பூட்டானில் நடைபெற்ற சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற கத்தோலிக்க அருட்தந்தை !| Veritas tamil

பூட்டான், டிசம்பர் 10, 2025: வலிமை, கட்டுப்பாடு மற்றும் விசுவாசம் சர்வதேச அரங்கில் ஒன்றிணைந்த தருணமாக, அருட்தந்தை டெனிஸ் டொமினிக் ஜோசப், 2025 நவம்பர் 14 முதல் 17 வரை திம்பூவிலுள்ள பூட்டான் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற SBKF 12-ஆவது சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சர்வதேச பவர் லிப்டிங் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்தார்.

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பவர் லிப்டிங்கில் தமது பயணத்தைத் தொடங்கிய அருட்தந்தை டெனிஸ், இந்த விளையாட்டில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளார். இதற்கு முன், 2024 டிசம்பர் மாதம் புனேவில் நடைபெற்ற தேசிய பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்பில் அவர் முக்கியமான வெற்றியைப் பெற்று, தனது அர்ப்பணிப்பிற்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றிருந்தார்.

இந்த சர்வதேச சாம்பியன்ஷிப்பின் மிக உணர்வுபூர்வமான தருணங்களில் ஒன்று, தமது அருட்பாவாடையில் பதக்கம் பதிந்த நிலையில் மேடையில் நின்ற தருணமாகும்—பல ஆண்டுகளாக அமைதியாகக் காத்திருந்த ஒரு கனவு அது. இந்த யூபிலி ஆண்டில், தனிப்பட்ட புகழுக்காக அல்ல, மாறாக, அருட்பணியும் மனித வலிமையும் ஒன்றாகப் பயணிக்க முடியும் என்பதையும், விசுவாசம் கட்டுப்பாட்டுடன் போட்டியிடாது; அதை மேலும் வலுப்படுத்தும் என்பதையும் வெளிப்படையாக சாட்சியமளிக்க, தமது அருட்பாவாடையில் மீண்டும் பதக்கங்கள் பிரகாசிக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் தமக்குள் எழுந்ததாக அவர் பகிர்ந்துகொண்டார்.

Catholic Connect-க்கு அவர் அளித்த பேட்டியில்,
“இந்த சாதனையை யூபிலி ஆண்டிற்கும், குறிப்பாக எங்கள் குருக்கள் மற்றும் துறவிய பெற்றோருக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்களின் பிரார்த்தனைகள், தியாகங்கள், வழிகாட்டல்கள் தினமும் எனக்கு ஊக்கமும் வலிமையும் அளிக்கின்றன. சர்வதேச மேடையில் நின்றபோது, கடவுளின் அருளும், முழு திருச்சபையின் ஆதரவும் என்னுடன் இருப்பதை உணர்ந்தேன்,” என்று தெரிவித்தார்.

அன்னை மரியா – என் பயிற்சியாளர், என் வலிமை

இந்த வெற்றியை மேலும் ஆழமுள்ளதாக்கிய அம்சம் என்னவெனில், போட்டியின் போது அவருடன் தனிப்பட்ட பயிற்சியாளர் ஒருவர் உடனிருந்தது இல்லை. அதற்குப் பதிலாக, ஆசீர்வதிக்கப்பட்ட கன்னி மரியாவின் அன்பான வழிநடத்தலுக்கே அவர் தம்மை முழுமையாக ஒப்படைத்தார்.
“இந்த முறை, அன்னை மரியாதான் என் பயிற்சியாளர், என் வலிமை, என் பாதுகாப்பு, என் அனைத்தும்,” என்று அவர் Catholic Connect-க்கு தெரிவித்தார்.

மேலும், தனது பவர் லிப்டிங் பயணத்தில் தொடர்ந்து துணைநின்ற குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அருட்தந்தை டெனிஸ், புனே, காத்கி நகரிலுள்ள புனித இக்னேஷியார் ஆலயத்தில் உதவி பங்குத் தந்தையாக பணியாற்றி வருகிறார். இளைஞர்களை ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி வழியாக சுவிசேஷப்படுத்த வேண்டும் என்ற விருப்பமே அவரை இந்த விளையாட்டில் ஈடுபடத் தூண்டியது. போட்டி முழுவதும் விசுவாசம் தம்முடன் நெருக்கமாக இருந்ததாகவும், கழுத்தில் ஜெபமாலை அணிந்திருந்தது தமக்கு வலிமையையும் அன்னை மரியாவின் பாதுகாப்பையும் அளித்ததாகவும் அவர் பகிர்ந்துகொண்டார்.

Tamil Survey Popup Image