மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் வெளிப்பாடு - வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ! | Veritas Tamil
பங்களாதேஷில் உள்ள ஒரு புத்த மத அமைப்பு, ரமலான் மாதத்தின் போது நோன்பு நோற்கும் ஏழை முஸ்லிம்களுக்கு தினமும் இஃப்தார் உணவு வழங்கி, மதங்களுக்கு இடையேயான ஒற்றுமையை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்துகிறது.
இந்த முயற்சி, டாக்கா நகரின் சபுஜ்பாக் பகுதியிலுள்ள பசாபோ பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தர்மராஜிகா புத்த மடாலயத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனிதநேயச் செயல் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரமலான் மாதத்தின் ஒவ்வொரு மாலையும், சுமார் 300க்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட முஸ்லிம்கள் மடாலயத்தின் வெளியே கூடுகின்றனர். அவர்களுக்கு முதலில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பின்னர் சூரிய அஸ்தமன நேரத்தில் நோன்பு திறப்பதற்காக இஃப்தார் உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை Bangladesh Bouddha Kristi Prachar Sangha மற்றும் அதன் இளைஞர் பிரிவு ஒருங்கிணைக்கின்றன.
ஒவ்வொரு நாளும் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்த இஃப்தார் உணவைப் பெறுகின்றனர்.
ரேடியோ வெரித்தாஸ் உடன் பேசிய இளைஞர் பிரிவு தலைவர் பிரம்மாண்ட பிரதாப் பாருவா, இந்த முயற்சி 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று கூறினார். அப்போது மடாலயத்தின் தலைவராக இருந்த மறைந்த பூஜ்யர் சுத்தானந்த மகாதேரோ, தினக்கூலி தொழிலாளர்களும் பிச்சைக்காரர்களும் எதிர்கொள்ளும் நிலையைப் பற்றி அறிந்தபின் இதை தொடங்கத் தூண்டப்பட்டதாக அவர் விளக்கினார்.
ரமலான் காலத்தில் அவர்கள் எங்கு நோன்பு திறக்கிறார்கள் என்று அவர் கேட்டபோது, பலர் அந்த நாளில் கிடைத்த உணவைப் பொறுத்தே நோன்பு திறப்பதாக தெரிவித்தனர். அவர்களின் இந்த நிலைமை, ஏழை முஸ்லிம்கள் மரியாதையுடன் நோன்பு திறக்க உதவ வேண்டும் என்ற எண்ணத்தை அந்தத் துறவிக்குள் உருவாக்கியது என்று கூறினார்.
இந்த உதவி, உணவு வழங்குதலைத் தாண்டி பலருக்கு ஆழமான அர்த்தத்தையும் அளிக்கிறது. ரமலான் காலத்தில் தொடர்ந்து புத்த தன்னார்வலர்கள் காட்டும் மரியாதையும் உண்மையான அன்பும் இந்த அனுபவத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது என்று கூறினார்.
இறுதியாக ,அருகிலுள்ள மக்கள் கூறுகையில், இந்த தினசரி நிகழ்வு அந்தப் பகுதியில் உள்ள சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமையின் வெளிப்படையான அடையாளமாக மாறியுள்ளது.