தாயின் தியாகம் | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

தன் மகள் தன்னிடம் கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் இரண்டு நாள்களாகச் சிந்தித்துக் கொண்டேயிருந்தார் சந்திரன். 'சிறகின்றி பறக்கும் இனம் எது?' என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பினார். பறக்கும் விலங்கு தெரியும், பறக்காத பறவை தெரியும். அது என்ன சிறகின்றிப் பறக்கும் உயிர்?

அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பியவர், அது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கால் உடைந்து நடக்கச் சிரமப்படும் தன் தகப்பனார், தன் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தது கேட்டது.

'என்னம்மா, காலையில் 4 மணிக்கே எழுந்து சமைத்து, அவனையும் அலுவலகத்திற்கு அனுப்பி, எனக்கும் மத்தியான சாப்பாடு பன்ணி வைத்துவிட்டு, பிள்ளையையும் தயார் பண்ணி பள்ளியில் விட்டு, அதன்பின் நீ அலுவலகத்தில் வேலைக்குப் போய், மாலையில் திரும்பி வரும்போது, பள்ளிக்குச் சென்று குழந்தையையும் அழைத்து வந்து, மீண்டும் சமையல், பிள்ளைக்குப் பாடம், பாத்திரம் கழுவுதல் என இரவு 12 மணிவரை வேலை செய்கிறாயே. பாவம், ஒரு மனைவியாக, மருமகளாக, தாயாக, இப்படி பறந்து பறந்து வேலை செய்ய வேண்டும் என உன் தலையில் ஆண்டவன் எழுதி வைத்துவிட்டானே', எனக் கூறுவது கேட்டது. தன் மகள், தன்னிடம் கேட்டக் கேள்விக்கு இதுதான் விடையாக இருக்குமோ எனச் சிந்திக்கத் துவங்கினார் சந்திரன்.

எல்லாமாய் இருக்கும் அம்மாவிற்கு எப்போதும் நேரமில்லை
அவளாக இருக்க மட்டும்...

எவ்வளவு விலை கொடுத்தாலும் திரும்பவும் கிடைக்காத ஒன்று 'அம்மாவின் முதல் முத்தம்'.