மண்ணுலகு அல்ல விண்ணுலகே தாயகம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

11  ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 2ஆம் வாரம் -வியாழன்

தி. பணிகள்  5: 27-33                                                       

யோவான் 3: 31-36

திருத்தூதர்களான புனித பேதுருவும் யோவானும்  உயிர்த்த இயேசுவைப் பற்றித் தொடர்ந்து மக்கள் நடுவில் அறிவித்தார்கள். இதனால் தலைமைச் சங்கத்தார் அவர்களைச் சிறையிலடைந்தார்கள். ஆனாலும் ஆண்டவரின் தூதர் அவர்களைச் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்து, உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய செய்திகளை மக்களுக்கு எடுத்துக் கூறச் சொல்ல, அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.   

பின்னர்  இயேசுவைப் பற்றி போதிப்பதை நிறுத்தும்படி தலைமைச் சங்கத்தார் கட்டளையிட்டதையும்   மீறி இயேசுவைப் பற்றி தொடர்ந்து  பேசியதற்காக, தலைமை குரு  அவர்கள்  மீது குற்றம் சாட்டினார். திருத்தூதர்களின் இயேசுவைப பற்றிய போதனைகள் எருசலேம் எங்கும் பரவி வருவதால், தலைமை குரு மனம் கலங்கினார்.  மேலும்  இயேசுவின் மரணத்திற்கு சங்கத்தாரே காரணம் என்று  மக்கள் அறிந்து, அவர்கள் மேல் பழிப்போடுவர் என்றும் அஞ்சினர். 

அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் பதிலுரைக்கும் வகையில்,  மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைக் காட்டிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவதே மேல் என்று அறிவித்தனர். இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்ட போதிலும், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்ற நம்பிக்கையை தலைமை குருவின் முன் அவர்கள் உறுதிப்படுத்தினர். 

நற்செய்தி.

நற்செய்தியில், மேலிருந்து வருபவர்,  மண்ணுலகிலிருந்து உண்டானவர் என் இருவகை நபர்களைப் பார்க்கிறோம். இரு தரப்ப்பினருக்குமிடையிலான வேறுபாடு கொடுக்கப்படுகிறது. 
இதில், மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர் என்றும், மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர் என்ற மிகப் பெரிய வெறுபாடும் கொடுக்கப்படுகிறது. விண்ணுலகிலிருந்து வருபவர்,  தாம் கண்டதையும் கேட்டதையும் பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை என்று யோவான் குறிப்பிடுகிறார். 

மேலும், மேலிருந்து வருபவர் அவர் கண்டதையும், கேட்டதையும் பற்றி சான்று பகர்வதோடு  அவர் எப்பொழுதும்  கடவுளின் வார்த்தையைப் பேசுகிறார் என்றும், அவர் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிப் பெறுகிறார் என்றும் யோவான் விவரிக்கும் அதே வேளையில், மேலிருந்து வந்தவரான இயேசுவிடம்  நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்று உறுதியாகக் கூறப்படுகிறது.

சிந்தனைக்கு.

இன்றைய முதல் வாசகத்தில்  திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தாரின் எச்சரிக்கையை மீறி உயிர்த்த ஆண்டவருக்கு சாட்சியம் பகர்வதோடு, அவர்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிய மறுக்கின்றனர். இதனால்,  தலைமைச் சங்கத்தார் அவர்கள்மேல் கோபம் கொண்டு தண்டிக்க முற்படும்போது, மக்களுக்கு  அஞ்சுகின்றனர்.  மக்கள் முன்பாக உண்மைக்குச் சாட்சியம் பகரும் திருத்தூதர்களின் தைரியம் ஒரு பக்கமிருக்க, மறுபக்கம் உண்மையை மூடி மறைக்க முற்படும் தலைமைச் சங்கத்தாரை அச்சம் மேலிடுகிறது.   

‘உண்மை விடுவிக்கும்’ என்பதால் நாம்  உண்மையின் பக்கம் இருக்கும்போது, துன்ப துயரங்கள் வந்தாலும், இறுதியில், நம்மை விடுவிப்பது இந்த உண்மையே என்பதை மனதில் நிறுத்த வேண்டும். இந்த உண்மையைத் திருத்தூதர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். தூய ஆவியார்  இந்த உண்மையை நோக்கி அவர்களை வழிநடத்தினார். ‘

இயேசு, மேலிருந்து வந்தவர் என்பதனால், அவர் கண்டதையும், கேட்டதையும் பற்றி சான்று பகர்வதோடு  எப்பொழுதும்  கடவுளின் வார்த்தையைப் பேசினார். கடவுளின் வார்த்தையைக் கடைப்பிடிப்போர்  ஆன்மீக விடுதலை அடைவர் என்பது திண்ணம்.  ‘உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்’ (யோவான் 8:32) என்பது இயேசுவின் உறுதியான படிப்பினை. 

நாம் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாட வேண்டும் (கொலோ 3:1) என்று புனித பவுல் அடிகளும் வலியுறுத்துகிறார். ஆனால், மேலுலகைச்  சார்ந்தவற்றை நாடுவதற்கு நமக்குத் துணிவு தாழ்ச்சியும் தேவை. கோழி குப்பையைக் கிளறி புழு பூச்சிகளைத் தின்றுகொண்டு  ஒரு சிறு வட்டத்துக்குள்ளே அதன் காலத்தைக் கழிப்பதுபோல் நமது வாழ்வு மண்ணுலகைச் சார்ந்ததாக இருப்பது கோழைத்தனம். 

நம்மில் உயிரோட்டமான வாழ்வை அளித்திருப்பவர் தூய ஆவியார். அவர் நம்மில் இருந்துகொண்டு செயலாற்றும்போது, நாம் மாறுபட்ட வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை ஆய்ந்துணர வேண்டும். நாம் உலகம் சார்ந்த வாழ்க்கைக்கான கோழைகள் அல்ல. 

இறைவேண்டல்.

‘நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன்’ என்றுரைத்த ஆண்டவரே, நான் உலகில் வாழ்ந்தாலும் உமக்குரிய வாழ்வுக்கு விண்ணைச் சார்ந்தவனாக வாழத் துணிவைத் தந்தருள்வீராக. ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452