ஒன்றிணைந்த பயணம் ஆயர்களின் அதிகாரத்தைக் குறைப்பதில்லை: கர்தினால் மரியோ கிரெச் | FABC | Veritas Tamil

ஒன்றிணைந்த பயணம் ஆயர்களின் அதிகாரத்தைக் குறைப்பதில்லை; மாறாக, செவிமடுத்தல், பகுத்தறிதல் மற்றும் ஒன்றிப்பின் வழியாக அவர்களது மேய்ப்புப் பணியை இன்னும் உண்மையுடன் நிறைவேற்ற அழைக்கிறது என்று, ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் மரியோ கிரெச் அவர்கள், ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) 12ஆவது நிறைவிறுதிப் பேரவையில் பங்கேற்ற ஆயர்களிடம் தெரிவித்தார்.

ஜூலை 24 அன்று ஹோட்டல் முலியாவின் வாண்டா அரங்கில், "ஆயர் மாமன்றத்தின் செயல்படுத்தலுக்கான வழிமுறைகள்" என்ற தலைப்பில் உரையாற்றிய கர்தினால் கிரெச் அவர்கள், திருஅவையின் ஒன்றிணைந்த பயணம், ஆலோசனை மற்றும் அனைவரின் பங்கேற்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் ஆயர்களின் பங்கைக் குறைத்துவிடுமோ என்ற சிலரின் அச்சங்களுக்கு பதிலளித்தார்.

ஆனால், ஒன்றிணைந்த பயணம் ஆயர்களின் பணியை பலவீனப்படுத்துவதில்லை; மாறாக, அதனை மேலும் வலுப்படுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார். "ஆயர் இல்லாமல் திருஅவை இல்லை; அதேபோல், இறைமக்கள் இல்லாமல் ஆயரும் இல்லை" என்று கர்தினால் கிரெச் அவர்கள் கூறியபோது, அவரது உரையில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கருத்தாக அது அமைந்தது.

உரோமையில் இடம்பெற்ற ஆயர் மாமன்றம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, திருஅவை தற்போது அதன் செயல்படுத்தல் கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில், உலகத் திருஅவையில் சிலர், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினரின் விரிவான பங்கேற்பு, ஆயர்களின் தனித்துவமான பொறுப்பை மங்கச் செய்யுமோ அல்லது அவர்களது அதிகாரத்தைக் குறைத்துவிடுமோ என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

இந்தக் கருத்தை நிராகரித்த கர்தினால் கிரெச் அவர்கள், ஒன்றிணைந்த பயணம் என்பது நாடாளுமன்ற முறையோ அல்லது திருஅவையின் அதிகாரத்தை மறுபகிர்வு செய்யும் செயல்முறையோ அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

"உள்ளூர் திருஅவையின் மேய்ப்பராக ஆயரே தொடர்ந்து இருக்கிறார்" என்று அவர் வலியுறுத்தினார். அதேவேளையில், இறைமக்களின் குரலுக்கு கவனமாகச் செவிமடுத்து, தூய ஆவியாரின் செயல்பாட்டைப் பகுத்தறியும் வழியாக, மேலும் நற்செய்தி சார்ந்த மேய்ப்புப் பணியை மேற்கொள்ள ஒன்றிணைந்த பயணம் ஆயர்களை அழைக்கிறது என்றும் அவர் விளக்கினார்.

கர்தினால் கிரெச் அவர்களின் கருத்துப்படி, செவிமடுத்தல் என்பது அதிகாரத்தை விட்டுக்கொடுப்பது அல்ல; மாறாக, அது ஆயர் தலைமையின் இயல்பான அங்கமாகும்.

ஒரு ஆயர், தமக்கு அதிகாரம் இல்லாததால் செவிமடுப்பதில்லை; மாறாக, இறைமக்களிடையே தூய ஆவியார் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து அறிந்துகொள்வதற்காகவே அவர் செவிமடுக்கிறார் என்று அவர் கூறினார்.

திருஅவை உண்மையை கருத்துக் கணிப்புகள் அல்லது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிப்பதில்லை என்றும், மாறாக, திருமுழுக்குப் பெற்ற இறைமக்களிடையே செயல்படும் விசுவாசத்தின் உள்ளுணர்வு (Sensus Fidei) எனப்படும் தூய ஆவியின் அருள்கொடையை முதலில் செவிமடுத்து, அதன் பின்னரே கற்பித்தல், வழிநடத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதல் ஆகிய தங்களது பொறுப்புகளை ஆயர்கள் நிறைவேற்ற அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

"உள்ளூர் திருஅவையின் மேய்ப்பராக ஆயரே தொடர்கிறார்" என்று மீண்டும் வலியுறுத்திய கர்தினால் கிரெச் அவர்கள், ஒன்றிணைந்த பயணம் ஆயர் தலைமையின் இயல்பை மாற்றுவதில்லை; மாறாக, அதன் பாணியை மாற்றுகிறது என்றார்.

வெறும் நிர்வாகிகளாக அல்லாமல், இறைமக்களின் அனுபவங்களையும் குரல்களையும் ஒன்றிணைத்து, திருவிவிலியம் மற்றும் திருஅவையின் மரபின் ஒளியில் செபத்துடன் அவற்றைப் பகுத்தறிந்து, உலகளாவிய திருஅவையுடன் ஒன்றிப்பில் இருந்து மேய்ப்புப் பணியை முன்னெடுக்க ஆயர்கள் அழைக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பல்வேறு சமயங்கள் மற்றும் கலாச்சாரங்கள் நிறைந்த சமூகங்களில் சிறுபான்மை கத்தோலிக்கத் திருஅவைகளுக்குத் தலைமையேற்று வரும் ஆசிய ஆயர்களுக்கு, இந்தச் செய்தி சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இத்தகைய சூழல்களில், நற்செய்தியில் உறுதியாக நிலைத்திருக்கும்போதே, மக்களுடன் இணைந்து நடப்பது, நம்பிக்கையை வளர்ப்பது மற்றும் ஒன்றிப்பை உருவாக்குவது ஆகியவை மேய்ப்புப் பணியின் இன்றியமையாத அம்சங்களாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, நல்ல மேய்ப்பரான கிறிஸ்துவின் முன்மாதிரியில் வேரூன்றியதாக ஆயர் பணியை மேலும் வலுப்படுத்துவதே ஒன்றிணைந்த பயணத்தின் நோக்கம் என்றும், தமது மக்களுடன் இணைந்து நடந்து, அவர்களுக்குச் செவிமடுத்து, உண்மையின் பாதையில் வழிநடத்திய கிறிஸ்துவைப் போலவே ஆயர்களும் செயல்பட அழைக்கப்படுகிறார்கள் என்றும் கர்தினால் மரியோ கிரெச் அவர்கள் வலியுறுத்தினார்.

Tamil Survey Popup Image