்தானின்) அறிவுறுத்தல்களுக்கு அடிமையாகாமல்  இறைவார்த்தையைக் கற்பிப்பது அல்லது போதிப்பது சிறப்பான ஒரு பணி; ஆனால், அதைக் கடைப்பிடித்துக் கற்பிக்கும்பொழுது ஒருவர் விண்ணரசில் பெரியவராகின்றார் என்பது இயேசுவின் அறிவுறுத்தலாக உள்ளது.

ஆகவே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை, கிறிஸ்தவ வாழ்வை, சீடத்துவத்தை விளங்கச் செய்வோம்.

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, நான்  இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி வாழ்ந்து, உமக்கு சாட்சியம் பகிரும் தூதுவனாக வாழ என்னைத் திடப்படுத்துவீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452