ஒன்றிணைந்த பயணத் திருஅவைக்கான அருள்பணியாளர்களை உருவாக்க FABC உறுதிப்பாடு | FABC | Veritas Tamil

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) திருநிலையினர்களுக்கான அலுவலகம் (Office of Clergy), ஆசியாவில் மேலும் ஒன்றிணைந்த பயண மனப்பான்மையும் மறைப்பணிச் சிந்தனையும் கொண்ட அருள்பணியாளர்களை உருவாக்குவதில் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட உருவாக்கப் பணிகளை, FABC-யின் 12-வது நிறைவிறுதிப் பேரவையில் எடுத்துரைத்தது.

ஜூலை 21 அன்று, இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் முலியாவில் இடம்பெற்ற பேரவையில், FABC திருநிலையினர்களுக்கான அலுவலகத்தின் தலைவரும், இந்தியாவின் வாரங்கல் உயர் மறைமாவட்டப் பேராயருமான பேராயர் உடுமலா பாலா அவர்கள், ஆசியத் திருஅவையின் மாறிவரும் மேய்ப்புப் பணிச் சூழலுக்கு ஏற்ப அருள்பணியாளர் உருவாக்கத்தை வலுப்படுத்த அலுவலகம் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கும் அறிக்கையை வழங்கினார்.

"நல்ல மேய்ப்பரான இயேசு கிறிஸ்துவின் பெயரால் உங்களுக்கு வாழ்த்துகள்" என்று கூறி தனது உரையைத் தொடங்கிய பேராயர் பாலா அவர்கள், 2004ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த அலுவலகம், கருத்தரங்குகள், கலந்தாய்வுகள் மற்றும் மாநாடுகள் வழியாக ஆசியா முழுவதிலும் உள்ள ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவப் பயிற்சி வழங்குபவர்களுக்கு துணைநிற்கிறது என்று விளக்கினார்.

ஆழமான ஆன்மீக வாழ்வு, மறைப்பணிச் சிந்தனை மற்றும் பணிவான பணித்தலைமை உணர்வுடன் கூடிய அருள்பணியாளர்களை உருவாக்குவதே இந்த அலுவலகத்தின் முதன்மை நோக்கமாகும். மேய்ப்புப் பணியின் சவால்கள் மாறிவந்தபோது, தனிப்பட்ட மற்றும் அருள்பணிச் சிரமங்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர்களுக்கும் துணைநிற்கும் வகையில் தனது பணிகளை அலுவலகம் விரிவுபடுத்தியது. 2008ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் நெருக்கடியில் இருக்கும் அருள்பணியாளர்களுக்கான பராமரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதுடன், மற்றொரு கருத்தரங்கில் அருள்பணியாளர் அடையாளமும் அழைப்பின் மகிழ்ச்சியும் ஆராயப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியோருக்கான பாதுகாப்பு (Safeguarding), அருள்பணியாளர்களின் துறவொழுக்க வாழ்வு, ஒருங்கிணைந்த அருள்பணியாளர் உருவாக்கம் மற்றும் நற்செய்தி அறிவித்தல் போன்ற தலைப்புகளில் பல்வேறு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டன. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர், பாதுகாப்பு, ஒன்றிணைந்த பயணம் மற்றும் குருத்துவக் கல்வி நிலையங்களின் புதுப்பிப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு, மணிலா கத்தோலிக்க பாதுகாப்பு நிறுவனம் (Catholic Safeguarding Institute Manila) உடன் இணைந்து குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியோரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அருள்பணியாளர்கள் மற்றும் குருத்துவப் பயிற்சி வழங்குபவர்களுக்காக ஒன்றிணைந்த பயணம் குறித்த உருவாக்கப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

ஒன்றிணைந்த பயணமே தற்போது அலுவலகத்தின் அனைத்து உருவாக்கப் பணிகளுக்கும் வழிகாட்டும் அடிப்படைக் கொள்கையாக உள்ளது என்று பேராயர் பாலா குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டில், ஆசியா முழுவதிலுமுள்ள பெரிய குருத்துவக் கல்வி நிலையங்களின் முதல்வர்களை ஒன்றிணைத்து, FABC 50 ஆவணத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவான உருவாக்க வளங்களை உருவாக்கும் முயற்சியை அலுவலகம் மேற்கொண்டது. இதன் மூலம் எதிர்கால அருள்பணியாளர்கள், ஒன்றிணைந்த பயணத்தை ஒரு வாழ்வியல் முறையாகவும், அருள்பணியின் மாதிரியாகவும் ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய அவர், துறவற வாழ்வுக்கான அலுவலகம், பொதுநிலையினர் மற்றும் குடும்பங்களுக்கான அலுவலகம், கல்வி மற்றும் விசுவாச உருவாக்கத்திற்கான அலுவலகம் மற்றும் ஒன்றிணைந்த பயண ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். சுற்றுச்சூழல், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கலாச்சாரம் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இறையியல் வளங்கள், மேய்ப்புப் பணிக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் உருவாக்கப் பயிற்சிகளை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.

அருள்பணியாளர் உருவாக்கம், குருத்துவ அருள்பணியைப் பெற்ற பின்னரும் தொடர்ந்து நடைபெற வேண்டிய ஓர் ஆயுள் முழுமையான பயணமாக இருக்க வேண்டும் என்று அறிக்கை வலியுறுத்தியது. இதன் மூலம் அருள்பணியாளர்கள் இறைமக்களுடன் நெருக்கமாக நடந்து, ஆசியாவில் மேலும் ஒன்றிணைந்த பயண மனப்பான்மையும் மறைப்பணிச் சுறுசுறுப்பும் கொண்ட திருஅவையை வழிநடத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆயர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் பணியாற்றுவதோடு, ஏழைகள், பிற சமயத்தவர்கள் மற்றும் உள்ளூர் கலாச்சாரங்களுடனான திருஅவையின் "மூவகை உரையாடல்" (Triple Dialogue) அடிப்படையில், ஆசியக் கலாச்சாரங்களில் வேரூன்றிய பங்கேற்பு மிக்க திருஅவையை உருவாக்குவதிலும் அருள்பணியாளர்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று பேராயர் பாலா வலியுறுத்தினார்.

"ஆசியத் திருஅவை எண்ணிக்கையில் சிறிய மந்தையாக இருந்தாலும், உயிர்ப்பும் மாற்றத்திறனும் நம்பிக்கையும் நிறைந்த திருஅவையாக உள்ளது. எனவே, ஒன்றிணைந்த பயணத்தின் ஆவியில் வேரூன்றிய மேய்ப்புப் பணி மற்றும் மறைப்பணிப் புதுப்பிப்பை நோக்கி அருள்பணியாளர்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

கடந்த 22 ஆண்டுகளில் அலுவலகம் மேற்கொண்ட உருவாக்கப் பணிகளை நினைவுகூர்ந்த அறிக்கை, 2006ஆம் ஆண்டு தாய்லாந்தின் ஹுவா ஹின் நகரில், ஆசியச் சூழலில் அருள்பணியாளர்களின் மனித உருவாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் கருத்தரங்குடன் இந்தப் பயணம் தொடங்கியதாக எடுத்துக்காட்டியது.

Tamil Survey Popup Image