மீட்பைத் தேடு

ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார் - 1 கொரிந்தியர்  15:22,45. ஆண்டவர் நீ  உண்ணக்கூடாது என்று  விலக்கிய மரத்திலிருந்து விலக்கிய கனியை உண்டதால் தான் பாவம் உலகுக்கு வந்தது.  அந்த பாவம் ஆதாம் ஏவாளை கடந்து, அவர்கள் பிள்ளைகளை கடந்து, அவர்கள் சந்ததிகளை கடந்து,  நாடுகளை கடந்து, காலங்களை கடந்து, எல்லா மனிதர் மேலும் வந்தது. அந்த பாவத்தை ஒருவராலும்  வெல்ல முடியவில்லை. ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது.

இயேசு மட்டுமே பாவத்தை வென்று, சாவை வென்று வெற்றி சிறந்தவர் ஆனார். ஆதாமின் கீழ்படியாமையால் பாவமும் சாபமும் உண்டானது. இரண்டாவது ஆதாமாகிய இயேசுவின் கீழ்படிதலால் நமக்கு மீட்பு கிடைத்தது. ஏவாளின் ஆசையினால் பாவம் வந்தது. அன்னை மரியாளின் மனத்தாழ்மையால் நமக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைத்தது.

நாம் பாவத்திலிருந்து மீட்பு பெற பாவ அறிக்கை செய்வோம். பரிசுத்த வாழ்வு வாழ்வோம். இறை வார்த்தைகளை கேட்போம். ஏற்ற வாழ்வு வாழ்வோம். ஊக்கத்துடன் ஜெபிப்போம். உன்னதரை பற்றி கொள்வோம் 

ஜெபம்: அன்பின் ஆண்டவரே, எங்கள்  பாவங்களை மன்னியும்.  எங்கள் தேவைகளில் எங்களுக்கு உதவியாக வாரும்.உன்னதமான உமது  சிறகுகளின் கீழ் எங்களை மறைத்து கொள்ளும். அன்னை மரியே, ஆரோக்கிய தாயே, நாங்கள் மீண்டும் பாவத்தில் விழாதபடி பாதுகாத்துக் கொள்ளும். ஆமென்.