இயேசுவோடு கொண்ட சகோரத்துவமே நமது சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

24 செப்டம்பர் 2023,                                                                                           பொதுக்காலம் 25ஆம் வாரம் – செவ்வாய்   

நீதிமொழி  21: 1-6, 10-13
லூக்கா 8: 19-21


 
இயேசுவோடு கொண்ட சகோரத்துவமே நமது சீடத்துவம்!


முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகமானது,  கடவுளுடனான நமது நெருங்கிய உறவு  வாழ்க்கைக்கு சில எளிய, ஆனால் ஆழமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. கடவுள் ஒருவரின் வெளித்தோற்றத்தைப்பாரப்பதில்லை, மாறாக அவரது உள்ளத்தையும் எண்ணத்தையும் சீர்த்தூக்கிப் பார்க்கிறார் என்பது வெளிப்படுத்தப்படுகிறது.

வெறும்  சடங்கு சம்பிரதாயங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைவிட,  இறை பற்றுடன் சரியானதைச் செய்வது முக்கியம் என்றும், பெருமை மற்றும் அகந்தை பாவத்திற்கு வழிவகுக்கிறது; ஒழுக்கமாகவும் தெளிந்த சிந்தனையுடனும் செயல்படுவதே, ஒருவருக்கு இன்றியமையாதவை என்றும் கடவுள் வலியுறுத்துகிறார்.  

பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை என்று தீய எண்ணம் கொண்டு வாழ்வோரைப் பற்றி கூறப்படுக்கிறது. அத்துடன், நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற எச்சரிக்கையையும் வாசகம் தருகிறது. 

நிறைவாக, ஓர் ஏழை உதவிக்குக் கூவி அ.ஐக்கும்போது, யார் ஒருவரு தமது  காதைப் பொத்திக் கொள்கிறானோ, அவன் ஒருநேரத்தில்  உதவிக்காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவிகொடுக்க மாட்டார் என்ற ஆழந்த போதனையும் இவ்வாசகத்தில் வலியுறுத்தப்படுகிறது.


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசுவின் தாயும் உறவினர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு அவரைக் காண வெளியே காத்திருப்பதாக இயேசுவுக்குத் தெரிவிக்கப்படுகிறது.   இயேசு உடனே, மறுமொழியாக “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்”என்று பதிலாகத் தருகிறார். 


சிந்தனைக்கு.

நற்செய்தியில் இயேசுவின் பதிலானது சிலருக்கு திகைப்பாக இருக்கக்கூடும். அவர் தனது தாயாருக்கு மதிப்பளிக்கவில்லை என்றும் நினைக்கத் தோன்றும். சில பிரிந்த சபையினருக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்த  கதைப்போலாகும். மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்தி நூல்களில், இயேசு அவர்கள் முன்  'யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?' இரு கேளவிகளை முன் வைக்கிறார்.  

இங்கே, ஆண்டவராகிய இயேசு இயேசு “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிரவர்களே என் தாயும் சகோதர்களும் ஆவார்கள்” எனும் படிப்பனைக்கு அழுத்தம் தருகிறார் என்று பொருள் கொள்ளலாம். இயேசு இறையாட்சியை விதைத்துக்கொண்டிருக்கிறார். எனவே, இறையாட்சிக் குடும்பம் என்பது இரத்த உறவுகளைக் கடந்தது என்பதை எடுத்துரைக்க இயேசு இவ்வாறு தன் தாயை மையப்படுத்து போதிக்கிறார்.

மற்றொன்று, அன்னை மரியா மட்டுமல்ல,  அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களும் அவருக்குத் தாயும் சகோதர சகோதரிகளாகிறார்கள்  என்ற உண்மையும் இங்கே வெளிப்படுகிறது. நாம் அவரது போதனையின் பட வாழ்கிறோம் என்றார் நாமும் அவரது தாயும் சகோதர சகோதரிகளாகிறோம்.    

அன்னை மரியாவைப் போல கடவுளின் திருச்சட்டத்தின்படி நடக்க, கடவுள் தரும்   ஞானம் நமக்குத் தேவையாய் இருக்கின்றது. எனவேதான் திருப்பாடல் ஆசிரியர், “ஆண்டவரே, உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்” என்கிறார்.

ஏனெனில், நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உலக வழிகள் தவறானவை, இடறிவிழச் செய்யக்கூடியவையாக இருக்கலாம் . ஆண்டவரின் வார்த்தைதகளோ  நம்முடைய காலடிக்கு விளக்காய் இருப்பவை. அவற்றின்படி நடந்தால் நாம் ஒருபோதும் இடறிவிழ மாட்டோம் என்பதை நினைவில் கொள்வோம். இயேசவின் உற்ற சகோதர சகோதரிகளாக வாழ அவரது படிப்பினைக்குச் செவிசாய்ப்போம். 


இறைவேண்டல்.


பலி செலுத்துவதை விட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே உமக்கு உவப்பளிக்கும் என்றுரைத்த ஆண்டவரே, உமது வார்த்தையின் ஒளியில் எனது வாழ்வு வளம்பெற அருள்புரிவீராக. ஆமென். 


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Tags