அன்னை மரியாவின் தாய்மை நமது மேன்மை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

9 ஜூன் 2025
பொதுக்காலம் 10 ஆம் வாரம் –திங்கள்
தொ. நூல் 3: 9-15, 20 அல்லது தி.பணிகள் 1: 12-14
யோவான் 19: 25-27
(புனித கன்னி மரியா, திரு அவையின் அன்னை-விழா
அன்னை மரியாவின் தாய்மை நமது மேன்மை!
முதல் வாசகம்.
ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்திற்குப் பிறகு, தொடக்க நூலில் வரும் வாசகத்தில், சாத்தானின் உருவகமாகத் தரப்பட்டுள்ள பாம்பின் சந்ததியினருக்கும் புதிய ஏவாளின் சந்ததியினரான திருஅவைக்கும் இடையே நிலவவிருக்கும் போராட்டத்தைப்பற்றி கடவுள் பேசுகிறார். புதிய ஏவாளின் ஒரு மகனைப் பெற்றெடுப்பார், அவர் தீய சந்ததியினருடன் போரிடுவார், மேலும் அவர் போரில் காயமடைவார், ஆனால் தீய மீது இறுதி வெற்றியைப் பெறுவார் என்கிறார் கடவுள்.
திருத்தூதர் பணிகள் நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள மற்றொரு மாற்று முதல் வாசகம், திருஅவையின் தொடக்கத்தில் திருஅவையில் மரியாவின் பங்கேற்பைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தருகிறது. மரியா திருத்தூர்களுடனும் பிற ஆரம்பகால சீடர்களுடனும் கூடி அவர்களுடன் இறைவேண்டலில் இணைந்துள்ளதை லூக்கா விவரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில் யோவான் கல்வாரியில் நிகழ்ந்த ஒரு சிறப்பு அம்சத்தை விவரிக்கிறார். இயேசு சிலுவையில் இருந்து கீழே பார்க்கும்போது, அவர் தனது தாயையும் தனது அன்புக்குரிய சீடரையும் காண்கிறார். அவர் அவர்களை ஒருவர் ஒருவரிடம் ஒப்படைக்கிறார். இது இயேசு தனது தாய் மரியாவை திருஅவைக்குத் தாயாகத் திருஅவையிடம் ஒப்படைப்பதை வெளிப்படுத்துகிறது.
சிந்தனைக்கு.
இன்று திருஅவை கன்னி மரியா திருஅவையின் தாய் எனும் விழாவைக் கொண்டாடுகிறது. திருஅவையின் தாயான புனித கன்னி மரியா உலக மீட்பரை வெளிப்படுத்துவதில் அவரது பங்கையும், திருஅவையில் அவரது நிலைப்பாட்டையும் நாம் நினைவுகூர்கிறோம். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டில், ‘ கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற விழாவை, பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட அழைப்புவிடுத்ததை நாம் மறந்திருக்கமட்டோம். அவரது அழைப்பை ஏற்று கத்தோலிக்கத் திருஅவை இன்று கன்னி மரியாவை, 'திருஅவையின் தாய்' எனக் கொண்டாடுகிறோம்.
கத்தோலிக்கத் திருஅவை அன்னை மரியாவுக்கு செலுத்தும் வணக்கமானது கத்தோலிக்க மரபு, மறையுண்மைகள் மற்றும் விவிலிய அடிப்படையிலானது என்பதை நாம் அறிவோம். இறைவன் இயேசு மரியாவில் மனுவுவானதால், இவரை கடவுளின் தாய் என நாம் ஏற்கிறோம்.
மேலும், இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த போது தனது தாயை யோவான் மூலமாக மனுக்குலத்திற்குத் தாயாகத் தந்ததைப் பதிவு செய்கிறார். அதுமட்டுமல்ல தூய ஆவி நிழலிட்டதால் இயேசுவைப் பெற்றெடுத்த அன்னை மரியா இரண்டாவது முறை பெந்தகோஸ்தே திருவிழாவின் போது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட போது இயேசுவின் பிள்ளைகளாகிய திருஅவையைப் பெற்றெடுத்தாள் என்பதை திருத்தூதர்பணிகள் நூலில் வாசிக்கிறோம். இந்த விவிலிய ஆதாரத்தை மையமாகக் கொண்டே தொடக்கத் திருஅவை மரியாவை திருஅவையின் தாயாக ஏற்று உயர்ந்த வணக்கம் செலுத்தி வருகிறது.
ஆம், அன்னை மரியா அன்றும் இன்றும் நமது வழிபாட்டிற்கு உரியவர் அல்ல, மாறாக நமது உயர்ந்த வணக்கத்திற்கு உரியவர் ஆவார். அவர் நம் அனைவருக்கும் தாய். முதல் வாசகங்களாகத் தரப்புட்டுள்ள தொ. நூல் 3: 9-15, 20 அல்லது தி.பணிகள் 1: 12-14 வாசகங்களில் அன்னை கன்னி மரியாவை மறைமுகமாகவும், நேரிடையாகவும், 'திருஅவையின் தாய்' என வெளிப்படுத்துகின்றன.
லூக்கா நற்செய்தியின்படி, 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!' (லூக் 1:38) என்று வானதூதர் கபிரியேல் வழியாக இறைவனிடம் தன்னை ஒப்படைத்த மரியா தன்னை முழுமையாக இறைவனின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்ததால், இயேசுவின் திருவுடலான திருஅவைக்குத் தாயாக, மனமுவந்து ஏற்றுக்கொண்டார். “ இதோ உம் மகன்” என யோவானைக்காட்டி இயேசு கூறிய வார்த்தை இன்று நமக்கும் உரிய வார்த்தைகள் என்றால் மிகையாகாது.
எனவே, புனித பவுல் அடிகளின் படிப்பினைப்படி நாம் இயேசுவின் திருவுடலில் உறுப்புகள் என்றால் அந்த திருவுடலை ஈன்ற தாய் நமக்கும் (திருஅவைக்கும்) தாயாகிறார் என்பதை அறிந்துணர்வோம். மரியே வாழ்க இன்று போற்றிப் புகழ்வோம். அவரே பாவிகளாக இருக்கிற நமக்காக இப்பொழுதும் எப்பொழுதும் நமது மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும் அன்பு அன்னை.
இறைவேண்டல்.
அனபான இயேசுவே, உமது அன்னை மரியாவையும் அவருடைய அன்பான பராமரிப்பையும் என்றும் நினைவில் கொள்ளவும், அவரில் இருந்த பணிவு, கீழ்ப்படிதல் மற்றும் கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வதில் கொண்டிருந்த முன்மாதிரியைப் பின்பற்றவும் எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
