இயேசுவைப் போன்று செயல்வீரர்களா நாம்? | குழந்தைஇயேசு பாபு | VeritasTamil

திருவருகை காலம்-மூன்றாம் வாரம் புதன்
I: எசா: 45:6-8, 18, 21-25
II:  திபா:  85:8-9, 10-11, 12-13
III: லூக்:  07: 18-23

சொல்லும் செயலும் இணைந்து செல்வதே ஒரு மனிதனுக்கு மதிப்பையும் மரியாதையையும் உயர்த்துகின்றது.  ஆனால் நம்மில் பலருடைய வாழ்வில் சொல் முதன்மையாக இருக்கிறதே தவிர செயல்பாட்டில் பொதுவாகவே நாம் அனைவரும் சற்று பின்தங்கி விடுகிறோம். நம் சொற்கள் பல நேரங்களில் நாம் எப்படிப்பட்டவராய் இருக்கப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. நம் செயல்கள்தான் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து நாம் யார் என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.
நம் ஆண்டவர் இயேசுவோ சொற்களே தேவையில்லை. செயல்கள் மூலமாக நாம் யார் எனக் காட்டினால் போதும் என்ற கருத்தை நம்முன் வைக்கிறார் இன்று. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுதான் மெசியாவோ?  எனக் கண்டறிய வந்த யோவானின் சீடர்களிடம்  "ஆம்.  நான்தான் மெசியா. நான் இனி செய்யப்போவதை நீங்கள் காண்பீர்கள் " என இயேசு சொல்லவில்லை. மாறாக அவரால் நிகழ்ந்த வல்ல செயல்களை, நல் அடையாளங்களைக் கூறி அவர்களுடைய மனதில் உள்ள தயக்கங்களையும் சந்தேகங்களையும் உடைத்தெறிகிறார் இயேசு. தன் செயல்களில் தன்னை எண்பித்துக்காட்டுகிறார் அவர்.

திருவருகைக்காலத்தில் கிறிஸ்துவின் வருகைக்காக நம்மையே நாம் தயாரித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாம் "கிறிஸ்தவர்கள் " என்பதை நாம் எவ்வாறு எண்பித்துக் காட்டப்போகிறோம்?. நம்முடைய சொற்களாலா?  அல்லது இயேசுவைப் போன்று செயல்களாலா? 

"நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” என்று இயேசு யோவான் 13:35 ல் கூறிகிறார். இங்கே அன்பு என்ற சொல்லுக்கு இணையாக நாம் நற்செயல்கள் என்ற சொல்லை உபயோகித்துப் பார்ப்போம். ஏனென்றால் அன்பிலிருந்தே நற்செயல்கள் தோன்றுகின்றன. அவ்வாறெனில் நாம் ஒருவர் மற்றவருக்கு செய்யும் நற்செயல்களால் இயேசுவின் சீடர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்பதை எண்பித்துக் காட்டுகிறோம் அல்லவா! வீண்சொற்களைக் கொண்டு நான் அப்படிப்பட்டவள், என்னைப் போன்று எவனும் இருக்கமுடியாது எனச் சொல்வதை விட்டுவிட்டு நம்முடைய செயல்களால் கிறிஸ்துவை பிரதிபலித்துக் காட்ட முயல்வோம். அப்போது அனைவரும் நம்மைத் தயக்கமின்றி ஏற்றுகொள்வர் என்பது உறுதி. இயேசுவைப் போல செயல்வீரர்களாக மாற முயலுவோமா?

 இறைவேண்டல் 
அன்பு இயேசுவே!  உம்மைப் போல நாங்களும் வார்த்தை வீரர்களாயன்றி செயல் வீரர்களாய் துலங்கி உம் சீடர்கள் என்பதை எண்பித்துக்காட்ட வரமருளும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்