காலம் இது

அவர்களிடம், “என்ன, உறங்கிக் கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார் - லூக்கா 22-46. 

1.பெதஸ்தா குளத்தினருகே முப்பத்தியெட்டு ஆண்டுகளாய் வியாதியாய் படுத்திருந்த ஒரு மனுஷனை இயேசு சுகமாக்கினார். அந்த படுக்கையைப் பாருங்கள். அது முப்பத்தியெட்டு வருஷமாய் பெதஸ்தா  குளத்தண்டை கிடந்த படுக்கை. அந்தப் படுக்கையில் படுத்திருந்த மனிதருக்கு, சுகமடைவோம் என்ற நம்பிக்கையே போய் இருக்கும்.  

2. இறைவாக்கினர் யோனாவின் படுக்கை 

கப்பல் தலைவன் அவரிடம் வந்து, “என்ன இது? இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே! எழுந்திரு. நீயும் உன் தெய்வத்தை நோக்கி வேண்டிக்கொள். ஒருவேளை அந்தத் தெய்வமாவது நம்மைக் காப்பாற்றலாம். நாம் அழிந்து போகாதிருப்போம்” என்றான். இறைவனால் நினிவேவுக்கு போகும்படி அழைக்கப்பட்ட, கடவுளை நன்கு அறிந்த யோனா கடல் கொந்தளித்துக் கொண்டிருக்கிற வேளையிலே, படுக்கையிலே தூங்கி கொண்டிருப்பது சரியா?

3.எலியாவின் படுக்கையைப் பாருங்கள்

சூரைச் செடியின் கீழ் படுத்து, நித்திரை பண்ணின அவரை ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். எலியா உடனே தன் படுக்கையிலிருந்து எழுந்து போஜனம் பண்ணினான். நாம் படுத்து உறங்குகிற காலம் இல்லை இது . நாம் செல்ல  தூரம் இன்னும் உள்ளது. சோர்வு, சோம்பல் இவற்றை விட்டு எழுந்திருப்போம். அதிகாலையில் எழுந்து ஜெபிப்போம். அவர் கிருபைகளை நாடுவோம் . நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை, கடமைகளை செய்வதற்கு வேண்டிய வலிமையையும், வல்லமையையும் ஆண்டவரிடம் கேட்போம்.

ஜெபம்: அன்பு ஆண்டவரே, உறக்கம் கலைந்து உற்சாகம் கொண்டு ஒவ்வொரு நாளும் உம் பாதத்தில் அமரும் வரத்தை எங்களுக்கு தாரும். ஆண்டவரே உம்மையே முன் நிறுத்தி எங்களுடைய கடமைகளை செய்து முடிக்க அருள் செய்யும். எங்களுடைய வாழ்வில் ஒவ்வொரு காலை பொழுதையும் உம் அருளாலும் ஆசீராலும் நிரப்பும். ஆமென்.