நற்செய்தி அறிவிப்பில் புதிய வழிகளைக் கண்டறியுங்கள் - பிலார் அருட்சகோதரிகளுக்கு ஆயர் அழைப்பு | Veritas Tamil
மேற்கு இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள பிலார் அன்னை மரியாவின் மறைப்பணி அருள்சகோதரிகள் தங்கள் 38ஆம் நிறுவன ஆண்டு விழாவை செப்டம்பர் 8ஆம் தேதி கொண்டாடினர். இவ்விழாவையொட்டி, தங்களது மறைப்பணி அர்ப்பணிப்பைப் புதுப்பித்துக்கொள்வதுடன், நற்செய்தியை அறிவிப்பதற்கான புதிய வழிமுறைகளைத் தேடுமாறும் அருள்சகோதரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
போர்ட் பிளேர் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் ஆயர் அலெக்ஸ் டயஸ், SFX, லௌட்டோலிமில் அமைந்துள்ள பிலார் அருள்சகோதரிகளின் தலைமையகத்தில் நடைபெற்ற நற்கருணைக் கொண்டாட்டத்திற்குத் தலைமை தாங்கினார். அருள்தந்தையர்கள் கால்டினோ மான்டெய்ரோ, SFX, மற்றும் அந்தோணி சில்வா, SFX, ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.
தமது மறையுரையில் ஆயர் டயஸ், நிறுவன ஆண்டு விழா என்பது வெறுமனே கொண்டாட்டத்திற்கான நாள் அல்ல என்றும், தங்களது அழைப்பையும் மறைப்பணியையும் இறைவேண்டலுடன் சிந்தித்து, அர்ப்பணிப்பை புதுப்பித்துக்கொள்ளும் நேரம் என்றும் நினைவூட்டினார்.
“பிலார் அன்னை மரியாவின் மறைப்பணி அருள்சகோதரிகளாக உங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் கடந்துவிட்டன. காலம் உண்மையிலேயே வேகமாகச் செல்கிறது. அனைத்தும் இறைத்திட்டமே” என்று கூறிய அவர், தங்களது பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனின் பராமரிப்பை உணருமாறு அழைப்பு விடுத்தார்.
நிறுவன ஆண்டு விழாவை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது என்று எச்சரித்த ஆயர் டயஸ் அவர்கள், ஒவ்வொருவரும் தங்களது மறைப்பணி அழைப்பை ஆழமாகச் சுயஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நற்செய்தி அறிவிப்பும், புதிய நற்செய்தி அறிவிப்பும் அருள்சகோதரிகளின் அழைத்தல் பணியின் மையமாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் மறைப்பணிப் பார்வையை நினைவுகூர்ந்த அவர், நற்செய்தியை “புதிய ஆர்வத்துடனும், புதிய வழிமுறைகளுடனும், புதிய வெளிப்பாடுகளுடனும்” அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
“நீங்கள் புதிய வழிகளை முயற்சி செய்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பிய ஆயர் டயஸ் அவர்கள், கிறிஸ்துவையும் நற்செய்தியையும் மக்களிடம் கொண்டு செல்வதற்கு தங்களது மறைப்பணி அணுகுமுறைகளை மறுபரிசீலனை செய்து, புதிய வழிகளைத் தேடுமாறு அருள்சகோதரிகளுக்கு சவால் விடுத்தார்.
ஒவ்வொருவரின் அழைத்தலுக்கும் இறைவன் கொண்டுள்ள திட்டத்தைச் சுட்டிக்காட்டிய அவர், இறைவன் தங்களை எங்கு வழிநடத்துகிறார் என்பதை மனிதர்களால் எப்போதும் முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது என்றார். புனித அன்னை தெரசாவை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், லொரேட்டோ சபையில் பல ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், புதிய மறைப்பணி அழைப்பைப் பெற்று, இறுதியில் பிறரன்பின் பணியாளர்கள் சபையை நிறுவிய நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
“எதிர்காலம் யாருக்குத் தெரியும்?” என்று கேள்வி எழுப்பிய ஆயர், தங்கள் வாழ்க்கையிலும் தங்கள் சபையின் பயணத்திலும் இறைத்திட்டத்திற்கு திறந்த மனதுடன் இருக்குமாறு அருள்சகோதரிகளை ஊக்குவித்தார்.
இந்த விழாவில் கோவாவின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அருள்சகோதரிகள் பங்கேற்றனர். விழாவிற்கு முன்னதாக நான்கு மணிநேர நற்கருணை ஆராதனை நடைபெற்றது.
வரவேற்புரையாற்றிய சபை தலைமை அன்னை அருள்சகோதரி லூயிசா பெர்னாண்டஸ் MSP அவர்கள், நிறுவன நாள் என்பது “வெறும் ஒரு தேதி அல்ல; இறைவனின் நம்பிக்கைக்குரிய செயல்களை நினைவுகூரும் நாள்” என்று கூறினார்.
சபையை நிறுவுவதற்கு உதவிய அருள்தந்தை கால்டினோ மான்டெய்ரோ மற்றும் தொடக்க ஆண்டுகளில் ஆதரவளித்த அருள்தந்தை அந்தோணி சில்வா ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், சபையின் முன்னோடிகளான அருள்சகோதரிகள் ஜோனிட்டா மிராண்டா, தியோலிந்தா பெர்னாண்டஸ், நினா லோப்ஸ் மற்றும் ஜூலி அரூஜா ஆகியோரின் துணிச்சலையும் தியாகங்களையும் அவர் நினைவுகூர்ந்தார்.
கோவா மற்றும் டாமன் பேராயர் கர்தினால் பிலிப் நேரி ஃபெர்ராவ், பிலார் சபை, அருள்சகோதரிகளின் குடும்பங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவிற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள சிறிய மாநிலமான கோவா, நீண்ட கத்தோலிக்க மரபைக் கொண்டதுடன், தெற்காசியாவில் கிறிஸ்தவ மறைப்பணி வரலாற்றிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இச்சூழலில் தங்களது நற்செய்தி அறிவிப்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிலார் அருள்சகோதரிகள், மாறிவரும் சமூக மற்றும் இறைப்பணி சூழல்களுக்கு ஏற்ப தங்களது அழைத்தலையும் பணியையும் முன்னெடுத்து வருகின்றனர்.
மகிழ்ச்சி, சகோதரத்துவம் மற்றும் நன்றியுணர்வு நிறைந்த சூழலில், அருள்சகோதரிகளும் விழாவில் பங்கேற்றவர்களும் இணைந்து உணவைப் பகிர்ந்துகொண்டதுடன், நிறுவன ஆண்டு விழா நிறைவடைந்தது.
