பாவத்திற்கு விலகி

பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை - எபிரேயர் 12-4. போராட்டங்களில் கடினமான போராட்டம் பாவத்திற்கு எதிரான போராட்டம்தான் அது. ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் இருப்பது இல்லை. நம் இறுதி மூச்சுவரையிலும் நாம் பாவத்தோடு போராடிக் கொண்டேயிருக்க வேண்டி வரும்.

நாம் சிறிய பாவம் தானே என்று எண்ணுகிறோம். நாம் பாவம் செய்வது இரகசியமாக இருக்கும். இது யாருக்கும் தெரியாது என நினைக்கிறோம், அந்த நேர சந்தோஷத்தை அனுபவித்தால் என்ன என்று எண்ணுகிறோம். ஆரம்பத்தில் அது சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தந்தாலும் ஒருநாள் நம் பெயரை கெடுத்து, அவமானப்படுத்தி நம்மை கொன்று விடும். 

தாவீது அரசன் தன் சிறிய சந்தோசத்துக்காக தன் போர்வீரனாகிய உரியாவின் மனைவியுடன்  பாவம் செய்கிறார். ஆதாம் ஏவாள் கடவுளின் வார்த்தைக்கு கீழ் படியாமல் பழத்தை உண்டதால்தான் ஆண்டவரின் தோட்டத்தை விட்டு வெளியேற்றப் படுகிறார்கள். நாம்  ஒருநாளும் பாவத்துக்கு இடம் கொடுக்காது  இருப்போம். யோசேப்பு போல பாவத்துக்கு விலகி ஓடுவோம். பாவத்தை நாம் பிடித்து கொண்டால் அது நம்  வீட்டு வாசலில் படுத்து கொள்ளும். எனவே பாவத்துக்கு விலகி வாழ்வோம். 

ஜெபம்: ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்.ஆண்டவரே பாவம் செய்து உம்மை விட்டு தூர போன நேரங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் என்றும் உம் பிள்ளைகளாக பாவத்துக்கு விலகி வாழ  தூய ஆவியின் துணையை எங்களுக்கு தாரும்.  எங்களோடு இரும் ஆண்டவரே ஆமென்.