ஆசியாவில் திருஅவைக்கான ஆதரவை நிலையான வளர்ச்சி நோக்கில் விரிவுபடுத்தும் கொலோன் உயர்மறைமாவட்டம் | FABC |Veritas tamil
ஜெர்மனியின் கொலோன் உயர்மறைமாவட்டம், ஆசியத் திருஅவைக்கான தனது ஆதரவை ஆலயங்கள் மற்றும் மேய்ப்புப் பணிக்கான கட்டடங்களை அமைப்பதற்கான நிதியுதவியில் மட்டுப்படுத்தாமல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, நிதி தன்னிறைவு மற்றும் குழந்தைகள், பாதிக்கப்படக்கூடியோரின் பாதுகாப்பு (Safeguarding) ஆகியவற்றை எதிர்கால கூட்டாண்மையின் முக்கிய அங்கங்களாகக் கொண்டு விரிவுபடுத்தி வருகிறது.
ஜூலை 23ஆம் நாள் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இடம்பெற்ற ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆம் நிறைவிறுதிப்பேரவையில் உரையாற்றிய, கொலோன் உயர்மறைமாவட்டத்தின் உலகளாவிய திருஅவைப் பணித் துறையின் (Department of the Universal Church) திட்ட ஒருங்கிணைப்பாளர் அலெசாண்ட்ரோ கியெரேகாட்டோ அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தனது உரையின் தொடக்கத்தில், கொலோன் பேராயர் கர்தினால் ரைனர் மரியா வோல்கி மற்றும் உலகளாவிய திருஅவைப் பணித் துறையின் இயக்குநர் நதீம் அமெல் ஆகியோரின் வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஆசியத் திருஅவை தனது எதிர்காலப் பயணத்தை இணைந்து பகுத்தறியும் இந்த நிறைவிறுதிப்பேரவையில் பங்கேற்பது பெருமைக்குரியதாக உள்ளது என்றார்.
மேலும், கொலோன் உயர்மறைமாவட்டத்தின் உலகளாவிய திருஅவைப் பணித் துறை தனது 50ஆம் ஆண்டு பொன்விழாவை, 2026ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 4 வரை ஜெர்மனியின் கொலோன் நகரில் கொண்டாடவுள்ளது என்றும், அதில் பங்கேற்க FABC-இன் கூட்டாளிகளை அவர் அழைத்தார்.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆசிய மறைமாவட்டங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், ஆலயங்கள், குருமடங்கள், அருட்சகோதரிகள் இல்லங்கள், மேய்ப்புப் பணிமையங்கள் மற்றும் ஆயர் இல்லங்கள் ஆகியவற்றின் கட்டுமானத்திற்கு தொடர்ந்து நிதியுதவி வழங்கி வந்ததாகக் கூறினார்.
ஆனால், இன்றைய மேய்ப்புப் பணிச் சூழல் மாறிவருவதால், திருஅவைக்கான உதவியும் விரிவான பார்வையுடன் அமைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார்.
“கடந்த 50 ஆண்டுகளில், ஆசியாவின் பல மறைமாவட்டங்களில் மேய்ப்புப் பணிக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க உதவியுள்ளோம். தற்போது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததும், வருமானம் ஈட்டக்கூடியதும், பராமரிப்புச் செலவைக் குறைக்கக்கூடியதுமான திட்டங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வகையில் எங்கள் வழிகாட்டுதல்களை விரிவுபடுத்தி வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் புதிய அணுகுமுறை, உள்ளூர் திருஅவைகள் நிதி தன்னிறைவை அடைவதோடு, படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் நோக்கம் கொண்டதாகும் என்றும் அவர் கூறினார்.
எதிர்கால மேய்ப்புத் திட்டங்கள் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், நீண்டகால பொருளாதார உறுதித்தன்மையையும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வையும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், நிலையான வருமானத்தை உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு, திருஅவையின் மேய்ப்புப் பணியைத் தொடர்ந்து ஆதரிப்பதோடு இணைந்து முன்னுரிமை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு கூட்டாண்மையிலும் குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியோரின் பாதுகாப்பிற்கான (Safeguarding) வலுவான கொள்கைகள் நடைமுறையில் இருப்பது மிகவும் முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றும் திறம்பட செயல்படுத்தப்படும் பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையில், சுற்றுச்சூழல் மற்றும் நிதி நிலைத்தன்மையை அடைய எங்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பயணிக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.
புதிய நிதியுதவி வழிகாட்டுதல்களை விரிவாக விளக்கவில்லை என்றாலும், இந்த புதிய அணுகுமுறை குறித்து தொடர்ந்து கலந்துரையாட அனைவரையும் அவர் அழைத்தார்.
கொலோன் உயர்மறைமாவட்டத்தின் நீண்டகால கூட்டாண்மை, கட்டட வசதிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பதைத் தாண்டி, நிதி தன்னிறைவு, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு மற்றும் மனித மாண்பைப் பாதுகாக்கும் மேய்ப்புப் பணிகளை வலுப்படுத்தும் புதிய திசையை நோக்கி நகர்ந்து வருவதை அவரது உரை எடுத்துக்காட்டியது.
தனது உரையை நிறைவு செய்த அவர், FABC பொதுப்பேரவை ஆசியத் திருஅவைக்கு நீடித்த பலன்களை அளிக்க வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும், நற்செய்தி அறிவிப்பும் மேய்ப்புப் பணியின் புதுப்பித்தலும் என்ற FABC-இன் பணியில் தொடர்ந்து துணைநிற்க கொலோன் உயர்மறைமாவட்டம் உறுதிபூண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அவரது உரை, நிலையான வளர்ச்சி, பொறுப்பான நிர்வாகம் மற்றும் ஒன்றிணைந்த (Synodal) திருஅவைக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில், எதிர்காலத் தலைமுறைகளுக்குச் சேவை செய்யும் வலுவான உள்ளூர் திருஅவைகளை உருவாக்கும் நோக்கில், அனைத்துலக திருஅவை கூட்டாண்மைகள் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன என்பதை வலியுறுத்தியது.
