ஆசியத் திருஅவை சமூகத்துடன் இணைந்து பயணிக்க வேண்டும்: கர்தினால் கிகுச்சி | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12-வது நிறைவிறுதிப் பேரவை ஜூலை 20 முதல் 26 வரை இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள நிலையில், திருஅவை தனிமையில் இருந்து தனது மறைப்பணியை நிறைவேற்ற முடியாது என்றும், சமூகத்துடன் ஆழமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் FABC பொதுச் செயலரும், ஜப்பானின் டோக்கியோ பேராயருமான கர்தினால் தார்சிசியோ இசாவோ கிகுச்சி, SVD அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

பேரவையை முன்னிட்டு ரேடியோ வெரித்தாஸ் ஆசியா ஊடகத்திற்கு அளித்த செய்தியில், "ஒன்றிணைந்த மனமாற்றமும், ஆசியாவில் பாலங்களாகவும் பாலங்களை அமைப்பவர்களாகவும் இருப்பதற்கான திருப்பணியும்" என்ற பேரவையின் கருப்பொருளை விளக்கி, ஆசியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பயணிக்க திருஅவை அழைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

"ஆசியாவில் நாம் வாழும் சமூகங்களில் கத்தோலிக்கர்கள் பெரும்பாலும் சிறுபான்மையினராகவே உள்ளோம். கத்தோலிக்கத் திருஅவை தனிமையில் இயங்குவதில்லை; சமூகத்துடனும், பிற மதங்களுடனும், பல்வேறு கலாச்சாரங்களுடனும், மொழிகளுடனும் நமக்கு உறவுகள் உள்ளன" என்று கர்தினால் கிகுச்சி அவர்கள் தெரிவித்தார்.

எனவே, ஒன்றிணைந்த பயணத்தை (Synodality) திருஅவையின் உள்நிலை உறவுகளுக்குள் மட்டுப்படுத்தாமல், வெளி உலகத்துடனான உறவுகளையும் உள்ளடக்கிய வாழ்வியல் முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"ஒன்றிணைந்த பயணத்தைப் பற்றி பேசும்போது, நமக்குள் உள்ள உறவுகளைப் பற்றியே மட்டும் பேச முடியாது; சமூகத்துடனும் உலகத்துடனும் உள்ள நமது உறவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஆசியாவில் உரையாடலே திருஅவையின் மறைப்பணியின் அடையாளமாக இருந்து வருகிறது" என்று அவர் கூறினார்.

மேலும், ஒன்றிணைந்த பயணம் என்பது ஆசியாவின் சமூக, அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மாற்றங்களுக்கு மத்தியில் திருஅவை எவ்வாறு இறைவனின் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும் என்பதை பகுத்தறியும் மனமாற்றத்திற்கும் இறைவாக்குப் பணிக்கும் விடுக்கப்படும் அழைப்பு என்றும் அவர் விளக்கினார்.

ஆசியா வன்முறை, வறுமை, நோய் போன்ற பல சவால்களை எதிர்கொண்டாலும், நம்பிக்கைக்கும் புதிய வாய்ப்புகளுக்கும் குறைவில்லை என்றும் குறிப்பிட்ட கர்தினால், இந்தப் பேரவையில் தூய ஆவியார் ஆசியத் திருஅவைகளை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதை ஆயர்கள் இணைந்து பகுத்தறிவார்கள் என்றார்.

"ஒன்றிணைந்த பயணம் என்பது ஒரு கோட்பாடோ அல்லது நிர்வாக மாற்றமோ அல்ல; அது திருஅவையின் மறைப்பணியையும் நமது சாட்சிய வாழ்வையும் வடிவமைக்கும் வாழ்வியல் உண்மையாக இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

ஆசியாவின் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், அன்பு, அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை, ஒருவருக்கொருவர் ஆதரவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் வழியாக மக்களை இணைக்கும் பாலங்களாகவும், பாலங்களை அமைப்பவர்களாகவும் திருஅவை இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேலும், திருஅவை தனியாக தீர்வுகளை வழங்குவது மட்டுமல்ல; அனைவரையும் ஒன்றிணைத்து, மனித மாண்பைப் பாதுகாக்கும் பொதுவான தீர்வுகளை இணைந்து உருவாக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஜூலை 20 முதல் 26 வரை நடைபெறும் FABC நிறைவிறுதிப் பேரவையில், ஆசிய நாடுகளின் ஆயர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மேய்ப்புப் பணி மற்றும் சமூகச் சவால்களுக்கு மத்தியில், திருஅவையின் ஒற்றுமை, பங்கேற்பு மற்றும் மறைப்பணியை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

Tamil Survey Popup Image