சுற்றுச்சூழல் தொலைநோக்கு பார்வை ! | Veritas Tamil

'லாடாத்தோ சி' (Laudato Si’) எனும் சுற்றுச்சூழல் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்ட மும்பை வடிவமைப்பாளர் கிசெல் வில்சன் (Giselle Wilson), தூக்கியெறியப்பட்ட பொருட்களைப் பயனுள்ள மற்றும் குறியீட்டுப் பொருட்களாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேற்கு இந்தியாவின் மும்பையில், ஒரு இளம் கத்தோலிக்க தயாரிப்பு வடிவமைப்பாளர், படைப்பாற்றல் மூலம் நம்பிக்கையும் சுற்றுச்சூழல் பொறுப்பும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை ஆராய்ந்து வருகிறார்.

புனே MIT-யில் வடிவமைப்பில் இளங்கலை (B.Des) பட்டம் பெற்ற கிசெல் வில்சன், தாவர அடிப்படையிலான பொருட்கள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆன்மீக இலக்கியங்களைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த பக்தி கலைப் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அழைப்பை விடுக்கும் 'லாடாத்தோ சி'-யின் தாக்கத்தால் இவரது பணி அமைகிறது. மும்பை மறைமாவட்டத்தின் சுற்றுச்சூழல் அலுவலகம் நடத்திய 'சுற்றுச்சூழல் தூதர்' (Eco Ambassador) படிப்பை முடித்த வில்சன், தூக்கியெறியப்படும் பொருட்களைச் செயல்பாட்டு ரீதியிலான கலைப் பொருட்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துகிறார். இவரது "Revive Design" மற்றும் "ReNew Sculptures" ஆகிய இரண்டு முன்முயற்சிகள், கழிவுகளைக் குறைக்கும் அதே வேளையில் நிலையான பக்திப் பொருட்களைத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கிசெல்லின் இயற்கையின் மீதான ஆர்வம் அவரது சிறுவயதிலேயே உருவானது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் வளர்ந்த அவர், இயற்கையின் மீதான நேசத்தை ஊட்டியதற்காக தனது தாயாரைப் பாராட்டுகிறார். "தோட்டக்கலை முதல் வானத்தைப் பார்ப்பது மற்றும் பறவைகளின் ஒலியைக் கேட்பது வரை படைப்பின் அழகை ரசிக்க என் அம்மா எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்," என்று அவர் கூறினார். மின் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற அவரது தந்தை, அவரது முயற்சிகளில் சிந்தனைமிக்க மற்றும் ஒழுக்கமான அணுகுமுறையை ஊக்குவித்தார்.

"ஒரு படைப்பாற்றல் மிக்க குழந்தையாக, நான் தயாரிப்பு வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் விரைவில் பூமிக்கு தீங்கு விளைவிக்காமல், நன்மை செய்யும் பொருட்களை உருவாக்க விரும்பினேன்," என்று கிசெல் விளக்கினார்.

இவரது பணியில் முக்கிய செல்வாக்கு செலுத்தியவர் இவரது வழிகாட்டியான லெஸ்லி டிசோசா (Leslie Dsouza) ஆவார். ஆன்மீக இலக்கியங்களை கலை வடிவங்களில் மீண்டும் பயன்படுத்துவது குறித்த யோசனையை அவர் கிசெல்லுக்கு அறிமுகப்படுத்தினார். "இந்த யோசனை என்னை மிகவும் கவர்ந்தது," என்று அவர் நினைவு கூர்ந்தார். இந்த கருத்து இறுதியில் "ReNew Sculptures" திட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மலாட் வெஸ்டில் உள்ள 'அன்னை லூர்து திருத்தலத்தின்' பங்குத்தந்தை அருட்பணி. ரூபன் டெல்லிஸ் இதற்குப் பெயரிட்டதுடன், பயன்படுத்தப்பட்ட பொருட்களைச் சேகரிக்க உதவியும் செய்துள்ளார்.

இந்த பயணம் சவால்கள் நிறைந்தது. "நான் இதைக் கைவிட நினைத்த தருணங்கள் உண்டு, ஆனால் புனித நூலை (Scripture) கலை நயத்துடன் உயிர்ப்பிக்கும் அழகு என்னை முன்னோக்கிச் செலுத்தியது," என்றார் அவர்.

வீடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும், ஆனால் எளிதில் அப்புறப்படுத்த முடியாத 'பைபிள் டைரி' போன்ற பழைய பக்திப் பொருட்களைக் கொண்டு கிசெல் பணியாற்றுகிறார். "மத இலக்கியங்கள் நம் வீடுகளில் போற்றப்படும் ஒரு பகுதியாகும், மக்கள் அவற்றை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்," என்று அவர் கூறினார். "கழிவு என்பது பயன்படுத்தப்படாத ஒரு வளம் என்ற நம்பிக்கையில், காகிதத்தை புதிய வடிவமாக மாற்றுவதற்கான வழிகளைக் கண்டறிந்தேன்."

சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவரது வடிவமைப்பின் மையமாக உள்ளது. "ஒவ்வொரு முடிவும் சுழற்சி முறையை (Circularity) அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தயாரிப்புகள் மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் நச்சுத்தன்மையற்றவை," என்றார்.

கிசெல் தனது வேலையை நம்பிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார். "சுற்றுச்சூழலின் பொறுப்பாளர்களாக இருக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்," என்று கூறிய அவர், பூமியை நமது "பொதுவான இல்லம்" எனக் குறிப்பிடுகிறார். "மற்றொரு நபரை நாம் நேசிப்பது போலவே, பொறுமையுடனும் புரிதலுடனும் படைப்பை நேசிப்பதன் மூலம் நாம் அதைப் பராமரிக்கிறோம்."

இவரது பணிக்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். சிலர் இந்தப் படைப்புகளை அன்றாட வாழ்க்கையில் நம்பிக்கையின் நினைவூட்டல்களாகக் கருதுகின்றனர். "இயேசு எப்போதும் என் குடும்பத்துடன் இருக்கிறார் என்பதை இது எனக்கு நினைவூட்டுகிறது" என்று ஒரு பயனர் பகிர்ந்து கொண்டார்.

எதிர்காலத்தில், கிசெல் தனது முயற்சிகளை விரிவுபடுத்த விரும்புகிறார். "இறைவார்த்தையை புதிய வடிவங்களில் உயிர்ப்பிக்கும் இன்னும் பல ஆன்மீக கலைப் படைப்புகளை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று கூறிய அவர், தேவையுள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

இறுதியாக,இளம் கத்தோலிக்கர்கள் தங்கள் படைப்பாற்றலை சுற்றுச்சூழல் பொறுப்புடன் எவ்வாறு இணைக்கிறார்கள் என்பதற்கு இவரது பணி ஒரு சிறந்த சான்றாகும்.
தொலைநோக்குப் பார்வை

Tamil Survey Popup Image