அரசியல்வாதி கூறிய நகைச்சுவைக்கு மன்னிப்பு கோர மலேசியத் திருஅவை அழைப்பு | Veritas Tamil | Veritas Tamil

மலேசியாவில், கத்தோலிக்க அருட்தந்தை மற்றும் அருட்சகோதரி குறித்து ஐக்கிய மலாய்த் தேசிய அமைப்பின் (UMNO) அரசியல்வாதி ஒருவர் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கூறிய நகைச்சுவைக்கு, உடனடியாகவும் நிபந்தனையற்ற முறையிலும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று மலேசியத் திருஅவைத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சரவாக் திருஅவைகளின் கூட்டமைப்பின் (ACS) தலைவரான ஆங்கிலிக்கன் ஆயர் டத்தோக் டானல்ட் ஜூட், புனித மறைநூல்களையும் சமயத் தலைவர்களையும் அரசியல் நகைச்சுவைக்குப் பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மலாய்த் தேசிய அமைப்பும், சம்பந்தப்பட்ட அரசியல்வாதியும் தங்களது கருத்துகளைப் பகிரங்கமாகத் திரும்பப் பெற்று, கிறிஸ்தவ சமூகத்திடம் மன்னிப்பு கோருவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்று உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

புனித மறைநூல்களும், அனைத்து சமயங்களின் அர்ப்பணிக்கப்பட்ட சமயப் பிரமுகர்களும் மலிவான அரசியல் நகைச்சுவைக்கான பொருள்கள் அல்ல. தற்காலிக அரசியல் ஆதாயத்திற்காக அவர்களைப் பயன்படுத்தக்கூடாது” என்று ஆயர் டானல்ட் கூறினார்.

எந்தவொரு சமயத்தையும் இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளைத் தவிர்க்குமாறு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும் அவர் கேட்டுக்கொண்டார். மதப் பிரிவினையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, மலேசியாவுக்கு “அமைதி, குணப்படுத்துதல், புரிந்துணர்வு மற்றும் உண்மையான ஒற்றுமை” தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, இந்த விவகாரத்துக்கு கிறிஸ்தவர்கள் வெறுப்புடனோ தீய எண்ணத்துடனோ பதிலளிக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். “வெறுப்புடனோ தீய எண்ணத்துடனோ பதிலளிக்காமல், அன்புடனும் உண்மையுடனும் பதிலளிப்போம்” என்று அவர் கூறினார்.

குச்சிங் பேராயர் சைமன் போ, இச்சம்பவம் தமக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மலேசிய மக்களில் பலராலும் உயர்வாக மதிக்கப்படும் அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளைப் புண்படுத்தும் வகையில் அந்த நகைச்சுவை அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

பல்வேறு இனங்களையும் சமயங்களையும் கொண்ட மலேசியாவில், அனைத்து மதத்தினரும் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மரியாதையுடன் வாழ முயற்சித்து வருகின்றனர். இந்த நட்புணர்வின் அடிப்படையில் பார்க்கும்போது, இதுபோன்ற நகைச்சுவைகளுக்கு மலேசியாவின் எந்தவொரு அதிகாரப்பூர்வக் கூட்டத்திலும் இடமில்லை” என்று பேராயர் சைமன் போ தெரிவித்தார்.

மேலும், பல தலைமுறைகளாக அருட்சகோதரிகள் மருத்துவமனைகள், நலவாழ்வு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில், பல்வேறு இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த மலேசிய மக்களுக்குச் செய்துவரும் அர்ப்பணிப்பான பணியையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பல குடிமக்கள் இச்சம்பவத்தால் புண்பட்டிருப்பதும், சட்ட நடவடிக்கை, பகிரங்க மன்னிப்பு, கூறப்பட்ட நகைச்சுவையைத் திரும்பப் பெறுதல் மற்றும் பொதுமக்களின் சமய உணர்வுகளைப் புண்படுத்தியதற்கான உரிய நிவாரணம் ஆகியவற்றைக் கோருவதும் முற்றிலும் புரிந்துகொள்ளத்தக்கது” என்று அவர் கூறினார்.

சரவாக் மாநில சட்டமன்ற உறுப்பினரும் சுவிசேஷக் கிறிஸ்தவத் தலைவருமான பாரு பியான், குரு மற்றும் அருட்சகோதரி குறித்து பாலியல் சார்ந்த குறிப்புகளைக் கொண்ட நகைச்சுவை ஒன்றை தேசிய அரசியல் மாநாட்டில் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தார்.

தேசிய அளவிலான பார்வையாளர்கள் முன்னிலையில் பேசும் அரசியல் தலைவர்களுக்கு, மாண்பு, மரியாதை மற்றும் பொதுநெறிமுறைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது” என்று பாரு பியான் தெரிவித்தார்.

மேலும், அந்த நகைச்சுவை திருப்பாடல் 129-ஐ அடிப்படையாகக் கொண்டது என்ற கூற்றையும் அவர் மறுத்தார். அந்த விவிலியப் பகுதியில் குரு மற்றும் அருட்சகோதரி குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

திருப்பாடல் 129-ல், அதற்கு கூறப்பட்ட பொருளில் எதுவுமே இல்லை. அந்தத் திருப்பாடல் துன்பங்களின் மத்தியில் நிலைத்திருப்பதையும், ஒடுக்குமுறையின் போது இறைவன் தம் மக்களைப் பாதுகாப்பதையும் பற்றிப் பேசுகிறது” என்று அவர் கூறினார்.

சமய மறைநூல்கள் ஒருபோதும் தரக்குறைவான அரசியல் நகைச்சுவைக்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படக்கூடாது” என்றும் பாரு பியான் வலியுறுத்தினார்.

செப்டம்பர் 16ஆம் தேதி மலேசியா தினம் கொண்டாடப்பட்ட நிலையில், திருஅவைத் தலைவர்கள் இக்கருத்துகளை வெளியிட்டுள்ளனர். 1963ஆம் ஆண்டு மலேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் நாளாக மலேசியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பல்வேறு இனங்களையும் சமயங்களையும் கொண்ட மலேசியா, மலாய் தீபகற்பப் பகுதிகளுடனும் போர்னியோ தீவில் அமைந்துள்ள சபா மற்றும் சரவாக் மாநிலங்களுடனும் அமைந்துள்ளது.

 

Tamil Survey Popup Image