பலன் தரும் நிலமாகட்டும் நமதுள்ளம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

24 ஜூலை 2024 
பொதுக்காலம் 16 ஆம் வாரம் -புதன்
 
எரேமியா 1: 1, 4-10
மத்தேயு   13: 1-9


பலன் தரும் நிலமாகட்டும் நமதுள்ளம்!


முதல் வாசகம்.


அடுத்து வரும் சில நாள்களுக்கு முதல் வாசகமானது எரேமியா இறைவாக்கினரின் இறைவாக்கு நூலில் இருந்து எடுக்கப்படுவதால், அவரைப் பற்றிய சிறு விளக்கத்தைப் பகிர விரும்புகிறேன். இறைவாக்கினர் பட்டியலில் எசாயா, எரேமியா, எசேக்கியேல் மற்றும் தானியேல் ஆகிய நால்வரும் பெரிய இறைவாக்கனர் எனப்படுவர். எரேமியா என்ற பெயருக்கு ‘யாவே (கடவுள்) நிறுவுகிறார்' என்று பொருள்.  இவர் அழுகையின் இறைவாக்கினர் என்றும் அழைக்கப்படுவதுண்டு.  இவர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். இவரது காலம்  கி.மு. 628- 580 ஆகும்.  இவர் குருக்குலத்தைச் சேர்ந்தவர்.

இவர்  இருபது வயதில் இறைவாக்குப் பணிக்கு அழைக்கப்பட்டவர்  அனைத்துக்கும் மேலாக, இவர் தாயின் வயிற்றில் உருவாகும் முன்பே இறைவாக்குப் பணிக்கு அழைக்கப்பட்டவர்  என்று கடவுளே கூறுவதைக் கேட்கிறோம் (1:4-19).  இவரைப் பற்றியக் குறிப்புகளை 2 அரசர் நூலில், அதிகாரங்கள் 22-25 வரை உள்ள பகுதியில் காணலாம். இவரது காலத்தில் தென்னாடான யூதேயா அழிவையும் சரிவையும் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பாபிலோனியர் 
யூதேயாவின் மீது  படையெடுக்கும் காலம் நெருங்கிக்கொண்டிருந்தது.

  
முதல் வாசகம்.


எரேமியா ஓர் இறைவாக்கினராக வேண்டும் என்று திட்டமிடவோ, விரும்பவோ இல்லை. அவர் இளைஞனாக இருக்கும்போதே, கடவுள் அவரை இறைவாக்குரைக்க  அழைக்கிறார். அப்போது, எரேமியா தனது இளமை பருவத்தையும்  ஆற்றல் இன்மையையும் காரணம் காட்டி கடவுளின் அழைப்பைத் தட்டிக் கழிக்கிறார்.  ஆனால், கடவுள்  எரேமியாவை தாயின் வயிற்றில் கருவுற்றிலுக்கும் போதே   இறைவாக்குப் பணிக்குத் தேர்ந்துகொண்டதாக விவிரித்து, எரேமியாவைத் திடப்படுத்துகிறார்.

தயக்கம் காட்டிய எரேமியா யூதேயா மக்களுக்கு அறிவிக்க வேண்டிய  இறைவாக்கை கடவுள், அவரது வாயில் பதிய வைத்ததோடு, அவரை  மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக ஏற்படுத்துகிறார். 


நற்செய்தி.

இன்று இயேசு கூறிய விதை விதைப்பவர் உவமையைக் கேட்கிறோம்.  இந்த உவமையின்படி, விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான். அவன் விதைக்கையில் சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டன.  ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றை உண்டன. சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன. அவை முளைத்தபின்  ஈரமில்லாததினால் வெயிலில் உலர்ந்துபோயின. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன. முட்செடிகளோடு  வளர்ந்ததால் அவவையும்   நெருக்கிப்போட்டன.  சில விதை நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். 

நிறைவாக இந்த உவமையைப் பகன்றபின், கேட்பதற்குக் செவியுள்ளவன் கேட்கட்டும் என்று முடிக்கிறார்


சிந்தனைக்கு.

