நாம் அனைவரும் கடவுளின் ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 14-ஆம் லியோ வலியுறுத்தல்.....

நாம் தலைவர்கள் அல்ல, மாறாக கண்காணிப்பாளர்கள் என்பதை நினைவில் கொண்டு வாழ வேண்டும் என்றும், கடவுளுக்கு உரியவர்களாக, கடவுளின் ஊழியர்களாக, அவரின் மக்களாக கருத்தியல் உலகில் அல்ல. மாறாக, எதார்த்தமான உலகுடன் உங்களை இணையுங்கள், இயேசுவின் வழியில் சிந்திப்பவர்களாக இருங்கள் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை 14-ஆம் லியோ.
மே 31, சனிக்கிழமை அன்னை மரியா எலிசபெத்தைச் சந்தித்த திருவிழா நாளன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் 11 இளம் குருக்களுக்கான குருத்துவ அருள்பொழிவு திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை 14-ஆம் லியோ. இயேசுவைப் போலவே, இவ்வுலகில் இருக்கும் இறைத்தந்தையின் பாதையில் எலும்பும் சதையும் கொண்ட மக்கள் என்பதை உணருங்கள் என்றும், அவர்களிடமிருந்து நம்மைப் பிரித்துக் கொள்ளாமல், தனிமைப்படுத்தாமல், பெற்ற கொடையை சிறப்புமிக்க ஒன்றாகக் கருதி அர்ப்பண மனநிலையுடன் வாழுங்கள் என்றும் எடுத்துரைத்தார்.
சுய ஒப்புமையானது நமது மறைப்பணி ஆற்றலின் நெருப்பை அணைத்துவிடுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பலமுறை நமக்கு எச்சரித்துள்ளார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நாம் யாரும் பார்த்திராத கடவுள் நமக்காக மனித உரு எடுத்து நம் மத்தியில் வந்தார், அவரது அன்பு மகன் வாழும் கடவுளாக நம் மத்தியில் வந்தார், அவரது மக்களாக மாறும் ஆற்றலை அவர் நமக்கு அளித்தார் என்றும் கூறினார். கரங்களை வைத்து ஆசீரளிக்கும் நமது செயலானது, குழந்தைகளை வரவேற்று, நோயாளிகளைக் குணப்படுத்திய இயேசுவின் விடுதலை ஆற்றல் நமக்குள் புதுப்பிக்கப்படுவதன் அடையாளம் என்றும், இதே செயல் திருத்தூதர் பணிகள் நூலில் தூய ஆவியின் படைப்பாற்றலைப் பெறுவதற்கான செயலாகவும் கருதப்பட்டதாகவும் எடுத்துரைத்தார்.
முதல் வாசகத்தில் எபேசு சமூகத்தின் மூப்பர்களுக்கு திருத்தூதர் பவுல் எடுத்துரைத்த கருத்துக்களை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தமது சொந்த இரத்தத்தால் தமதாக்கிக் கொண்ட கடவுளின் திருச்சபையை மேய்ப்பதற்கு தூய ஆவியார் உங்களைக் கண்காணிப்பாளராக ஏற்படுத்தியுள்ளதால் உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக்கொள்ளுங்கள் என்று திருத்தூதர் பவுல் இன்று நமக்கு வலியுறுத்துகின்றார் என்றும் கூறினார்.
நாம் தலைவர்கள் அல்ல, மாறாக கண்காணிப்பாளர்கள் என்பதை நினைவில் கொண்டு வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க புதிய குருக்களுக்குத் திருஅவையில் இடம் ஏற்பாடு செய்கின்றார் என்றும் கூறினார்.இந்நாள்வரை எவ்வாறு உங்களிடம் நடந்து கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், வெளிப்படையான, பிறரால் அறியப்பட்ட, எளிமையான, நம்பிக்கையான வாழ்க்கையை வாழ்ந்து, கடவுளின் மக்களுக்குள் நாம் நிலைத்திருப்போம் என்றும், இதன் வழியாக நாம் அவர்களுக்கு முன் நம்பிக்கையான சாட்சியாக இருப்போம் என்றும் கூறினார்.
Daily Program
