இரும்பால் அல்ல....வண்ணத்தால் | அருட்சகோதரி பிரைடா SSAM | veritas Tamil

இரும்பால் அல்ல....வண்ணத்தால்

                                                            இரும்பால் அல்ல.... வண்ணத்தால் 

 

ஒரு ஊரில் அகிலன் என்ற சிறுவன் தன் தாய் தந்தையோடு வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். ஆனால் அவன் வசிக்கும் ஊரில் ஓர் வழக்கம் உண்டு. யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் குடும்பத்தொழிலை தான் செய்ய வேண்டுமே தவிர வேறு எந்த தொழிலும் செய்யக்கூடாது. அவன் தந்தையோ இரும்பு பட்டறையில் வேலை செய்பவர்.  அவனும் அதே வேலைக்கு சென்று தன் தந்தைக்கு  உதவியாக சிறு சிறு வேலைகளை செய்து வந்தான். ஆனால் அகிலன் யாருக்கும் தெரியாமல் பல்வேறு நிற பூக்கள் இலைகளை பறித்து ஓவியம் தீட்டுவதை தன் பொழுது போக்காகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் வீட்டிற்கு முதியவர் ஒருவர் வந்தார். இரும்பு பட்டறையில் வேலைசெய்து கைகளில் காய்ப்பு இருந்தாலும்   ஆங்காங்கே தென்பட்ட வண்ணங்களை பார்த்து அது என்ன என்று கேட்டார். அகிலனோ தன் ஓவியங்களை முதியவரிடம் காட்டினான். முதியவரோ அவனை பாராட்டி ஒரே ஒரு படத்தை மட்டும் தனக்கு தருமாறு கேட்டார். அகிலனோ தன் தந்தைக்கு பயந்து தான் வரைந்த அனைத்து ஓவியங்களையும் அன்பளிப்பாக கொடுத்தான்.   முதியவரோ அவற்றை எடுத்து சென்று “பிஞ்சுக் கையின் வண்ணங்கள்” என  எழுதி விற்பனை செய்தார்.  இரண்டே நாட்களில் ஓவியம் எல்லாம் விற்கப்பட்டது. அந்த ஓவியத்தை வரைந்த குழந்தையைக் காண பலர் வந்தனர். பாராட்டி வாழ்த்தினார். அன்று தான் அகிலனின் தந்தைக்கு தன் மகனுக்குள் புதைந்திருந்த   கலைத்திறன் தெரிய வந்தது.

 அகிலன் இரும்பால் அல்ல வண்ணத்தால் பல இதயங்களை ஈர்த்தான். ஊர் மக்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகான ஓவியங்களை வரைந்தான். ஒரு மனிதனின் தனித்தன்மை என்பது குலத்தொழில் என்னும் சிறு கூட்டுக்குள் அடக்கி வைக்ககூடிய ஐந்தறிவுக் கொண்ட படைப்பல்ல மாறாக அகிலத்தையும் ஆச்சிரியத்திற்குள் அழைத்துச் செல்லும் புதிய உலகம்.   

சிலசமயம் மிகத் துணிச்சலான நமது பயணங்கள் ஒரு மௌனமான எதிர்ப்பிலிருந்து தொடங்குகின்றன. நீரின் ஓட்டத்துடன் செல்லும் மீன்கள் போல் நாம் பத்தோடு ஒன்று என்று வாழ்ந்தால் நமது வாழ்வு விரைவில் முடிவை தொட்டுவிடும். 

சில தருணங்களிலாவது எதிர்திசையில் பயணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அந்த எதிர்திசை பயணம் யாரையும் காயப்படுத்தாது பலரையும்  பின்தொடர செய்யும் பாதையாக வேண்டும். தனியாக நடக்கத் துணிந்தவனுக்கு புதிய பாதைகள் தென்படும். எதிர்பாராதவை நடக்கும் போது பயம் நம்மை பாதாளத்தில் தள்ளலாம் அது தான் நம்மை வளர்ச்சிக்கு அழைத்துதுச்செல்லும்  புதிய பாதைகள். நம்மைச் சுற்றி இருக்கும் பழக்கவழக்கங்களை கேள்விக்குள்ளாக்கி புதிய பாதைகளை உருவாக்குவோம். ஊருக்கும் உலகுக்கும் பயந்து வாழ்ந்தால் நம்முள் எரிந்துக் கொண்டிருக்கும் தனித்திறமை என்னும் தீப்பொறி சிறு தணலாகிஇ புகையாக மாறி நம்மை உயிரற்றதாக்கும்.
                                ஊரோடு வாழ்வோம்

                                               உறவில் வளர்வோம்

                                                   தனித்திறனை வளர்த்தெடுப்போம்.

 

அருட்சகோதரி பிரைடா SSAM