கடவுளே வழிகாட்டுவார்! | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection

கிறிஸ்து பிறப்பு காலம் 
திருக்காட்சி திருவிழா 
I: எசா:  60: 1-6
II: திபா: 72: 1-2. 7-8. 10-11. 12-13
III: எபே: 3: 2-3, 5-6
IV: மத்:  2: 1-12

 

இன்று திருஅவையோடு இணைந்து நாம் திருகாட்சி திருவிழாவைக் கொண்டாடுகிறோம். இந்த பெருவிழா நமக்கு பல நல்ல ஆழமான நம்பிக்கையூட்டும் சிந்தனைகளைத் தருவதாய் உள்ளது. அதில் இன்று நாம் "கடவுளே வழிகாட்டுவார் " என்ற மையக்கருத்தை சிந்திக்கலாம் என விழைகிறேன். 

கடவுள் வழிகாட்டுவார். எதற்கு?  அவரை சென்று  அடைவதற்கு.கிறிஸ்தவர்களாகிய நமக்கு அடிப்படை இலக்கு என்வெனில் கடவுளை அடைவது. ஆங்கிலத்தில் "To reach God" என்போம்.கடவுளை நோக்கி நாம் ஒரு அடி எடுத்துவைத்தால் அவர் நம்மை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார். ஆகவே அவரை நாட முற்படுவோம் என நாம் பல முறை கேட்டிருக்கிறோம். இன்று நாம் கொண்டாடும் விழா இதனை எண்பிப்பதாக இருக்கின்றது. 

கிழக்கு திசை ஞானிகள் காலக் குறிகளை கணித்தவர்களாக மெசியா பிறந்திருப்பதை உணர்ந்து அவரைத் தேடி அவரைக் கண்டு வணங்க தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். இப்போது போல அக்காலத்தில் பயணங்கள் எளிதல்ல. நாம் ஆழ்ந்து யோசித்தால் பயணத்திற்கு அவர்கள் எத்தனை நாட்கள் எடுத்திருப்பார்கள் , எவ்வளவு தயாரிப்புகள் செய்திருப்பார்கள் எனத் தெரியாது. ஆனால் ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஒரு தாகம், அவரை வணங்கி காணிக்கை செலுத்த வேண்டும் என்ற ஆசை அவர்களை உந்தித் தள்ளியது. அவர்கள் எடுத்த முன்னெடுப்பை பூர்த்தியாக்க கடவுள் வழிகாட்டுகிறார்.

எவ்வாறு வழிகாட்டினார் என்பது நாம் அறிந்ததே. ஆம். விண்மினை அவர்கள் முன்பே அனுப்பி தன் மகனைச் சென்றடைந்து வணங்க வழிகாட்டினார். அவர்களும் சென்றார்கள்.  கண்டார்கள். வணங்கினார்கள். பரிசளித்தார்கள். அவர்கள் பாதுகாப்பாக தங்களிடம் சேர்வதற்கும் ஏரோதிடமிருந்து அவர்களைக் காப்பதற்கும் கனவின் வழியாக கடவுள் மீண்டும் வழிகாட்டினார். 

அன்புக்குரியவர்களே! இறைவனின் தரிசனத்தை நம் வாழ்வில் பெற வேண்டுமென்று நாம் விரும்புகிறோம் அல்லவா. அப்படியெனில்  அவரை நோக்கி நாம் ஒரு  அடி எடுத்து வைத்தால் போதும் , அவரைச் சென்றடையும் வழியை அவரே நமக்குக் காட்டிவிடுவார். இன்று நாம் அவரைச் சென்று அடைய இறைவார்த்தையும்,இறைவேண்டல் வழிமுறைகளும், அருட்சாதனங்களும், ஆன்மீக முதிர்ச்சிபெற்ற மூத்தோரின் வழி காட்டுதல்களும் கடவுளால் நமக்கு  வழிகாட்ட அனுப்பப்பட்ட விண்மின்களே.  இதை நாம் உணர்ந்து நம் ஆழ்மனத்திற்குள் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டால் இறைவனின் தரிசனத்தைப் பெற முடியும். கடவுள் வழி காட்டுவார். அதைக் கண்டுணர நாம் தயாரா?

 இறைவேண்டல் 
எல்லாம் வல்ல இறைவா! உமது வழிகாட்டுதலைப் பின்பற்றி உம்மை கண்டடைந்து வணங்க எமக்கருள்புரியும். ஆமென்.

 

அருட்பணி.குழந்தைஇயேசு பாபு
இணைப்பங்கு பணியாளர் 
தூய ஆவியார் ஆலயம்
இராசசிங்க மங்களம் பங்கு 
சிவகங்கை மறைமாவட்டம்