   
நற்செய்தியில், இயேசு ஒரு படகில் ஏறி தனது மறையுரையைத்  தொடர்கிறார். அவர் விதைகள் விதைப்பவரைக் கொண்டு ஓர் உவமையை உருவாக்கி விண்ணரசு செய்தியை வழங்குகிறார். இயேசுவின் உவமைகள் எப்போதுமே பாமர மக்கள் புரிந்து கொள்ளும் வகையிலேயே இருக்கும். இந்த உவமையும் அப்படியே, விதைகளையும், விதைப்பவனையும் இயேசு களமாக தேர்ந்தெடுக்கிறார்.

விதைப்பவர்  விதைகள் விழும் நிலத்தின் வகையைப் பொறுத்து வெவ்வேறு எதிர்வினைகளைப் பார்க்கிறார்.  இங்கே நான்கு விதமான நிலப்பரப்பு விவரிக்கப்படுகிறது. இது நான்கு விதமான மனநிலையைக் கொண்ட மக்களைக் குறிக்கிறது.

1.வழியருகே உள்ள நிலம், 
2.கற்பாறை நிலம், 
3.முள்ளுள்ள நிலம், 
4.நல்ல நிலம். 

விதைக்கச் செல்பவருக்கு விதை இன்றியமையாத ஒன்று. விதையின்றி எதை விதைப்பது? நமக்கு விதை என்பது இறைவனின் வார்த்தை. இறைவனின் வார்த்தை நம் கையில் உள்ளது. மேலும்,  அது இலவசமாக நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 

விதைகள் மண்ணில் புதைக்கப்படாவிட்டால் அவை முளைப்பதில்லை.   இறைவனின் வார்த்தையும் அவ்வாறே, விவிலியத்திலேயே இருந்துவிட்டால் யாருக்கு என்ன பயன்? அது மனித மனங்களில் (நிங்களில்) விதைக்கப்பட வேண்டும்.  

ஒவ்வொரு விதையின்  வளர்ச்சியை மூன்று பிரிவாகப் பார்க்கலாம்

1.மண்ணைப் பிளந்துகொண்டு வெளியே வரும் முளை.
2.கதிராக வளர்ந்து வரும் செடி.
3.கதிருக்குள் தானியம் கொண்ட முதிர்ச்சி 

இன்றைய கால கட்டத்தில் இறைவார்த்தையானது, திருப்பலியிலும், மறைக்கல்வி வகுப்புகளிலும், விவிலய வகுப்புகளிலும்  நம் உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. இங்கே விதைப்பவர் இறைவன். ஆனால், நம்மில் விழும் இறைவார்த்தை நம்மில் வளர்ச்சியுற எவை தடையாக உள்ளன என்பதை ஆழ்ந்தறிந்து, உள்ளத்தை நல்ல நிலமாக மாற்ற வேண்டும்.   என்றும் அவசரம், எதிரும் அவசரம் என்றுள்ள இக்காலத்தில் கடவுளுடைய வார்த்தையை  நாம்  எவ்வாறு மனதில் பதிய வைக்க வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.   ஒரு காதில் வாங்கி, அடுத்த காது வழியாக விட்டுவிட்டால், நாம் சாலையோரம், வழியோரம், முட்புதரிலும்  விழுந்த விதைகளுக்கு  ஒப்பாவோம்.

ஆகையால், ‘யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகின்றேனோ அவர்களிடம் செல்; எவற்றை எல்லாம் சொல்லக் கட்டளை இடுகின்றேனோ அவற்றைச் சொல். அவர்கள் முன் அஞ்சாதே. ஏனெனில், உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கின்றேன்,’ என்றுதான் இன்று நமக்கும் அறிவுறுத்துகிறார் ஆண்டவர். இந்த அறிவுறுத்தலை ஏற்று, விதைகளை வீணடிக்காமல், அதை மக்கள் மனதில் விதைப்பதில கண்ணும் கருத்துமாக இருப்போம்.
 


இறைவேண்டல்.


தாயின் வயிற்றினிலே என்னை பெயர் சொல்லி அழைத்த ஆண்டவரே, உம் கையால் என் வாயைத் தொட்டுத் தூய்மைப்படுத்தியருளும். உம் வார்த்தைகளை என் வாயில் வைத்து, இறைவாக்குப் பணியை தொடர என்னை ஆசீர்வதியும்.  ஆமென்.

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452