இணைந்து இருப்போம்

முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்” என்று அவர்களிடம் கூறினார் - மத்தேயு 19-30. ஆண்டவர் நம்மை அழைத்துள்ளார். நிறைவாக ஆசீர்வத்திதுள்ளார். அதனால் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நாம் இருக்க கூடாது. நாம் அழைத்த அழைப்பில் நிற்காமல் வழி தவறினால் நிச்சயமாக நாம் பின் தள்ளப்படுவோம். ஆண்டவர் முதலில் சவுல் அரசரை அரசராக்கினார். அபிசேகம் பண்ணினார். ஆனால் சவுல்  ஆண்டவருடைய வார்த்தையை விட்டு வழி மாறுகிறார். எனவே ஆண்டவர் சவுலை விட்டு தாவீதை தேர்ந்தெடுக்கிறார். 

முதன்மையாக இருந்த முதல் அரசராக இருந்த சவுல் கடைசியில் தள்ளப்பட்டு , இறுதியில் தன் வாளில் தானே விழுந்து சாகிறார். ஆனால் அதன் பின்வந்த  தாவீது ஆண்டவரை தன் கண் முன் கொண்டு வாழ்ந்தார். பெரும்பாலான திருப் பாடல்கள் அவருடைய வார்த்தைகளே. பிந்திய அவர் முதன்மை பெற்றார்.

இயேசுவின் சீடரான யூதாஸ் அவரால் அழைக்கப்பட்டு  அவர்கூடவே இருந்து அவரோடு சாப்பிட்டு அவரை நேரடியாக பார்த்து பேசி பழகி முதன்மையாக இருந்தார்.  ஆனால் பணத்தில் மயங்கி இயேசுவையே காட்டி கொடுத்து , பின் தள்ளப்பட்டு இறுதியில் தூக்கு போட்டு செத்தார். அதன் பிறகு இறைவேண்டலோடு மத்தியா என்பவர் திருத்தூதராக தீர்வு செய்யப்படுகிறார். பிந்திய இவர் முதன்மை பெற்றார். கிறிஸ்தவர்களுக்கு எதிராக தீங்கு பண்ணி வந்த சவுல் மனம் திரும்பி ஏசுவுக்காகவே வாழ்ந்தும், திருமுகங்கள் பல எழுதி, நல்ல ஓட்டத்தை ஓடி முடித்தார். பிந்திய இவர் முந்தியவர் ஆனார்.

எனவே பாவம் நம்மை ஆட்கொள்ள விடாது பார்த்து கொள்வோம். எப்பொழுதும் இறைவனுடன் இணைந்து இருப்போம். 

ஜெபம்: ஆண்டவரே  உம்மை போற்றுகிறேன். நீர் அழைத்த அழைப்பில் நிலைத்து இருந்து உம்மோடு எப்பொழுதும் இணைந்து வாழ அருள் தாரும். பலகீனமான எங்களுக்கு உமது தூய ஆவியின் துணை தாரும். நாங்கள் நல்ல ஓட்டத்தை ஓடி நீர் கொடுக்கும் நிலை வாழ்வை பெற்று கொள்வதில் முதன்மையாக வர அருள் தாரும். ஆமென்.

Tamil Survey Popup Image