லட்சியம்... /எழுத்து அருட்சகோதரி ஜோஸ்பின் பிரைடா / veritas Tamil

நாளை உதிக்கும் சூரியனின் கதிர்கள் நமதாகட்டும்;;.


அமெரிக்க ஜனாதிபதியாகப் புகழுடன் விளங்கினார் ஜான் எஃப் கென்னடி. அவர் வெள்ளை மாளிகையில் தன்னைக் காண வந்திருக்கும் பார்வையாளர்களுடன் நாள் தோறும் சில நிமிடங்கள் செலவிடுவார். தம்மைப் பார்க்க வந்திருந்த இளைஞர்கள், பள்ளி மாணவர்களுடன் சிறிது நேரம் பேசுவார். பார்வையாளர்களில் பளிச்சென்ற புன்னகையுடன் இருந்த மாணவன் கன்னத்தை தட்டி ‘உன் எதிர்கால லட்சியம் என்ன?’ என்றார் கென்னடி. பளீரென்று ‘இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் நாளை நான் இருக்க வேண்டும்’. இது தான் என் லட்சியம் என்றான் அந்தச் சிறுவன். விழிகளை உயர்த்தி விட்டு ‘குட்’ என்று வாழ்த்திவிட்டு கென்னடி நகர்ந்தார். அச்சிறுவன் வேறு யாருமல்ல….அவர் தான் பில்கிளிண்டன். அவர் எண்ணம் வெறும் ஆசையோ கற்பனையோ அல்ல, தீர்க்கமான தீர்மானம். அதனால் அது நடந்து விட்டது.

நமது வாழ்விலும் பல்வேறு விதமான கனவுகள் ஆசைகள் லட்சியங்கள் உண்டு, அதை அடையும் வரை நாம் போராட வேண்டும். ஓர் லட்சியத்தை அடைய வேண்டுமென்றால், அதை குறித்த தெளிவுகள் இருக்க வேண்டும், அப்போது தான் நாம் அதை அடைய முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். நம்பிக்கை என்ற நார் மட்டுமிருந்தால் உதிர்ந்த பூக்களும் வந்து ஒட்டிக் கொள்ளும் என்கிற சொல்லாடலும் உண்டு. 

நமது வாழ்வின் லட்சியத்தை வேறு நபர் தீர்மானிக்கக் கூடாது. ஆலோசனைகளை பெறவேண்டுமே தவிர அடுத்தவரின் லட்சியம் நமது லட்சியமாகக் கூடாது. அவ்வாறு இருந்தால் நாம், நாமாக இருக்க முடியாது. அதுவே தீராத சுமையாக மாறும்;. எனவே நமது வாழ்வின் லட்சியம் அல்லது குறிக்கோள் என்னவென்று கண்டறிவோம். இந்த உலகம் நமக்கென படைக்கப்பட்ட ஓடுதளம். நம் லட்சியத்தை அடையும் வரை ஓடிக்கொண்டே இருப்போம். 

ஓவ்வொரு நாளும,; இப்போது நான் இருக்கும் நிலை என்ன? நான் அடுத்த நிலைக்கு கடந்து  செல்ல என்ன செய்யலாம்? என்ற கேள்விகளை கேட்கும்போது தான் நமது லட்சியத்தை அடைவதற்கான கதவுகள் திறந்திருக்கும். நமது பிறப்பின் லட்சியத்தை கண்டறிவோம். கற்குவியல் மத்தியில் தலை உயர்த்தி சிரிக்கும் புது தளிர்போல், அடிமனதில் உறங்கிக் கொண்டிருக்கும்  நமது லட்சியத்தை கண்டு பிடிப்போம், நாளை உதிக்கும் சூரியனின் கதிர்கள் நமதாகட்டும்;;. 

எழுத்து
அருட்சகோதரி ஜோஸ்பின் பிரைடா