FABC பேரவையையொட்டி இந்தோனேசியாவின் சமய நல்லிணக்கச் சின்னங்களைப் பார்வையிடும் ஆயர்கள் | Veritsa tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது பொதுப்பேரவையின் நிறைவு நிகழ்வின் ஒரு பகுதியாக, ஆசியா முழுவதிலுமிருந்து பங்கேற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கத்தோலிக்க ஆயர்கள், ஜூலை 26ஆம் நாள், ஜகார்த்தாவில் உள்ள நட்புறவுப் பாலம் (Tunnel of Friendship) மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பள்ளிவாசலான இஸ்திக்லால் பள்ளிவாசலை பார்வையிடவுள்ளனர்.

முதலில் ஜகார்த்தா பேராலயத்தில் திருப்பலியில் பங்கேற்கும் ஆயர்கள், பின்னர் நட்புறவுப் பாலம் வழியாக நடந்து இஸ்திக்லால் பள்ளிவாசலுக்குச் செல்வார்கள். இந்தச் சுரங்கப்பாதை, வெறும் இணைப்புப் பாதையாக அல்லாமல், சமயங்களுக்கு இடையேயான உரையாடல், ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் அமைதியான இணக்க வாழ்வின் உலகப் புகழ்பெற்ற அடையாளமாக விளங்குகிறது.

2020ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜோகோ விடோடோ அவர்கள் முன்மொழிந்த இந்தத் திட்டம், 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2024 டிசம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 2024 செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தோனேசியாவுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் போது இத்தலத்திற்குச் சென்றது, இதனை உலகளவில் மேலும் அறிமுகப்படுத்தியது.

இந்தோனேசிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் நசருத்தீன் உமர் அவர்கள்,  பல்வேறு சமயங்கள், இனங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்த்தெடுத்துள்ள இந்தோனேசியாவின் அனுபவம் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதாகக் கூறினார். வேறுபாடுகள் தடைகளல்ல; மாறாக, அமைதியை உருவாக்கும் வலிமைகள் என்பதை இந்தப் பயணம் எடுத்துக்காட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தோனேசிய ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் அந்தோனியுஸ் சுபியான்டோ புன்யாமின் அவர்கள், இந்தப் பார்வை FABC நிறைவிறுதிப் பேரவையின் அதிகாரப்பூர்வ நிறைவு நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜகார்த்தா பேராயர் கர்தினால் இக்னாத்தியுஸ் சுஹார்யோ அவர்கள், “நீங்கள் இன்னும் பெரியவற்றைக் காண்பீர்கள்” (யோவான் 1:50) என்ற பேரவையின் கருப்பொருளை இந்தப் பார்வை உயிர்ப்பிக்கும் நிகழ்வாக அமையும் என்றும், சமயங்களுக்கும் பண்பாடுகளுக்கும் இடையே பாலங்களை அமைக்கும் திருஅவையின் பணியை இது வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

Tamil Survey Popup Image